Last Updated : 13 Aug, 2014 03:38 PM

 

Published : 13 Aug 2014 03:38 PM
Last Updated : 13 Aug 2014 03:38 PM

சிங்கம், சிறுத்தைகளைக் காக்கும் துணிச்சலரசி: கிர் பூங்காவில் ஒரு கெத்துக் கதை!

இந்த சமுதாயத்திலுள்ள கானகக் காவலர்கள் சந்திக்காத துயரமல்ல, வாங்காத அடிகள் இல்லை. அதிலும், அவர் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில்... சொல்லவே தேவையில்லை. ஆனால், இந்த கானகக் காவலர் தலைநிமிர்ந்து நிற்க, தொடக்கப்புள்ளியாக அமைந்தது ஒரு திரில்லிங்கான சம்பவம்.

குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காட்டில், காட்டுப்பூனை ஒன்று துரத்தியதில் ஒரு சிறுத்தை கிணற்றில் விழுந்துவிட்டது. எப்படி முயற்சித்தும் அதனை வெளியில் எடுக்கமுடியவில்லை. சிறுத்தையைக் காப்பாற்ற கடைசி முயற்சியாக, களமிறங்கியவர் ரஷீலா வதேர். அவருக்கு இது தனக்கான நேரம் என்று தெரிந்திருந்தது.

கிணற்றில் இறங்கி, அந்த விலங்கு அருகே சென்று, அதற்கு மயக்க ஊசி செலுத்தி, காப்பாற்ற வேண்டிய நிலை.

இந்த பரபரப்பான சம்பவம் குறித்து கானகக் காவலர் ரஷீலா கூறுகையில், “அந்த 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில், நாங்கள் ஒரு கயிற்றை இறக்கினோம். ஆனால், அதனை அந்த சிறுத்தைக் கடித்து துப்பியது. நான் அப்போதுதான் முதல்முறையாக கிணற்றில் இறங்கினேன்", என்று கூறினார்.

ரஷீலா வதேர், ஜுனாகத் மாவட்டத்தில் பங்தோரி கிராமத்தைச் சேர்ந்தவர். குஜராத்தில் ஆசிய சிங்கத்தின் தாயகமாக கருதப்படும் சசன் கிர் தேசிய பூங்காவில், கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார். கிணற்றிலும், சேற்றிலும் தவறிவிழுந்த சிங்கங்கள், சிறுத்தைகள், மலைப்பாம்புகள் உள்ளிட்ட விலங்குகள், மனித வாழ்விடத்திற்கு வழி தவறிச்சென்றுவிட்ட விலங்குகள் என இதுவரை 800 விலங்குகளைக் காப்பாற்றியுள்ளார்.

“முதலில், எனக்கு மிகவும் அச்சமாக இருந்தது. ஆனால், இன்று எனக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. காட்டில் சின்ன சின்ன வேலைகளைச் செய்யவே பெண்கள் தகுதியானவர்கள் என்று ஆண் அதிகாரிகள் நினைத்தனர். எங்களுக்கு கடினமான பணிகள் அளிக்கப்படவில்லை. அலுவலத்தில் ஆறு மாத காலம் பணிபுரிந்தபின், நான் ஏதாவது முக்கியமான பணி செய்யவேண்டும் என்று கருதினேன். அப்போது, விலங்குகளைக் காப்பாற்றும் பணிக்கு, பெண் பாதுகாவலர்கள் யாருமில்லை”, என்று தெரிவித்தார்.

2007-ஆம் ஆண்டு கிர் காட்டைப் பாதுகாக்கும் பணிக்காக 44 பெண் கானகக் காவலர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தனர். அதில் ரஷீலாவும் ஒருவர். இது குஜராத் மாநிலத்தில் நநேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி நிறைவேற்றப்பட்ட திட்டமாகும்.

இவர் துணிச்சலுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் மட்டுமல்லாமல், மோடி உள்ளிட்ட தலைவர்களிடமிருந்து விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. இவரைக் குறித்து கிர் பூங்காவின் துணை காப்பாளர் சந்தீப் குமார் பேசுகையில், “ரஷீலாவின் ஆண்டு ஊதியமான ரூ.60,000 விடவும் அதிகமான பரிசுத்தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலில், தங்களால் முடியுமா என்று பல பெண் ஊழியர்கள் சந்தேகப்பட்டனர். ஆனால் அவர்கள் தற்போது ஒவ்வொரு துறையிலும் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த பணிக்கு லட்சக்கணக்கான பெண்கள் விண்ணப்பிக்கிறார்கள்”, என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

காட்டில் இருக்கிறோம் என்ற பயத்தை விடவும், இந்த பெண் காவலர்களுக்கு வேறு சில பிரச்சினைகளும் உள்ளன. வீட்டிலிருந்து தனியாக காட்டில் வாழ்வது, ஆண் ஊழியர்களுடன் வேலை செய்வது குறித்த சமுதாயப் பார்வையை சமாளிப்பது மேலும் ஒரு சவாலாக உள்ளது.

உதாரணமாக, இங்கு பணிபுரியும் த்ரீப்தி ஜோஷி என்பவருக்கு திருமணம் ஆனபோது, அவரது புகுந்த வீட்டில் இந்த பணியைத் தொடர அனுமதிக்கவில்லை. ஆனால் அவர் தந்தை இடைமறித்து, அவர் இந்த பணியிலேயே தொடர வழிசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு புதிய பரிணாமம்

இந்த பணிக்கு, பெண் காவலர்கள் சேர்ந்தபின், மனித-விலங்கு போராட்டத்தை சமாளிப்பதில் ஒரு புதிய பரிணாமம் பெற்றுள்ளது. கொடூரமான விலங்குகளை விடவும் மனிதர்களை கையாளுவதே கடினம் என்று இவர்கள் தெரிவிக்கின்றனர்.

“இந்த பணி குறித்து மக்களின் புரிதல் வேறாக இருக்கிறது. விலங்குகளை மீட்கும் இரு வேறு பணிகள் ஒரே மாதிரி இருப்பதில்லை.”, என்று கூறுகிறார் ரஷீலா. ஒரு காலத்தில் காடு என்பது எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையிலிருந்து, மிக பயங்கரமான விலங்குகளைக் காக்கும் ஒரு காவலராக மாறியிருப்பது வரை, மிக நீண்ட பாதையை ரஷீலா கடந்து வந்திருக்கிறார். ஒரு மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறுத்தை ஒன்று இவரது வலது கையைக் காயப்படுத்திய தழும்பு இன்றும் இருக்கிறது. கிட்டதட்ட 15 தையல்கள் போடப்பட்டுள்ளன. “என் அம்மா இந்த தழும்பை பார்த்தபோதுதான், என் பணியின் இயல்பு என்ன என்று அவர் தெரிந்துக்கொண்டார்”, என்று கூறிமுடிக்கும் இந்த வீரப் பெண்மணிக்கு ஒரு ராணுவ சல்யூட் அடிக்க தோன்றுகிறது.

தமிழில்: எம்.ஆர்.ஷோபனா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x