Last Updated : 11 Jul, 2024 11:03 AM

 

Published : 11 Jul 2024 11:03 AM
Last Updated : 11 Jul 2024 11:03 AM

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தேரோட்டம் கோலாகலம்

தேரோட்டம்

கடலூர்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

பூலோக கைலாயம் என்று போற்றப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ கொடியேற்றம் கடந்த 3-ம் தேதி சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் சிவ கு.த.கு.கிருஷ்ணசாமி தீட்சிதர் கொடி ஏற்றினார். அதன் பிறகு, பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 4-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் சாமி வீதி உலாவும், 5-ம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்தில் சாமி வீதி உலாவும், 6-ம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் சாமி வீதி உலாவும், 7-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலாவும் (தெருவடைச்சான்), நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து 8-ம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் சாமி வீதி உலாவும், 9- ம் தேதி தங்க கைலாச வாகனத்தில் சாமிவீதி உலாவும், நேற்று தங்கரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று ( ஜூலை11) முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேர்த் திருவிழா நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு மேளதாளம் முழங்கிட வேத மந்திரங்கள், தேவாரம், திருவாசகம் ஓதிட கோயிலிலிருந்து ஸ்ரீநடராஜர், ஸ்ரீ சிவகாமசுந்திரி அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.

இதனைச் தொடர்ந்து சுமார் 8.30 மணி அளவில் சிவ, சிவா என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுந்தனர். தேருக்கு முன்னால் சிவனடியார்கள், தேவ விற்பன்னர்கள் வேத மந்திரங்கள், தேவாரம், திருவாசம் படியபடியே சென்றனர். பெண்கள் தேரோடும் நான்கு வீதிகளிலும் மாக்கோலமிட்டிருந்தனர். சிவ பக்தர்கள் சிவ வாத்தியங்களுடன் சிவ தாண்டவம் ஆடினர்.

தேர் கீழ வீதி நிலையில் இருந்து புறப்பட்டு கீழவீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதிகள் வழியாக சென்று இன்று (வியாழக்கிழமை) மாலையில் நிலையை அடையும். ஒவ்வொரு வீதியிலும் மண்டகப்படிதாரர்கள் படையல் செய்து வருகின்றனர். மதியம் மேல வீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் முகப்பில் பருவதராஜகுல மரபினர் ஸ்ரீநடராஜர், சிவகாமி அம்மாளுக்கு பட்டு சாத்தி படையல் செய்வர். இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீமன் நடராஜமூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறும்.

நாளை சூரிய உதயத்துக்கு முன்பு, அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீமன்நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும். அதன் பிறகு, காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலாவும் நடக்கும். அதன் பிறகு பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபை பிரவேசமும் நடைபெறும்.

ஜூலை 13-ம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலர் உ.வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலர் து.ந.சுந்தரதாண்டவ தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் ஏஎஸ்பி-யான ரகுபதி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபட்டுள்ளனர். தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அன்னதானம் செய்யப்பட்டது. தேர், தரிசன விழாவை முன்னிட்டு சிதம்பரத்தில் வெளிநாடு, வெளி மாநில, வெளி மாவட்ட, உள்ளூர் பக்தர்கள் என ஆயிரக்கனக்கான பக்தர்கள் சிதம்பரம் நகரில் குவிந்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x