Published : 16 Jun 2015 10:26 AM
Last Updated : 16 Jun 2015 10:26 AM

சென்னை - மந்த்ராலயம் இடையே நேரடி ரயில் சேவை வருமா?- உங்கள் குரல்: வாசகர்களின் புகார்கள்

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். வாசகர்கள் பகிர்ந்துகொண்டதில் சிலவற்றை:

மதுரவாயல் ஏரிக்கரை - முகப்பேருக்கு மீண்டும் சிறிய பேருந்து இயக்க வேண்டும்

சென்னை

சென்னையின் முக்கியமான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 50 வழித்தடங்களில் 100 சிறிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சேவைக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. இந்நிலையில், மதுரவாயல் ஏரிக்கரையிலிருந்து முகப்பேர் வரை இயக்கப்பட்ட சிறிய பேருந்து திடீரென நிறுத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் வாசகர் முருகானந்தம் கூறியதாவது:

சென்னையின் பல்வேறு பகுதிகளில் சிறிய பேருந்துகளை இயக்குவது போல், எங்கள் பகுதியான மதுரவாயல் ஏரிக்கரையி லிருந்து முகப்பேர் வரை சிறிய பேருந்து இயக்கப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தது. குறுகலான தெருக்களின் உள்ளே இந்த பேருந்து செல்வதால் வயதானவர்கள், பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

ஆனால், இந்த சிறிய பேருந்து திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. சிறிய பேருந்து மூலம் போதிய வசூல் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தப் பேருந்தை நம்பிதான் ஏராளமான பெற்றோர்கள் குழந்தைகளை முகப் பேரில் உள்ள பள்ளிகளில் சேர்த்தனர். எனவே, மதுரவாயல் ஏரிக்கரையிலிருந்து முகப்பேருக்கு நேரடி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகத்தின் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சிறிய பேருந்துகளை எந்த வழித்தடத்திலும் நிறுத்தவில்லை. சில இடங்களில் சாலை பணிகள் நடைபெற்றதால் தற்காலிகமாக ஓரிரு நாட்களுக்கு மட்டுமே நிறுத்திவைத்தோம். நிரந்தரமாக எந்த வழித்தடத்திலும் சிறிய பேருந்து சேவை நிறுத்தவில்லை. மேலும், பயணிகளின் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

***

சென்னை - மந்த்ராலயம் இடையே நேரடி ரயில் சேவை வருமா?

சென்னை

சென்னையை அடுத்த புட்லூரைச் சேர்ந்த ராகவேந் திரபட் என்ற வாசகர், ‘தி இந்து’ உங்கள் குரல் தொலை பேசி சேவையை தொடர்பு கொண்டு கூறியதாவது:

சென்னையில் இருந்து மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திரர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். அவர்களுக்கு போதிய ரயில் வசதி இல்லை. தற்போது மும்பை எக்ஸ்பிரஸ் என்ற ஒரு ரயில் மட்டுமே உள்ளது. இந்த ரயிலில் மந்த்ராலயம் ரயில் நிலையத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள சீட்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதால் பயணிகள் 3 மாதத்துக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்தாலும் கிடைப்பதில்லை.

பல வருடங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ராய்ச்சூருக்கு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் மந்த்ராலயம் செல்பவர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. அதுபோல, சென்னையில் இருந்து மந்த்ராலயம் அல்லது ராய்ச்சூருக்கு நேரடி ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராகவேந்திர பட் கூறினார்.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சென்னையில் இருந்து மந்த்ராலயத் துக்கு தினமும் எவ்வளவு பேர் பயணம் செய்கின்றனர் என்பதை ஆய்வு செய்து அதனடிப்படையில் நேரடி ரயில் சேவை குறித்து பரிசீலிக்கப்படும்’’ என்றார்.

044-42890002

***

சென்ட்ரல் - பூங்கா நகர் ரயில் நிலைய இணைப்பு ஆகாய நடைபாதை தேவை

சென்னை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, பூங்கா நகர் ரயில் நிலையம், மேலும் பல்வேறு இடங்களுக்கு பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடந்துதான் செல்ல வேண்டும். சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பக்கமுள்ள சிக்னலில் மட்டும் தினமும் 8 லட்சம் பேர் கடந்து செல்வதாக கூறப்படுகிறது. ஆனால் அத்தனை பேர் கடந்து செல்வதற்கான வசதிகள் அந்த இடத்தில் செய்யப்படவில்லை.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் நடந்து வருவதால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், சென்னை சென்ட்ரல் - பூங்கா நகர் ரயில் நிலையம் இடையே சாலையை கடந்து செல்வதற்கு தற்காலிகமாக மேம்பால நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் படிக்கட்டுகள் மிகவும் செங்குத்தாக இருப்பதால் பலர் சிரமப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஒரு பக்கத்தில் மட்டும் நகரும் படிக்கட்டுகள் வைக்கப்பட்டன. அதேபோல மற்றொரு பக்கத்திலும் நகரும் படிக்கட்டுகள் வைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.

சென்ட்ரலில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகள் குறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறும்போது, “சென்ட்ரல், பூங்கா நகர் ரயில் நிலையங்கள், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகிய பகுதிகளை இணைத்து ரூ.20 கோடி செலவில் ஆகாய நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் ஆகாய நடைபாதை பணிகளை உடனே தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்றனர்.

அன்புள்ள வாசகர்களே...

'தி இந்து' தமிழ் நாளிதழ் உங்களோடு இன்னும் நெருக்கமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு இந்தப் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. வழக்கமாக நீங்கள் எழுதும் கடிதங்கள், மின்னஞ்சல்கள், 'தி இந்து' அலுவலகத்துடனான தொலைபேசி தொடர்புகள் இவற்றையும் தாண்டி, இந்தத் தொழில் நுட்பம் நமக்குள்ளே கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் நீங்கள் தரும் தகவல்களை செய்தியாளர்கள் மூலம் சரி பார்த்து செய்தியாக்க காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறுமுனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் எண்ணங்களையோ... அளிக்க நினைக்கும் புதிய தகவலையோ பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் பதிவில் உள்ள தகவல்கள் போதாதபட்சத்தில், நாங்களே உங்களைத் தொடர்புகொள்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x