Published : 13 Oct 2023 04:12 AM
Last Updated : 13 Oct 2023 04:12 AM

புரட்டாசி பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் 1,300 பக்தர்கள் தரிசனம்

சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் கோயிலில் புரட்டாசி பிரதோஷ வழிபாட்டுக்காக மலையேறி சென்ற பக்தர்கள்.

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி பிரதோஷத்தையொட்டி நேற்று 1,300-க்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதி சாப்டூர் வனச்சரகத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. சதுரகிரியில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மஹாளய அமாவாசை வழிபாடு அக்டோபர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

புரட்டாசி பிரதோஷம் மற்றும் மஹாளய அமாவாசைக்காக அக்டோபர் 12 முதல் 15-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி சென்று வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நேற்று பிரதோஷத்தையொட்டி தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து 1,300-க்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தர மூர்த்தி, பிலாவடி கருப்பசாமி மற்றும் 18 சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணியளவில் சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 21 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு பிரதோஷ பூஜை நடைபெற்றது. சதுரகிரி மலையில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x