Published : 06 Aug 2023 06:10 PM
Last Updated : 06 Aug 2023 06:10 PM

வீரப்பன் நல்லவரா? கெட்டவரா? - சமூக வலைதளங்களில் சூடுபிடிக்கும் விவாதம்

சென்னை: நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை பேசும் ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ என்னும் ஆவணத் தொடர் வெளியானதையடுத்து வீரப்பன் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளன.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 4-ம் தேதி வெளியான ஆவணத் தொடர் ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்'. செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தத் தொடர் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் கிடைக்கிறது.

36 ஆண்டுகாலம் தமிழகம் மற்றும் கர்நாடக வனப்பகுதிகளில் மறைந்து வாழ்ந்த வீரப்பன் இரு மாநில அரசுகளுக்கும் சிம்மசொப்பனாக திகழ்ந்தவர். பல்லாயிரம் டன் கணக்கிலான சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியதால் சந்தனக் கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்பட்டார். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது முதல் போலீசாரால் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது வரை நடந்த சம்பவங்களை வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, போலீஸ் அதிகாரிகள், எல்லையோர கிராம மக்கள் ஆகியோரின் பார்வையில் இத்தொடர் பதிவு செய்கிறது. ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ ஆவணத் தொடர் விமர்சனத்தை இங்கே படிக்கலாம் ----> ஓடிடி திரை அலசல் | ‘The Hunt for Veerappan’ - நாயகனா? வில்லனா? வீரப்பன் பற்றிய விறுவிறுப்பான ஆவணம்

இந்த நிலையில் இத்தொடர் வெளியானது முதல் சமூக வலைதளங்களில் வீரப்பன் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. வீரப்பனுக்கு ஆதரவாக ஒரு சாராரும், அவருக்கு எதிராக இன்னொரு சாராரும் தங்கள் வாதங்களை முன்வைத்து வருகின்றனர். “வீரப்பன் பயங்கரவாதியல்ல, அவர் ஒரு வனக்காவலர்” என்று ஒரு பிரிவினர் சமூக வலைதளங்களில் அவரை கொண்டாடி வருகின்றனர். அதற்கு எதிர்கருத்து கொண்டவர்கள், “தந்தங்களுக்காக ஆயிரக்கணக்கான யானைகளை கொன்று குவித்தவர்தான் வனக்காவலரா?” என்று விமர்சிக்கின்றனர். இதனால் #Veerappan என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் சமூக வலைதளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. வீரப்பன் ஆவணத்தொடர் தொடர்பான மீம்களும் வைரலாக பரவி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x