Published : 14 Oct 2015 07:56 AM
Last Updated : 14 Oct 2015 07:56 AM

டெல்லி பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தங்களை போக்க ஹெல்ப்லைன் வசதி அறிமுகம்

டெல்லி பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் மன அழுத்தங்களை போக்க ஹெல்ப்லைன் வசதியை பல்கலைக்கழக நிர்வாகம் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

டெல்லியில் உள்ள கல்வி நிலையங்களில் முக்கியமானது டெல்லி பல்கலைக்கழகம். இதன் கீழ் பல கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் பயிலும் மாணவ, மாணவியரில் பலர், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களாலும் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இதில் சிலர் தற்கொலை முயற்சி உள்ளிட்ட விபரீத முடிவுகளை எடுத்துவிடும் சூழலும் உள்ளது.

இதை தடுக்கும் பொருட்டு பல்கலைக்கழக நிர்வாகம் 1800 3000 7303 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் தொடர்பு கொள்ளும் மாணவ, மாணவியரின் பிரச்சினைகளை பொறுமையாக கேட்டு உளவியல் ரீதியாக ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 5 முதல் செயல்படத் தொடங்கியுள்ள இந்த ஹெல்ப்லைன் வசதிக்கு பெருத்த வரவேற்பும், பாராட்டும் கிடைத்து வருகிறது.

இது குறித்து `தி இந்து’விடம் டெல்லி பல்கலைக்கழகத்தின் பெண்கள் சங்கத் தலைவரான நீலாஞ்சனா சிங் கூறும்போது, “இந்த தொலைபேசி எண் செயல்படத் தொடங்கியதில் இருந்து அதன் மணிகள் ஓயாமல் ஒலித்து வருகின்றன. அழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்துக்கு ஆளானவர்களாக உள்ளனர்.

இவர்களின் பிரச்சினைக்கு எங்கள் உளவியல் நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனைகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஹெல்ப்லைனை, மாணவ, மாணவிகள் தங்கள் `லைஃப்லைன்’ ஆக பாவிக்கின்றனர்” என்றார்.

இந்த ஹெல்ப்லைனில் சொந்தப் பிரச்சினைகள் மட்டுமின்றி, கல்வி தொடர்பான தகவல்களும் கேட்கப்படுகின்றன. இதனால், 5 நிமிடம் முதல் அதிக நேரம் வரை நடைபெறும் உரையாடல்களுக்கு இடையே வேறு தொலைபேசி வந்தால், `காத்திருப்பு’ வசதியும் செய்யப்பட்டுள்ளது.

மாணவிகள் தங்கள் பிரச்சினை களை நேரடியாக தெரிவித்து உளவியல் ஆலோசனை பெறும் வசதி இங்கு ஏற்கெனவே நடை முறையில் உள்ளது. இந்நிலையில் தங்கள் பிரச்சினைகளை நேரடியாக சொல்லத் தயங்கும் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கும் சேர்த்து இந்த ஹெல்ப்லைன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஹெல்ப்லைன் வசதி யுடன் இமெயிலில் தொடர்பு கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரச்சினை களுக்கு தீர்வு கேட்டு இதன் இன்பாக்ஸிலும் மெயில்கள் குவிந்தபடி உள்ளன.

திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களில் மதியம் 3 மணி முதல் 5 மணிவரை மட்டும் இந்த ஹெல்ப்லைன் தற்போது செயல்படுகிறது. மற்ற நேரங்களில் அழைப்பவர்கள் தங்கள் தகவலை பதிவுசெய்யும் வசதி உள்ளது. பின்னர் இவர்கள் தொலைபேசியில் அழைக்கப்பட்டு, உரிய ஆலோ சனை வழங்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x