Published : 04 Aug 2015 11:31 AM
Last Updated : 04 Aug 2015 11:31 AM

வாகனங்களுக்கு ஆன்லைனில் வரி செலுத்த முடியவில்லை

சர்வர் பிரச்சினையால் வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் வசதி பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மற்ற நகரங்களைக் காட்டிலும், சென்னையில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் அதிகமானோர் ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். வாகனங்கள் பதிவு எண் வழங்குதல், ஆட்டோ உரிமையாளர்களின் பெயர் மாற்றம், உரிமம் புதுப்பித்தல் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன.

இதற்கிடையே, வாகன ஓட்டிகளின் வசதிக்காக வரியை ஆன்-லைன் மூலமாக செலுத்தும் வசதி கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாக போக்குவரத்து ஆணையரக இணையதளத்தில் வரி செலுத்தும் பிரிவு செயல்படாமல் சர்வர் பிரச்சினையால் பாதிக்கப்பட் டுள்ளது. இதனால், அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்த முடியாமல் வாகன உரிமையாளர்கள் அவதிப்படுகின்றனர்.

இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் வாசகர்கள் பலர் புகார் கூறியுள்ளனர்.

இணையதளத்தில் வரியை செலுத்தும் பிரிவு செயல்படா மல் இருப்பதால், அந்த வசதியை வாகன உரிமையாளர்களால் பயன் படுத்த முடியவில்லை. இதுபோன்ற நிலையில் இடைத்தரகர்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளது சர்வர் பிரச்சினை தீரும்வரை வரி செலுத் தாமல் இருந்தால் வாகனங்கள் சோதனையின்போது அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படு கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, “இணையதளம் மூலம் வரி செலுத்த அதிகமானவர்கள் ஒரே சமயத்தில் முயற்சி செய்யும்போது சில நேரங்களில் சர்வர் வேகம் குறைந்து காணப்படுகிறது. எனவே சர்வரின் வேகத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வரி செலுத்தும் முறையை மேலும் எளிதாக்க சில வங்கிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x