Published : 04 Mar 2024 06:10 AM
Last Updated : 04 Mar 2024 06:10 AM

சென்னை மயிலாப்பூர் ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் அன்னக்கூட திருப்பாவாடை உற்சவம்: பக்தர்கள் தரிசனம்

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் அன்னக்கூட திருப்பாவாடை மஹோத்ஸவம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருமாளுக்கு சாதம், நெய், சர்க்கரை பொங்கல், கதம்ப குழம்பு உள்ளிட்டவை நைவேத்தியம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் அன்னக்கூட திருப்பாவாடை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரில் சுமார் 350 ஆண்டுகள் பழமையான ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானம் உள்ளது. ஸ்ரீவேதாந்த தேசிகருடன், ஸ்ரீஹயக்ரீவரும் அருள்பாலித்து வந்தார்.

கடந்த 1924-ம் ஆண்டு ஸ்ரீனிவாசப் பெருமாள் - அலர்மேல்மங்கை தாயார் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் ஸ்ரீனிவாசப் பெருமாள் சன்னதி, ‘இந்து குழுமம்’ சார்பில் கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. ராமர், லட்சுமி நரசிம்மர், ராமானுஜர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வார் ஆச்சாரியர்கள், கருடன், அனுமன் சன்னதிகளும் இக்கோயிலில் உள்ளன.

இந்த தேவஸ்தானத்தில் அன்னக்கூட திருப்பாவாடை உற்சவம் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தில் பல்வேறு லீலைகள் மூலம் கொடியவர்களை பெருமாள் அழித்ததை கொண்டாடும் நிகழ்வு கோவிந்த பட்டாபிஷேகமாக நடத்தப்படும் நிலையில், கோவர்த்தனகிரி மலைக்கு மக்கள் படையல் வைத்து வழிபாடு நடத்தியதை குறிக்கும் வகையில் திருப்பாவாடை உற்சவம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் அன்னக்கூட திருப்பாவாடை உற்சவம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. தேவஸ்தானத்தின் வாகனமண்டபத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள், அலர்மேல்மங்கை தாயார், வேதாந்த தேசிகர், நித்திய நாச்சியார், ஸ்ரீதேவி நாச்சியார் நேற்று காலை எழுந்தருளினர்.

அங்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர், ஸ்ரீகிருஷ்ணன் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பகல் 12 மணி அளவில் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. 12.30 மணி அளவில் சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், கதம்ப குழம்பு, லட்டு மற்றும் பல்வேறு வகை பட்சணங்களுடன் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இரவு 7 மணிக்குபெருமாள், நாச்சியார், வேதாந்ததேசிகர் நான்கு மாட வீதி புறப்பாடு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாளை பிரதிஷ்டை செய்து 100 ஆண்டுகள் ஆகின்றன.

இதை முன்னிட்டு மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 22-ம் தேதி வரை வேதபாராயணம், உபன்யாசம், இசை கச்சேரிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் வேதாந்த தேசிகர் கைங்கர்ய அறக்கட்டளை சார்பில்நடத்தப்பட்ட இந்த உற்சவத்தில் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தின் அறங்காவலர்கள் ராகவன், அனந்த பத்மநாபன், முகுந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x