Published : 27 Feb 2014 01:41 PM
Last Updated : 27 Feb 2014 01:41 PM

வார ராசி பலன் | 27-2-14 முதல் 05-03-14 வரை - (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷம்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆறாமிடத்திலும் புதன் 10இலும், சூரியன் 11இலும் உலவுவது சிறப்பாகும். குரு 3இல் வக்கிரமாக இருப்பதால் நலம்புரிவார். வார முன்பகுதியில் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். பொருள்வரவு அதிகமாகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றிகள் குவியும். பொறியியல்துறை லாபம் தரும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்குறையும். வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். 1ஆம் தேதி முதல் செவ்வாயும் சனியும் வக்கிரம் பெறுவதால் மனத்தில் துணிவு பிறக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 27, 28, மார்ச் 5.

திசைகள்: தெற்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு, வெண்மை.

எண்கள்: 1, 5, 9.

பரிகாரம்: ராகுவுக்காக துர்கையையும், கேதுவுக்காக விநாயகரையும் வழிபடவும். கெட்டவர்களின் தொடர்பை விட்டு விலகவும்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 2இல் குருவும், 6இல் சனி, ராகு ஆகியோரும், 9 இல் சுக்கிரனும் 10 இல் சூரியனும் உலவுவது சிறப்பாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். தான, தர்மப்பணிகளில் நாட்டம் அதிகமாகும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும்.

வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். முக்கியஸ்தர்களும், மேலதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 1 -ஆம் தேதி முதல் செவ்வாயும் சனியும் வக்கிரம் பெறுவதால் அலைச்சல் அதிகமாகும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். தாய் நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 27, 28, மார்ச் 3.

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், நீலம், வெண்மை.

எண்கள்: 1, 3, 4, 5, 6, 8.

பரிகாரம்: கணபதி ஹோமம் செய்வது நல்லது. கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.

மிதுனம்

கோசாரப்படி புதன், சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். மாண வர்கள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள்.

குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு வாரப்பின்பகுதியில் லாபம் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள் தங்கள் மதிப்பு உயரப் பெறுவார்கள். 1-ஆம் தேதி முதல் செவ்வாயும், சனியும் வக்கிர நிலை பெறுவதால் வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 3, 5.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: பச்சை, இளநீலம், வெண்மை, மெரூன்.

எண்கள்: 5, 6, 7.

பரிகாரம்: முருகனையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும். திருக்கருகாவூர் ஸ்ரீகர்ப்ப ரட்சகாம்பிகையையும் திருச்சி தாயுமானவரையும் வழிபடவும்.

கடகம்

3இல் செவ்வாயும், 10இல் கேதுவும் 12இல் வக்கிர குருவும் உலவுவதால் மனத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயலில் வேகம் கூடும். பொருளாதார நிலை சீராகவே இருந்துவரும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள்

வீர, தீர, சாகசங்களை ஆற்றுவார்கள். இதர கிரகங்களின் நிலை சிறப்பாக இல்லாததால் அலைச்சல் அதிகமாகும். பெற்றோர் நலனில் அக்கறை தேவைப்படும். பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. 1ஆம் தேதி முதல் செவ்வாயும், சனியும் வக்கிரம் பெறுவதால் குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனம் அவசியம். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. உடல்நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 27, மார்ச் 3, 5.

திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 7, 9.

பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும். ஆஞ்சநேயருக்கும் துர்கைக்கும் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபடவும்.

சிம்மம்

உங்கள் ராசிக்கு 3இல் சனியும், ராகுவும், 6இல் புதனும், 11இல் குருவும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். எழுத்தாளர் களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும் மாணவர்களது நிலை உயரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும்.

நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவுவார்கள். 2இல் செவ்வாயும் 6இல் சுக்கிரனும் 7இல் சூரியனும் இருப்பதால், குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். விட்டுக்கொடுத்துப் பழகிவருவது நல்லது. 1ஆம் தேதி முதல் செவ்வாயும் சனியும் வக்கிர நிலை பெறுவதால் குடும்ப நலனில் அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 27, மார்ச் 5.

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், நீலம், சிவப்பு.

எண்கள்: 3, 4, 5, 8.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவவும்.

கன்னி

5இல் உள்ள சுக்கிரனும் 6இல் சஞ்சரிக்கும் சூரியனும் 10இல் உலவும் வக்கிர குருவும் நலம் புரியும் நிலையில் உலவுகிறார்கள். மனத்தில் உற்சாகம் பெருகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். கலைஞர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.

மகப்பேறு பாக்கியம் சிலருக்கு இப்போது கிட்டும். மக்களால் பாக்கியம் உண்டாகும். மந்திர உபதேசம் கிடைக்கும். ஜன்ம ராசியில் செவ்வாயும், 2இல் சனி, ராகு ஆகியோரும், 8இல் கேதுவும் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடவும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். 1ஆம் தேதி முதல் செவ்வாயும் சனியும் வக்கிர நிலை பெறுவதால் உடல்நலனில் கவனம் அதிகம் தேவைப்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 27, 28, மார்ச் 3.

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, இளநீலம், பச்சை.

எண்கள்: 1, 3, 5, 6.

பரிகாரம்: செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களை வழிபடவும். விநாயகருக்கு அர்ச்சனை செய்யவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x