Published : 06 May 2017 04:50 PM
Last Updated : 06 May 2017 04:50 PM

அறம் பழகு 2: ஹேமாவர்ஷினி- சர்வதேச கராத்தே மேடைக்கு செல்ல உதவி கோரும் பள்ளி மாணவி!

| படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான பள்ளி மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும் புதிய தொடர் இது. |

சரித்திரப் பெருமைகளோடும், வரலாற்றுத் தொன்மையோடும் நெடிதுயர்ந்து நிற்கிறது மதுரை மாநகர். அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள காளவாசலுக்கு அருகில் இருக்கிறது பி.பி.சாவடி. அங்கே பாரதியார் நகர், 2-வது தெருவின் நெருக்கடியான சந்துப்பகுதி. அங்கேதான் 247-ம் எண்ணில் வாடகைக்குக் குடியிருக்கிறது ஹேமாவர்ஷினியின் குடும்பம்.

அப்பாவுக்குப் பட்டறையில் கூலி வேலை. அம்மா இல்லத்தரசி. வீட்டின் அருகில் இருக்கும் பள்ளியில் 4-ம் வகுப்புப் படிக்கிறாள் ஹேமாவர்ஷினி. சுட்டித்தனம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது. மழலை மாறாமல், ஆனால் தெளிவாய்ப் பேசுகிறாள். 'தேனி, புதுக்கோட்டை, மதுரை, மும்பைன்னு நெறைய போட்டிகள்ல கராத்தேல கோல்ட் ஜெயிச்சுருக்கேன் மேம். இப்போ மலேசியா போகப் போறேன்' என்கிறாள்.

அவரின் அம்மாவிடம் பேசினோம். ''என் மவளுக்கு சின்ன வயசுல இருந்தே கராத்தேல ஆர்வம் அதிகம். போன எந்த போட்டிலயும் தோத்துட்டு வந்ததில்ல. அம்புட்டு போட்டிலயும் தங்கம் வாங்கிட்டு வந்துடுவா. அப்படியே படிப்படியா ஜெயிச்சு இப்போ மலேசியால நடக்கற போட்டி வரைக்கும் தேர்வாகியிருக்கா. அதுல கண்டிப்பா ஜெயிச்சிடுவா.

ஆனா போற, வர செலவுக்குத்தேன் காசு இல்லை. 45 ஆயிரம் ரூவா வேணும்னு சொல்லிருக்காங்க. இருக்கற நகையை வச்சு புரட்டினாக்கூட 10,000 ரூவாதான் கெடைக்கும். என்ன செய்யப் போறோம்னு தெரியல'' அரிதாரமற்ற வார்த்தைகளில் தன் நிலையைச் சொல்கிறார் அவர்.

வீட்டில் தன் தாயுடன் ஹேமாவர்ஷினி. படம்: ஆண்டனி செல்வராஜ்

பயிற்சியாளர் நாகச்சந்திரன் கராத்தே சிறுமி ஹேமாவர்ஷினி குறித்துக் கூறும்போது, ''இதுவரை நான் பார்த்த மாணவர்களில் தலைசிறந்த மாணவர் என்று ஹேமாவர்ஷினியைச் சொல்வேன். 'தி பெஸ்ட்' பர்ஃபார்மர் அவர். அவரின் அம்மாவும் ஆர்வமான பெற்றோர்தான். அவரின் அம்மா மகளை சிறப்பாக ஊக்கப்படுத்துவார் என்றால், மகள் அம்மாவின் ஊக்கத்தை விட இரண்டு மடங்கு அதிக உழைப்பைக் கொடுப்பார்.

ஹேமாவர்ஷினி 2016-ல் தேனியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டி, மதுரையில் மாநில அளவிலான போட்டி, 22வது ஆசிய ஓபன் சர்வதேச கராத்தே போட்டி, மும்பையில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். மஞ்சள், பச்சை, நீல பெல்டுகளைப் பெற்றுள்ளார். 2017-ல் புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியிலும் தங்கம் வென்றார். பள்ளிகளுக்கு இடையிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். இவற்றைத் தொடர்ந்து பாரதி யுவ கேந்திரா சார்பில் யுவஸ்ரீ கலா பாரதி விருது வழங்கியுள்ளது.

தற்போது ஹேமாவர்ஷினிக்கு மலேசியாவில் மே 12 முதல் 14 வரை நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் (INTERNATIONAL OPEN KARATE MEET) கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விமான பயணச் செலவு, தங்குமிடம், போட்டிக் கட்டணம் என ரூ.45 ஆயிரம் தேவைப்படுகிறது.

திறமையுடன் இருக்கும் மாணவிக்கு நம்மால் முடிந்ததைச் செய்ய ஆசைப்பட்டேன். 'கடைசி நேரம் வரை பணம் புரட்ட முடியவில்லை என்றால் எனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கிக் கொடுத்து விடுகிறேன். நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் கொடுங்கள்' என்று ஹேமாவர்ஷினியின் அம்மாவிடம் கூறியிருக்கிறேன்'' என்கிறார்.

உதவ முடிந்த உயர் உள்ளங்கள் ஹேமாவர்ஷினியின் மலேசியா பயணத்துக்கு ஏணியாகி, கராத்தே மேடை அமைக்கலாமே!

ஹேமாவர்ஷினி தாயாரின் தொடர்பு எண் : 8680957452

பயிற்சியாளர் நாகச்சந்திரனின் தொடர்பு எண் : 9842105175

ஹேமாவர்ஷினி வங்கிக் கணக்கு எண்:

R. Porkodi, Corporation Bank, Madurai Byepass road,

Acc. No: 207800101010235.

IFSC code: CORP0002078.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x