Published : 02 Nov 2024 01:26 PM
Last Updated : 02 Nov 2024 01:26 PM

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று காலை தொடங்கியது. கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தல்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து சஷ்டி விரதத்தை தொடங்கினர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கியமானது கந்தசஷ்டி விழாவாகும். சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்த புராணச் சிறப்பு வாய்ந்த தலம் என்பதால் திருச்செந்தூரில் நடைபெறும் கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா இன்று (2-ம் தேதி) தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானை அம்மனுடன் யாகசாலையில் எழுந்தருளினார். யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்மன் பிரதான கும்பங்கள் மற்றும் சிவன், பார்வதி, பரிவார தெய்வ கும்பங்கள் என பல்வேறு கும்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. யாகசாலையில், விக்னேசுவர பூஜை, புண்ணியாக வாஜனம், பூத சுத்தி, கும்ப பூஜை, ஹோம பூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

யாகசாலையில் பூர்ணாகுதி தீபாராதனை, அதனை தொடர்ந்து சுவாமி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு உச்சிகால தீபாராதனை ஆனதும் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானைக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் மேளவாத்தியங்களுடன், சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.

பின்னர் மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் திருவாடுதுறை ஆதின கந்த சஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருகிறார். அங்கு சுவாமிக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அலங்காரத்துடன் சுவாமி தங்க தேரில் எழுந்தருளி கிரி பிரகாரம் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

கந்தசஷ்டி திருவிழா தொடக்கத்தை முன்னிட்டு அதிகாலை முதலே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி பச்சை நிற ஆடை அணிந்து கோயில் கிரி பிரகாரத்தில் அங்க பிரதட்சணம் செய்து விரதத்தை தொடங்கினர். கோயில் வளாகத்தில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டகைகளில் பக்தர்கள் குழுக்களாக அமர்ந்து சுவாமியின் பஜனை பாடல்கள் பாடி விரதமிருந்து வருகின்றனர்.

சூரசம்ஹாரம்: விழாவின் 2-ம் நாளான நாளை முதல் (3-ம் தேதி) விழாவின் 5-ம் நாளான 6-ம் தேதி வரை தினமும் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.7-ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

நவ.8-ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. வரும் நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூரின் விடுதிகள், சத்திரங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் இரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x