Published : 21 Sep 2024 12:40 PM
Last Updated : 21 Sep 2024 12:40 PM

புரட்டாசி சனிக்கிழமை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்

அலைமோதும் பக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘தென் திருப்பதி' என அழைக்கபடும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவின் முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் தென் திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு 240 படிகளை கொண்ட திருவண்ணாமலையின் மீது நின்ற கோலத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் காட்சியளிக்கிறார். ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாணத்தை காண வந்த திருப்பதி சீனிவாச பெருமாள், இந்த மலையிலேயே தங்கியதாகவும், அதனால் இக்கோயில் தென் திருப்பதி என அழைக்கப்பட்டதாகவும் ஐதீகம்.

திருப்பதி திருமலைக்கு செல்லமுடியாத பக்தர்கள் திருவண்ணாமலை பெருமாளுக்கு அந்த நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு நடத்திவிட்டு செல்வர். இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் சனிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு மற்றும் கிரிவலம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் முதல் வார சனிக்கிழமையான இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஶ்ரீனிவாசப் பெருமளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காலை 10:30 மணிக்கு ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆண்டாள் கோயிலில் இருந்து புறப்பாடாகி திருவண்ணாமலைக்கு எழுந்தருளினார். அங்கு உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு கிரிவலம் நடைபெற உள்ளது. விருதுநகர் எஸ்பி-யான டி.கண்ணன் உத்தரப்பின்படி ஏடிஎஸ்பி-யான அசோகன் தலைமையில் டிஎஸ்பி-யான ராஜா உட்பட 800க்கும் மேற்பட்ட போலீஸார் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x