Published : 22 Dec 2015 11:27 AM
Last Updated : 22 Dec 2015 11:27 AM

உங்கள் குரல்: சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

மேற்கு சைதாப்பேட்டை சாரதிநகர் பகுதியில் கடந்த 20 நாட்களாக தெருவில் தேங்கியுள்ள கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக வாசகர்கள் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ‘தி இந்து’ உங்கள் குரலில் வாசகர்கள் கூறியதாவது: கனமழை பெய்த டிசம்பர் 1-ம் தேதிக்கு பிறகு எங்கள் பகுதியில் வெள்ள நீர் தேங்கியது. பாதாள சாக்கடை குழாய்களில் இருந்தும் கழிவுநீர் வெளியேறி, அங்கு துர்நாற்றம் வீசியது. தற்போது மழைநீர் வடிந்துவிட்ட நிலையிலும், கழிவுநீர் தொடர்ந்து வெளியேறி தெரு முழுவதும் ஓடுகிறது. அதில் மனிதக் கழிவுகளும் வருவதால் அப்பகுதி துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பல குடும்பங்கள் உறவினர் வீடுகளுக்கு சென்றுவிட்டன.

இது தொடர்பாக 139-வது வார்டு கவுன்சிலர் என்.கே.வட்சலா, அப்பகுதி குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய பொறியாளரை சந்தித்து பலமுறை புகார் தெரிவித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

இது தொடர்பாக குடிநீர் வாரியத்தின் 10-வது மண்டல பொறியாளர், 139-வது வார்டு பொறியாளர் ஆகியோரை மக்கள் தொடர்பு கொள்வதற்காக வழங்கப்பட்ட சியூஜி கைபேசி எண்களில் தொடர்புகொண்டபோது, அவை அணைத்து வைக்கப்பட்டிருந்தன.

வாரிய மேலாண் இயக்குநர் அலுவலகத்தில் தொடர்புகொண்டபோது, “உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியில் கழிவுநீர் வெளியேறும் பிரச்சினை தீர்க்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x