Published : 17 Jan 2024 05:40 AM
Last Updated : 17 Jan 2024 05:40 AM
புரி: பல ஆண்டுகளாக புரி ஜெகந் நாதர் கோயிலைச் சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய சுற்றுவட்டப் பாதை அமைக் கப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் பயன்பாட்டுக்கு, ஜன. 17-ம் தேதி (இன்று) ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைக்கிறார்.
இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஒடிசா மாநிலம் புரிகடற்கரை நகரத்தில் ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் அமைந்துள்ளது. இது 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் ஆகும். கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசா மாநில முதல்வராக நவீன் பட்நாயக் முதன்முதலில் பதவியேற்ற நாள் முதல், மாநில வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டில் ரூ.4,224.22 கோடி மதிப்பீட்டில் ஸ்ரீ மந்திர் பரிக்ரமா திட்டம் உள்ளிட்ட 37-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீ மந்திர் பரிக்ரமா திட்டம் என்பது, ஜெகந்நாதர் கோயிலின் எல்லைச் சுவரான மேகந்தா பச்சேரியை ஒட்டிய 75 மீட்டர் பகுதியை மறுமேம்பாடு செய்வதாகும். ரூ.800 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் 7 மீட்டர் பசுமைத் தாங்கல் மண்டபம், 10 மீட்டர் சுற்றுவட்டப் பாதை (ஆண்டு முழுவதும் பக்தர்கள் மட்டுமே வலம் வரும் பாதை) ஆகியவை அடங்கும். சுற்றுப்பாதை இருபுறமும் மரங் களால் சூழப்பட்டிருக்கும். பரிக்ரமா திட்டம் தவிர வாகன நிறுத்துமிடம், ஸ்ரீ சேது பாலம், புனித யாத்திரை மையங்கள், யாத்ரீகர்களுக்கான புதிய சாலை, கழிப்பறை, மின் திட்டங்கள், தியான மண்டபம், வணிக இடம் உள்ளிட்ட 36 திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஜெகந்நாதர் கோயிலுக்கு அருகில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள், கோயிலின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாக எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதன்பிறகு பரிக்ரமா திட்டம், தொடங்கப்பட்டு தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவடைந்ததைத் தொடந்து, சுற்றுவட்டப் பாதை பக்தர்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகிறது. இதை ஜன. 17-ம் தேதி (இன்று) முதல்வர் நவீன் பட்நாயக் திறந்துவைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் பிரதீப் குமார் ஜெனா, மாவட்ட ஆட்சியர் சமர்த் வர்மாஉள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment