Published : 17 Mar 2024 05:48 AM
Last Updated : 17 Mar 2024 05:48 AM

பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: 20 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு

பழநி முருகன் கோயில் வளாகம். (கோப்பு படம்)

பழநி: பழநியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன்மாநாட்டுக்கு சிறப்பு பணிகளை மேற்கொள்ள 20 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்த, கடந்த பிப். 27-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்நிலை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. ஜூன் அல்லதுஜூலை மாதம் இந்த மாநாடு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சமயப் பெரியோர், ஆன்மிக அன்பர்கள், முருக பக்தர்கள் கலந்து கொள்ளஉள்ளனர். எனவே, விழா ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அறநிலையத் துறை அலுவலர்கள், ஆன்மிகப் பெரியோர்களை இணைத்து குழுக்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, 20 பேரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுஅமைத்து ஆணை பிறப்பிக்குமாறு, அறநிலையத் துறை ஆணையர் கேட்டுக் கொண்டார். அதன்படி, 20 பேரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து, அரசு ஆணை பிறப்பித்தது.

குழுவின் தலைவராக அறநிலையத் துறை அமைச்சர், துணைத் தலைவராக துறைச் செயலர், உறுப்பினர்களாக அறநிலையத் துறை சிறப்பு பணி அலுவலர், ஆணையர், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்), திருவண்ணாமலை ஆதீனம், தவத்திரு குன்றக்குடி பொன்னம் பல அடிகளார், பேரூர் ஆதீனம் திருக்கயிலாய பரம்பரை திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் தவத் திரு குமரகுருபர சுவாமிகள், தவத்திரு மயிலம்பொம்மர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், முதுமுனைவர் மு.வெ.சத்தியவேல் முருகனார், ஆன்மிகப் பேச்சாளர்கள் சுகி.சிவம், தேச.மங்கையர்க்கரசி, பேச்சாளர் ந.ராமசுப்பிரமணியன், கோவை தரணிபதி ராஜ்குமார் மறறும் அறநிலையத் துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், பழநி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சந்திரமோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x