Published : 05 Nov 2014 10:45 AM
Last Updated : 05 Nov 2014 10:45 AM

டெல்லியில் முகாமிட்டுள்ள வாசன் ஆதரவாளர்கள்

புதிய கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகக் கூறியுள்ள ஜி.கே.வாசன், சைக்கிள் சின்னத்தையும், தமிழ் மாநில காங்கிரஸ் பெயரை யும் மீண்டும் பெறுவதில் தீவிரமாக உள்ளார். இதற்காக டெல்லியிலுள்ள தலைமை தேர்தல் அலுவலகத்துக்கு வாசன் ஆதரவாளர்கள் சென்றுள்ளனர்.

மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன், கட்சி மேலிடத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணத் தால், தனிக்கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜி.கே.வாசனுக்கு ஆதரவாக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப் ரமணியம், பொருளாளர் கோவை தங்கம், முன்னாள் எம்.பி.க்கள் என்.எஸ்.வி.சித்தன், ராமசுப்பு, விஸ்வநாதன், ராணி விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பீட்டர் அல்போன்ஸ், வேலூர் ஞானசேகரன், விடியல் சேகர், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் என்.ஆர்.ரங்கராஜன், ஜான் ஜேக்கப், திருச்சி மாநகர முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் என பெரும் படை அணி திரண்டுள்ளது.

இதுமட்டுமன்றி வாசன் கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப் படும் என்று சிதம்பரம் மற்றும் தங்கபாலு ஆதரவாளர்களுக்கும் வலை விரித்து வருகின்றனர். இந்நிலையில் வாசனின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவரது ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது:

"எங்கள் கட்சியின் மாநாட்டை திருச்சியில் வரும் 12 அல்லது 16-ம் தேதி நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. மாவட்ட அளவில் எவ்வளவு தொண்டர்கள் இருப்பார்கள் என்று ஆராய்வதற்காக தற்காலிக பொறுப்பாளர் களை நியமித்துள்ளார்.

சைக்கிள் சின்னம் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியின் பெயரை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காக இது தொடர்பான ஆவணங்களுடன் மூத்த தலைவர்கள் சிலர் டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x