Published : 15 Mar 2016 10:44 AM
Last Updated : 15 Mar 2016 10:44 AM

உங்கள் குரல்: தொடர்பு எல்லையில் உள்ளதா ‘சேவை மையம்?’

முதல்வரால் சமீபத்தில் தொடங்கி வைக்கப் பட்ட, ‘1100’ இலவச சேவை மையத்தை தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராகவேந்திரன் ‘தி இந்து’ உங்கள் குரலில் கூறியதாவது:

நான் காஞ்சிபுரத்தில் இருந்து தினசரி பல்லாவரத்தில் உள்ள கல்லூரிக்கு வருகிறேன். தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் வருவதற்கு மின்சார ரயில்சேவை குறைவாக உள்ளது தொடர்பாக கோரிக்கையை தெரிவிக்க ‘1100’ ஐ அழைத்தேன். இரண்டு மூன்று முறை அழைத்தபோது முதலில் ‘பிஸியாக’ இருப்பதாகவும் அதன் பின் ‘தொடர்பு எல்லைக்கு வெளியில்’ இருப்பதாகவும் தகவல் வந்தது. அடுத்த முறை தொடர்பு கொண்ட போது இணைப்பு கிடைத்தது. அங்கிருந்தவர்களிடம் இது தொடர்பாக கேட்டேன். அவர்கள் தொழில்நுட்ப கோளாறு என தெரிவித்தனர்

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினரிடம் கேட்டபோது, ‘‘ தொலை பேசி இணைப்புகளில் சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்பட்டு, அவை உடனுக்குடன் சீரமைக்கப்படுகின்றன. அனைத்து இணைப்புகளும் தற்போது சரியாக இயங்குகின்றன’’ என்றார்.



புதிய தடத்தில் பஸ் மக்கள் எதிர்பார்ப்பு

செம்மஞ்சேரியில் இருந்து ராயப்பேட்டை வழியாக பிராட்வேக்கு மாநகர பஸ்கள் இயக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். செம்மஞ்சேரியில் இருந்து கிண்டிக்கு அதிகளவில் மாநகர பஸ்கள் தினமும் இயக்கப் படுகின்றன. ஆனால், அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை வழியாக பிராட்வேக்கு பஸ் வசதியே இல்லை.

எனவே, இந்த வழித்தடத்தில் மாநகர பஸ்கள் இயக்கினால், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பொதுமக்களின் பஸ் தேவை குறித்து மாநகர போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும். அதன்படி, சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் ஆய்வு செய்து பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.



மெட்ரோ ரயில் போல மின் ரயில்களிலும் இருக்கை

மெட்ரோ ரயில்களில் இருப்பது போல் மின்சார ரயில்களிலும் இருக்கை வசதி அமைத்தால் மக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வாசகர் ஆர்.பாண்டுரங்கன் ‘தி இந்து’வின் உங்கள் குரலில் கூறியிருப்பதாவது:

மின்சார ரயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக செங்கல்பட்டு, திருமால்பூர் போன்ற நீண்ட தூரம் செல்லும் மின்சார ரயில்களில் மக்கள் நிற்ககூட இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே, பயணிகள் அதிகளவில் தாராளமாக நின்று செல்லும் வகையில் மெட்ரோ ரயிலில் இருப்பது போல், மின்சார ரயில்களிலும் இருக்கை வசதி அமைக்க வேண்டும்.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘மெட்ரோ ரயில் பயணம் என்பது குறுகிய நேரத்தில் முடிந்து விடும். ஆனால், மின்சார ரயில்கள் சுமார் இரண்டரை மணிநேரம் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது. இருப்பினும், தாம்பரம் வரையில் செல்லும் மின்சார ரயில்களில் இருக்கை வசதியை மாற்றியமைத்து, பயணிகள் அதிகளவில் நிற்கும் வகையில் மாற்றியமைத்துள்ளோம். ஆனால், அனைத்து ரயில்களிலும் இதுபோல் அமைத்தால் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் கடுமையாக அவதிப்படுவார்கள்’’ என்றனர்.



கீழ்க்கட்டளை பல்லாவரம் வழித்தடத்தில் பாழடைந்த மாநகர பஸ்கள் இயக்கம்

கீழ்க்கட்டளையில் இருந்து பல்லாவரம் ரயில் நிலையம் இடையே பாழடைந்த மாநகர பஸ்கள் இயக்கப்படுவதாக ‘தி இந்து’ உங்கள் குரலில் பயணி புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வாசகர் எஸ்.இஸ்மாயில் ‘தி இந்து’ உங்கள் குரலில் கூறியிருப்பதாவது:

கீழ்க்கட்டளை - பல்லாவரம் ரயில் நிலை யம் செல்லும் வழித்தடத்தில் 3 மாநகர அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய் கின்றனர். இந்த பஸ்கள் முற்றிலும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இது பயணிகள் பாதுகாப்பில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பஸ் ஓட்டுநர்களிடமும், நடத்துநர்களிடம் கேட்டால், நாங்கள் என்ன செய்வது, அதிகாரிகளிடம் ஏற்கெனவே புகார் தெரிவித்து விட்டோம். ஆனால், பஸ்களை மாற்றாமல் இருக்கின்றனர் என்று சொல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினர். இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பயணிகள் புகார் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.



அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x