நடராஜர் கோயிலில் நேற்று நடந்த ஆனித் திருமஞ்சன  கொடியேற்றம்.
நடராஜர் கோயிலில் நேற்று நடந்த ஆனித் திருமஞ்சன கொடியேற்றம்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன கொடியேற்றம்

Published on

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நடராஜரை தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த 2 விழாக்களின் போது மட்டும் மூலவர் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்மாள் சுவாமிகள் வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவதுண்டு. இதனால் இந்த இரு விழாக்களும் தனி சிறப்பு பெறுகிறது.

இந்த ஆண்டுக்கான ஆனித்திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றம் நேற்று காலை நடைபெற்றது. கோயில் கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர் மேள தாளம் முழங்கிட, வேத மந்திரங்கள் ஓதிட, தேவாரம், திருவாசம் பாடி கொயேற்றினார்.

தொடர்ந்து 10 நாட்கள் உற்சவம் நடைபெறும். இதில் தினசரிகாலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெறும். விழாவின் 5-வது நாளான வரும்21-ம் தேதி தெருவடைச்சான் உற்சவம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வரும் 25-ம் தேதி, ஆனித் திருமஞ்சன தரிசன விழா 26-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், சித் சபை பிரவேசமும் நடக்கிறது. 28-ம் தேதி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in