Published : 01 Jul 2024 05:14 AM
Last Updated : 01 Jul 2024 05:14 AM

அமர்நாத் குகை கோயிலில் முதல் நாளில் 14,000 பக்தர்கள் பனிலிங்க தரிசனம்

ஜம்மு: காஷ்மீரின் அமர்நாத் குகை கோயிலில் முதல் நாளில் 14,000 பக்தர்கள் பனிலிங்கத்தை வழிபட்டனர்.

தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பால்டால் மற்றும் நுன்வான் அடிவார முகாம்களில் இருந்து கடந்த 29-ம் தேதி பக்தர்கள் புனித யாத்திரையை தொடங்கினர். முதல் நாளான அன்றுசுமார் 14,000 பக்தர்கள் அமர்நாத் குகை கோயில் பனிலிங்கத்தை வழிபட்டனர்.

இரண்டாம் நாளான நேற்று பால்டால் மற்றும் நுன்வான் அடிவாரமுகாம்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரையை தொடங்கினர்.

இரு வழித்தடங்களிலும் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநில காவல் துறையை சேர்ந்த 13 படைகள், மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 11 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 8 குழுக்கள், சிஆர்பிஎப் படைகள், 635 மத்திய படை குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளன. முக்கியசந்திப்பு, இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில்பால்டால், நுன்வான் அடிவாரமுகாம்களில் இரு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் தலா 100 படுக்கைகள் உள்ளன. இந்த ஆண்டு இதுவரை 3.5 லட்சம் பேர் அமர்நாத்புனித யாத்திரைக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை புனித யாத்திரை நடைபெற உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்திய கலாச்சாரத்தை அமர்நாத் புனித யாத்திரை பிரதிபலிக்கிறது. இந்த புனித யாத்திரையில் பங்கேற்று இருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். அவர்களின் புனித யாத்திரை இனிமையாக அமைய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது. இவ்வாறு அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அதிகாரிகள் கூறியதாவது: அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்புக்காக 300 கி.மீ. தொலைவு கொண்ட ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை முழுவதும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. புனித யாத்திரை நடைபெறும் இரு வழித்தடங்களில் சிஏபிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பக்தர்களுக்கு சிறப்பு ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அந்த அட்டையின் மூலம் பக்தர்களின் இருப்பிடத்தை துல்லியமாக அறிய முடியும். ஒவ்வொருபக்தருக்கும் தலா ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு எடுக்கப்பட்டு இருக்கிறது.

புனித யாத்திரை வழித்தடங்களில் தொலைத்தொடர்பு வசதி மேம்படுத்தப்பட்டு உள்ளது. 7,000 தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர். முக்கிய இடங்களில் 125 சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இரு வழித்தடங்களில் ஹெலிகாப்டர் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடினமான மலைப் பகுதி என்பதால் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர், 13 வயதுக்கு உட்பட்ட சிறார், கர்ப்பிணிகள் புனித யாத்திரை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x