Published : 14 May 2024 04:16 AM
Last Updated : 14 May 2024 04:16 AM

குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் தேரோட்டம்: உப்பு, மிளகு தூவி நேர்த்திக்கடன்

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

குடியாத்தம்: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ததுடன் தேர் மீது உப்பு, மிளகு தூவி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

வேலூர் மாவட்டம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ம் தேதி வெகு சிறப்பாக நடைபெறும். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான சிரசு திருவிழா இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, கெங்கை யம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் கெங்கையம்மனுக்கு சிறப்புபூஜை களும், அதைத் தொடர்ந்து கெங்கை யம்மன் உற்சவம் அலங்கரிக்கப்பட்டு தேரில் நிறுத்தப்பட்டது.

பின்னர், கெங்கையம்மன் கோயிலில் இருந்து தேர் புறப்பட்டது. தரணம்பேட்டை, நடுப்பேட்டை வழியாக சென்ற தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் உப்பு, மிளகு உள்ளிட்டவற்றை தேர் மீது துவி நேர்த்திகடன் செலுத்தினர். மேலும், ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

சிரசு திருவிழா: குடியாத்தம் நடுப்பேட்டை முத்தி யாலம்மன் கோயிலில் இருந்து இன்று அதிகாலை புறப்படும் அம்மன் சிரசு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று இன்று காலை 9 மணிக்குள் கெங்கையம்மன் கோயிலுக்கு வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு கோயில் மண்டபத்தில் உள்ள சண்டளச்சி உடலில் அம்மன் சிரசு பொருத்தப்பட்டு கண் திறக்கப்படும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்குப் பிறகு மாலையில் மீண்டும் அம்மன் சிரசு எடுக்கப்பட்டு மீண்டும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

சிரசு திருவிழாவின் நிறைவாக வாண வேடிக்கை நடைபெறும். குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு எஸ்.பி., மணி வண்ணன் தலைமையில் 1,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x