Published : 07 Oct 2024 04:36 PM
Last Updated : 07 Oct 2024 04:36 PM

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு திருக்குடைகள் சமர்ப்பணம்: ஆர்.ஆர்.கோபால்ஜி வழங்கினார்

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, இந்து தர்மார்த்த சமிதி சார்பில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட திருக்குடைகள் ஏழுமலையான் கோயிலில் இன்று சமர்ப்பிக்கப்பட்டன.

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட வெண்பட்டு திருக்குடைகளை, இந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி, ஏழுமலையானுக்கு இன்று (அக்.7) சமர்ப்பித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவத்தின்போது தமிழகத்தில் இருந்து ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கும் மங்களப் பொருட்களில், சென்னையில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்களின் பிரார்த்தனையுடன் சமர்ப்பிக்கப்படும் வெண்பட்டு திருக்குடைகளும் ஒன்று. 250 ஆண்டுகளாக இந்த பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. இந்த திருக்குடைகள், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவையில், மலையப்ப சுவாமி வீதிஉலா வரும்போது சாற்றப்படுவது வழக்கம்.

200-வது ஆண்டு: அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்துக்காக இந்து தர்மார்த்த சமிதி சார்பில் 20-வது ஆண்டாக திருக்குடைகள் சமர்ப்பண ஊர்வலம், சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, சென்னை பூக்கடை சென்னகேசவ பெருமாள் கோயிலில் இருந்து கடந்த 2-ம் தேதி புறப்பட்டு, திருப்பதி திருச்சானுாரை நேற்று மாலை வந்தடைந்தது. அங்கு 2 வெண்பட்டு திருக்குடைகளை திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு இந்து தர்மார்த்த சமிதி சார்பில், ஆர்ஆர். கோபால்ஜி சமர்ப்பித்தார்.

திருமலையில் சமர்ப்பணம்: இதையடுத்து 9 வெண்பட்டு திருக்குடைகள் திருப்பதி திருமலையை இன்று காலை 9 மணிக்கு வந்தடைந்தன. திருமலையில் ஏழுமலையான் கோயில் கோபுர வாயில் அருகில், திருக்குடைகளுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, 9 வெண்பட்டு திருக்குடைகளைஆர்ஆர். கோபால்ஜி ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார். திருக்குடைகளை, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய சவுத்ரி மற்றும் இணை நிர்வாக அதிகாரி லோகநாதம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அதன்பிறகு 9 வெண்பட்டு திருக்குடைகளும் மேளதாளம் முழங்க திருமலை ஏழுமலையான் கோயில் மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ஏழுமலையான் திருக்கோயிலில் ஒப்படைக்கப்பட்டன. திருக்குடைகள் சமர்ப்பிக்கும் நிகழ்வில் இந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாகிகள் மற்றும் சென்னையை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

20 லட்சம் பக்தர்களின் வேண்டுதல்: திருக்குடைகள் சமர்ப்பணத்துக்கு பிறகு,செய்தியாளர்களிடம் ஆர்ஆர். கோபால்ஜி கூறியதாவது: “தமிழகத்துக்கும் திருவேங்கடத்துக்குமான தெய்வீக உறவு பாரம்பரியமானது. அதன் அடிப்படையில் தமிழகத்திலிருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து பெருமாளை தரிசித்துச் செல்கின்றனர். திருமலைக் கோயிலுக்கு தமிழக பக்தர்கள் சார்பில் ஆண்டுதோறும் இரண்டு பகுமானங்கள் அனுப்பபட்டு வந்தன.

முதலாவதாக ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுக்கும் மாலைகள், ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது கருடசேவைக்கென திருமலையில் சமர்ப்பிக்கப்படும். அடுத்தது சென்னையிலிருந்து திருக்குடைகள் எடுத்துவரப்பட்டு வேங்கடமுடையானுக்கு, கருட சேவைக்கு முதல் நாள் சமர்ப்பிக்கப்பட்டுவந்தது. பல்வேறு காரணங்களால் சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நின்றுபோன நிலையில், அந்த வைபவத்தை தொடர்ந்து நடத்திட இந்து தர்மார்த்த சமிதி உரிய முயற்சிகளை மேற்கொண்டு தேவஸ்தானத்தின் ஒப்புதலோடு இப்போது 20-வது ஆண்டாக திருப்பதி திருமலையில் 9 புதிய வெண்பட்டுக்குடைகள் பக்தியுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து திருப்பதி வரும் வழியெங்கும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் இந்த திருக்குடைகளை வேங்கடமுடையானே நேரில் எழுந்தருளியதாக கருதி தங்களின் வேண்டுதல்களை தெரிவித்து வழிபட்டனர். இந்த திருக்குடைகள் ஊர்வலத்தை இந்து தர்மார்த்த சமிதி தனது சொந்த செலவில் செய்கிறது. இதற்கென யாரிடமும் எவ்வித நன்கொடையே, நிதி வசூலோ செய்வதோ ஏற்றுக் கொள்வதோ இல்லை,” என்று அவர் கூறினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x