Published : 23 Sep 2024 05:51 AM
Last Updated : 23 Sep 2024 05:51 AM

காஞ்சி மஹா பெரியவரின் நூறாண்டு கால வாழ்க்கை வரலாறு - ‘தெய்வத்துள் தெய்வம்’ மேடை நாடகத்தின் 50-வது காட்சி

காஞ்சி மஹா பெரியவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய நாடகமான ‘தெய்வத்துள் தெய்வம்’ 50-வது காட்சி சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. | படம் : எஸ்.சத்தியசீலன் |

சென்னை: ‘தெய்வத்துள் தெய்வம்’ எனும் காஞ்சி மஹா பெரியவரின் நூறாண்டு கால வாழ்க்கை வரலாறு மேடை நாடகத்தின் 50-வது காட்சி சென்னையில் நேற்று அரங்கேறியது. உணர்வுப்பூர்வமான இந்த நாடகத்தை மக்கள் நெகிழ்வுடன் கண்டுகளித்தனர்.

சென்னை மியூசிக் அகாடமியில் 2017-ம் ஆண்டு அக்.4-ம் தேதி காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ‘தெய்வத்துள் தெய்வம்’ எனும் வரலாற்று நாடகத்தை ஆசி வழங்கி தொடங்கிவைத்தார். இந்த நாடகத்தை இளங்கோ குமணன் எழுதி இயக்கியுள்ளார். காஞ்சி மடத்தின் ஆஸ்தான வித்வான் மாண்டலின் யு.ராஜேஷ் இசையமைத்துள்ளார்.

இந்த நாடகம் கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளிலும், சிங்கப்பூரிலும் அரங்கேறியது. சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று 50-வது காட்சி நடைபெற்றது.

நாடகம் தொடங்குவதற்கு முன்பு காஞ்சிபுரத்தில் இருந்து காணொலி வாயிலாக காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளாசி வழங்கி பேசியதாவது: மாதா, பிதா, குரு, தெய்வம் என நால்வரையும் நாம் மதிக்கிறோம், கொண்டாடுகிறோம். அவர்கள் உபதேசத்தின்படி நடக்கிறோம். கலியுகத்திலே இந்து தர்மத்தை காப்பதற்கான அவதாரம்தான் சங்கராச்சாரியார்.

இறைவன் அனுக்கிரகத்தை பாமர மக்கள் முதல் பண்டிதர்கள் வரை அனைவரும் அடையும் வகையில் நல்வழி காட்டினார். அதுபோல வாழ்ந்தும் காட்டினார். கிராமந்தோறும் சென்று கோ பூஜை, கஜ பூஜை, உபன்யாசம், கோயில்களுக்கு விஜயம் என அனைத்து மக்களுக்கும் தெய்வீக மனத்தை அளித்தார்.

நமது தேசத்தின் கவுரவம், புனிதத் தன்மை, சனாதன தர்மத்தின் பெருமைகளை அமைதியான வழியில் உலக மக்களுக்கு கொண்டு சென்றார். ஆதிசங்கரர் பாதயாத்திரை மூலமாக செய்து காட்டியதுபோல தனது பாணியில் தர்மத்தின் பெருமைகளை எடுத்துரைத்தார்.

தற்போது நாட்டின் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், நமது பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, சாஸ்திரங்கள், புராணங்கள் இவற்றையெல்லாம் பாதுகாப்பதற்கு அமைப்பு ரீதியாக பக்தி உணர்வை நாம் உருவாக்க வேண்டும். இவ்வாறு ஸ்ரீவிஜயேந்திரர் அருளாசி வழங்கினார்.

இந்த நிகழ்வில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் சேஷசாயி, அனிதா சம்பத், ஆடிட்டர் குருமூர்த்தி, டிரம்ஸ் சிவமணி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x