Published : 11 Jan 2014 12:30 PM
Last Updated : 11 Jan 2014 12:30 PM

இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்பு தமிழக, இலங்கை மீனவர்கள் விடுதலை - நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பு கோரிக்கை

தமிழக - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்பாக தமிழகத்திலும் இலங்கையிலும் சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று மீனவ பிரதிநிதிகள் தரப்பில் கருத்து தெரிவிக்கின்றனர்.

தமிழக - இலங்கை மீனவர்கள் இடையிலான பிரச்சினைகளை பேசித் தீர்க்க 2004, 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தீர்வை எட்டாமலேயே முறிந்துபோயின. இந்த நிலையில், இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை தமிழகத்தில் நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதினார். பேச்சுவார்த்தையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியும் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில், ‘பேச்சுவார்த்தைக்கு நாள் ஒதுக்குமாறு இதுவரை பிரதமர் அலுவலகத்திலிருந்து தமிழக முதல்வருக்கு 11 கடிதங்கள் அனுப்பப்பட்டும் பதில் இல்லை. இந்த விஷயத்தில் ஜெயலலிதா நாடகம் ஆடுகிறார்’ என்று நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டார் கருணாநிதி. அதே சமயம், பேச்சுவார்த்தைக்கு 20-ம் தேதி நாள் குறிக்கப்பட்டிருப்பதாக டி.ஆர்.பாலு தரப்பிலிருந்து அறிக்கையும் வெளியானது.

இதுகுறித்து நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் ’தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இருநாட்டு மீனவர்கள் இடையே கடந்த 30 வருடங்களாக பிரச்சினை இருக்கிறது. இதைத் தீர்த்துவைக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? 1996-லிருந்து 2013 வரை மத்திய அரசில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த திமுகதான் என்ன மெனக்கெட்டது? தேர்தல் வந்தால் மட்டும்தான் இவர்களுக்கு எங்கள் மீது திடீர் அக்கறை வருகிறது.

பேச்சுவார்த்தைக்கு நாள் குறித்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால், இலங்கை மீனவ பிரதிநிதிகளுக்கும் எந்தத் தகவலும் வரவில்லை. எங்களுக்கும் தகவல் இல்லை. தமிழக மீனவர்கள் 314 பேர்

இலங்கை சிறையிலும் இலங்கை மீனவர்கள் 270 பேர் தமிழக சிறையிலும் இருக்கிறார்கள். இருதரப்பு மீனவர்களும் தங்களுக்குள் ஒரு சுமுகமான முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டில் அதிக அளவில் இருதரப்பிலும் மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்திய - இலங்கை அரசுகளுக்குள் ஏற்பட்டிருக்கும் மனப் புழுக்கம்தான் இதற்குக் காரணம்.

இரு தரப்பிலும் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்தாலே பல பிரச்சினைகள் தீரும். இருதரப்பு மீனவர்களும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நல்ல தொடக்கமாகவும் அமையும்.

இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அருளானந்தம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x