Last Updated : 02 Sep, 2024 10:47 AM

 

Published : 02 Sep 2024 10:47 AM
Last Updated : 02 Sep 2024 10:47 AM

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்: அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித்திருவிழாவில் திங்கட்கிழமை காலையில் அரோகரா கோஷம் விண்ணதிர தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களிலும், சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றதது. விழாவில் 7-ம் நாளில் சிவப்பு சார்த்தி கோலத்திலும், 8-ம் நாளில் பச்சை சார்த்தி கோலத்திலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செப்.2) காலை 6.30 மணிக்கு நடைபெற்றது.‌ இதனை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணிக்கு முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து 7.05 மணிக்கு நிலையம் சேர்ந்தது.

தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி- தெய்வானை எழுந்தருளிய பெரிய தேர், பின்னர் வள்ளி அம்மன் தனியாக எழுந்தருளிய தேர் புறப்பட்டு ரதவீதிகளை சுற்றி வலம் வந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x