Published : 14 Oct 2024 03:18 PM
Last Updated : 14 Oct 2024 03:18 PM

வத்தலகுண்டு அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோயில் திருவிழா: கொட்டும் மழையிலும் நள்ளிரவில் நடந்த கறிவிருந்து

வத்தலகுண்டு அருகே தருமத்துப்பட்டியில் நடந்த கோயில் திருவிழாவில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது திறந்தவெளியில் அமர்ந்து கறிவிருந்தில் பங்கேற்ற ஆண்கள்.

வத்தலகுண்டு: வத்தலகுண்டு அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோட்டை கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவில் ஆடுகள் பலியிடப்பட்டு கொட்டும் மழையிலும் திறந்தவெளியில் விடிய விடிய கறி விருந்து நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே தருமத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது கோட்டை கருப்பண்ணசாமி கோயில். இங்கு ஆண்டு தோறும் ஆயுதபூஜையை அடுத்து திருவிழா நடைபெறுவது வழக்கம். ஒரு நாள் இரவு மட்டும் இந்த திருவிழா நடைபெறும். அதன்படி நேற்று இரவு கருப்பண்ணசாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோயில் முதன்மைக்காரர்கள் உள்ளிட்ட ஆண்கள் ஒன்று கூடி கோட்டை கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்து படைத்தனர்.

தொடர்ந்து கோட்டை கருப்பண்ணசாமி வேட்டைக்குச் சென்று ஆகாய பூஜை கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து பச்சரிசி அன்னம் சமைக்கப்பட்டு உருண்டையாக உருட்டப்பட்டு பிரசாதம் தயார் செய்யப்பட்டது. தொடர்ந்து நேர்த்திக்கடனாக கருப்பண்ணசாமிக்கு விடப்பட்ட நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டது. கருப்பண்ணசாமிக்கு உணவுகள் படைக்கப்பட்டதை தொடர்ந்து ஆண்கள் மட்டும் பங்கேற்ற கறிவிருந்து கொட்டும் மழையில் நள்ளிரவில் நடைபெற்றது.

திறந்த வெளியில் நடந்த கறிவிருந்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆண்கள் தரையில் அமர்ந்து உணவருந்தினர். விடிய விடிய நடந்த கறிவிருந்து அதிகாலையில் முடிவடைந்தது. இந்த திருவிழாவில் வத்தலகுண்டு, உசிலம்பட்டி, விருவீடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்து கறிவிருந்தில் பங்கெடுத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x