Published : 30 Mar 2025 06:58 PM
Last Updated : 30 Mar 2025 06:58 PM
தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவுக்காக நாளை மறுநாள் (ஏப்.1) நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து உத்திர பூஜை, மாதாந்திர பூஜை நடைபெற உள்ளதால் 18 நாட்கள் கோயில் தொடர்ச்சியாக திறக்கப்பட்டிருக்கும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு திருவிழாவுக்காக வரும் 2-ம் தேதி கொடியேற்றப்பட உள்ளது. இதற்காக நாளை மறுநாள்(ஏப்1) மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள்(ஏப்.2) காலை 9.30மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடி ஏற்றி விழாவை தொடங்கி வைக்கிறார். இத்திருவிழா வரும் 11-ம் தேதி வரை நடைபெறும்.
விழாநாட்களில் தினமும் வழக்கமான பூஜைகளுடன் மதியம் உற்சவபலி, இரவில் யானை மீது சுவாமி எழுந்தருளல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 10-ம் தேதி அத்தாழ பூஜைக்குப் பிறகு இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும். விழாவின் உச்சநிகழ்வாக 11-ம் தேதி காலை 7மணிக்கு உஷபூஜை முடிந்ததும் யானை மீது சுவாமி எழுந்தருள உள்ளார்.
பின்பு பம்பை நதியில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். தொடர்ந்து நதிக் கரையோரம் உள்ள கணபதி கோயில் அருகே பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அன்று மாலை சுவாமி சன்னிதானம் அடைந்ததும் அடுத்த இரண்டு நாட்கள் உத்திர திருவிழா நடைபெறும். தொடர்ந்து சித்திரை மாத மாதாந்திர பூஜை தொடங்குவதால் ஏப்.18-ம் தேதி வரை வழிபாடுகள் நடைபெறும்.
இதன்படி ஏப்.1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சபரிமலையில் தொடர்ச்சியாக நடைதிறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற உள்ளது. கடந்த மாதம் முதல் 18-ம்படி ஏறியதும் பக்தர்கள் நேரடியாக சிறப்பு பாதை வழியே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த தடவையும் அதேமுறை பின்பற்றப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment