Published : 18 Mar 2016 11:44 AM
Last Updated : 18 Mar 2016 11:44 AM

உங்கள் குரல்: சீரமைக்கப்படாத சாலையால் மாசு

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள்:

சீரமைக்கப்படாத சாலையால் மாசு

அனகாபுத்தூர்- பல்லாவரம் சாலையில் சென்னை குடிநீர் வாரிய குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் பணி முடிந்த பகுதிகளில், விட்டு விட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் மண் சாலையாகவே உள்ளது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்லும்போது தூசு மண்டலமாக மாறி சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. எனவே குடிநீர் வாரிய பணிகளை விரைந்து முடித்து, சாலையை சீரமைக்க வேண்டும்.

ஆர்.ஹேமகுமார், அனகாபுத்தூர்.

சரியான நேரத்தில் இயக்கப்படாத பஸ்

ஆவடி- பெரியபாளையம் இடையே இயக்கப்படும் மாநகர பஸ்கள், கடந்த 3 மாதங்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்திலும் புகார் தெரிவித்திருக்கிறோம். இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களை சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.ஜி.கண்ணன், அத்தங்கிகாவனூர்.

ரயில் நிலையம் முன்பு வெளிச்சம் இல்லை

கொரட்டூர் ரயில் நிலையம் முன்பு, மின் விளக்குகள் அமைக்கப்படாததால், அங்கு இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து இரவில் வீடு திரும்பும் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் மின் விளக்குகள் இல்லாதது வேதனை. இதனால் பெண் கள், முதியோர் உள்ளிட்டோர் பெரிதும் அவதிக்குள்ளாகி றார்கள். எனவே அப்பகுதியில் மின் விளக்கு வசதியை ஏற்படுத்த வேண்டும்.

ஆர்.எஸ்.பழனி, கொரட்டூர்.

அதிக விலை பால் வாங்க நிர்ப்பந்தம்

எழும்பூர் ரயில் நிலையத்தில், 4-வது நடைமேடையில் உள்ள ஆவின் பால் விற்பனையகத்தில், சாதாரண பால் ரூ.7-க்கும், பாதாம் பால் ரூ.10-க்கும் விற்கப்படுகிறது. சாதாரண பால் கேட்டால் சில்லறை தட்டுப்பாடு எனக்கூறி, பாதாம் பாலை வாங்க ஆவின் ஊழியர்கள் நிர்ப்பந்திக்கின்றனர். எனவே அங்கு சாதாரண பால் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டி.விஜயசாரதி, திருவல்லிக்கேணி.

பெசன்ட் நகருக்கு பஸ் சேவை வேண்டும்

திருவேற்காடு- பெசன்ட்நகர் இடையே இருந்த பஸ் சேவை, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தற்போது இந்த வழித் தடத்தில் பல்வேறு குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உருவாகியுள்ளன. அதனால் அப்பகுதியில் வசிப்போருக்கு திருவேற்காடு- பெசன்ட்நகர் பஸ் சேவை பயனுள்ளதாக இருக்கும். எனவே அந்த சேவையை மீண்டும் தொடங்க மாநகர போக்குவரத்துக் கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்.ஜெயராமன், திருவேற்காடு.

ஆட்டோக்களை அனுமதிக்க கூடாது

பெரம்பூர் ரயில் நிலையத்தில் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நுழைய அனுமதியில்லை என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதனால் அவை நுழைவதில்லை. ஆட்டோக்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. இவற்றால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்கு ஆட்டோக்களையும் நுழைய அனுமதிக்கக் கூடாது.

வாசகர், பெரம்பூர்.

சேதமடைந்த பஸ் இயக்கம்

பொன்னேரி-செங்குன்றம் இடையே இயக்கப்படும் டிஎன் 01 என் 5230 என்ற பதிவு எண் கொண்ட அரசு பஸ்ஸில் இருக்கைகள் சேதமடைந்து கிடக்கிறது. அதனால் அதில் பயணிகள் அமர்ந்து பயணிக்க முடியவில்லை. கைப்பிடி கம்பிகளும் பயன்படுத்தும் நிலையில் இல்லை. இதனால் இதில் பயணம் செய்வோர் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே சேதமடைந்த இந்த பஸ்ஸுக்கு பதிலாக வேறு பஸ்ஸை இயக்க வேண்டும்.

ஏ.சரவணன், அரும்பாக்கம்.

ஒரே நேரத்தில் பொருட்கள் வழங்குவதில்லை

அயனாவரம் என்.எம்.கே. தெருவில் அமுதம் ரேஷன் கடை (கடை எண்.054) இயங்கி வருகிறது. இங்கு அரிசி தவிர மற்ற பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை. அதனால் மற்ற பொருட்களை வாங்க பலமுறை கடைக்கு செல்ல வேண்டியுள்ளது. பணிக்கு செல்வோருக்கு போதிய விடுமுறை கிடைக்காததால், ரேஷன் கடைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்க முடிவதில்லை. சில சமயங்களில் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை முதல் வாரம் மட்டுமே விநியோகிக்கின்றனர். எனவே, ரேஷன் கடையில் வழங்கப்படும் அனைத்து பொருட்களையும் ஒரே நேரத்தில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சி.எஸ்.செல்வம், அயனாவரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x