Published : 11 Sep 2023 08:06 AM
Last Updated : 11 Sep 2023 08:06 AM

பிள்ளையார்பட்டி கோயிலில் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா தொடங்கியது: செப்.18-ம் தேதி தேரோட்டம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நடைபெற்ற சதுர்த்தி விழா கொடியேற்றத்தின்போது கொடிக்கு நடத்தப்பட்ட தீபாராதனை.

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி, நேற்று சதுர்த்தி விழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி, மூஞ்சுறு வாகன கொடி படத்துடன் சண்டிகேசுவரர் கோயிலை வலம் வந்தார். தொடர்ந்து, கொடிமரத்துக்கு சந்தனம், மஞ்சள், வாசனைத் திரவியங்கள், பால், புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.

பின்னர், சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலையில் சுவாமி வெள்ளிக் கேடகத்திலும், இரவில் சிம்மம், பூத, கமல, ரிஷப, மயில், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

செப்.15-ம் தேதி மாலை 6 மணிக்கு கஜமுக சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. 18-ம் தேதி காலை கற்பக விநாயகர் தேரில் எழுந்தருளல், மாலையில் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

தொடர்ந்து, வரும் 19-ம் தேதி காலை கோயில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரியும், பிற்பகல் 2 மணிக்கு மூலவருக்கு முக்குறுணி மோதக (கொழுக்கட்டை) படையல் நிகழ்ச்சியும், இரவில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடைபெறுகின்றன. விழா நாட்களில் ஆன்மிகச் சொற்பொழிவுகள், இசை, கலை நிகழ்ச்சிகள் நடக்கும். விழா ஏற்பாடுகளைகோயில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x