Published : 12 May 2024 07:34 AM
Last Updated : 12 May 2024 07:34 AM

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

சென்னை: வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. மே 19-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

வடபழனியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 நாட்கள் பிரம்மோற்சவ விழாவெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், 12-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு மூஷிக வாகன புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நாளை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் துவஜாரோஹணம் எனும் கொடியேற்ற வைபவம் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து, இரவு 7 மணிக்கு மங்களகிரி விமானத்தில் வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. 14-ம்தேதி காலை 7 மணிக்கு சூரிய பிரபை, இரவு 7 மணிக்கு சந்திர பிரபை புறப்பாடும், 15-ம் தேதி இரவு 7 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர் வீதி உலாவும் நடக்கிறது.

மே 16-ம் தேதி நாக வாகனத்தில் சுப்பிரமணியர் அருள்பாலிக்கிறார். 17-ம் தேதி இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடும், 18-ம் தேதி இரவு 7 மணிக்கு யானை புறப்பாடும் நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 19-ம் தேதி காலை நடைபெறுகிறது. காலை 7 முதல் 9 மணிக்குள் பக்தர்களால் தேர் வடம்பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து, இரவு ஒய்யாளி உற்சவமும், 20-ம் தேதி இரவு 7 மணிக்கு குதிரை வாகன புறப்பாடும் நடைபெறுகிறது.

21-ம் தேதி இரவு 7 மணிக்கு ஆண்டவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகமான 22-ம் தேதிகாலை 9 மணிக்கு வள்ளி தெய்வயானை சமேத சண்முகர் வீதி உலாவும், காலை 10 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து, மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில்வாகனத்தில் புறப்பாடுநடக்கிறது. இரவு 9 மணிக்கு சுப்பிரமணியர் வீதி உலா நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, துவஜ அவரோஹணம் எனும் கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவ நாட்களில் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தினமும் காலை 7 மணிக்கு மங்களகிரி விமான புறப்பாடு நடைபெறும்.

மே 23-ம் தேதி இரவு விசேஷ புஷ்பப் பல்லக்கு புறப்பாடு சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. அதன்பின்னர், வைகாசி விசாக பிரம்மோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் 24-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை தினமும் மாலைநடைபெறுகிறது. இதில் பரதநாட்டியம், சொற்பொழிவு, இன்னிசைக் கச்சேரி, வீணை கச்சேரி, இசைச் சொற்பொழிவு ஆகியவை நடைபெற உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x