Last Updated : 19 May, 2014 07:50 AM

 

Published : 19 May 2014 07:50 AM
Last Updated : 19 May 2014 07:50 AM

மோடியின் ஆட்டம் ஆரம்பம்

மோடி தலைமையிலான பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்த வெற்றி இந்திய அரசியலில் புதிய சகாப்தத்தைத் தொடங்கியிருக்கிறது. கோடிக் கணக்கான மக்களின் எண்ணங்கள், ஏக்கங்கள், விருப்பங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்கக்கூடிய வலுவான ஒருவரின் அரசியல் தலைமையால் இந்திய அரசியல் முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது.

குஜராத் மாநில முதல்வராக அவர் பதவியேற்றபோதும் கடுமையான சவால்கள் அவருக்குக் காத்திருந்தன. அவற்றை யெல்லாம் வெற்றிகரமாக முறியடித்துதான் அந்தப் பதவியில் தொடர்ந்தார். இப்போது பிரதமர் பதவியை ஏற்கும் போதும் அதைவிடக் கடுமையான சவால்கள் அவருக்குக் காத்திருக்கின்றன.

கடுமையாக உயர்ந்துவிட்ட விலைவாசி, பெரும்பாலும் பொய்த்துவிடும் என்றே கூறப்படும் பருவமழை, கட்டுக்கடங்காத அரசின் நிதிப் பற்றாக்குறை, முடங்கிவிட்ட தொழில்துறை போன்ற சவால்களைச் சந்தித்து நாட்டின் நிர்வாகத்தைப் பிரதமரும் அவருடைய புதிய அமைச்சரவையும் முடுக்கிவிட வேண்டும். பதவியேற்பு விழாவில் கையெழுத்திட்ட மை உலர்வதற்கு முன்னால் இந்த நடவடிக்கைகளைத் தொடங்கிவிட வேண்டும். இந்த இடத்தில்தான் அவருடைய குஜராத் அனுபவம் கைகொடுக்கும். குஜராத்தில் முடிந்தது, பிற இடங்களிலும் சாத்தியமா என்றால் சாத்தியமே என்கிறார் மோடி.

அதிகாரமும் பொறுப்பும்

பதவியோடு வருவது அதிகாரம் மட்டுமல்ல, பொறுப்பும்தான். ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் உறுப்பினர் என்பதையோ அதன் சித்தாந்தங்களில் தனக்குள்ள பிடிப்பையோ அவர் எப்போதும் மறைத்ததில்லை. பாரதிய ஜனசங்கத்தில் அவருடைய அரசியல் அனுபவம் தொடங்கியது. தங்களுடய கனவு நினைவேற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மிகக் கடுமையாக இந்தத் தேர்தலில் உழைத்தார்கள். ஆர்.எஸ்.எஸ். எந்த சித்தாந்தங்களை உயர்த்திப் பிடிக்கிறதோ எந்த இலக்குகளைக் கொண்டிருக்கிறதோ அவற்றை மோடி நிறைவேற்ற வேண்டும் என்று சக தொண்டர்கள் எதிர்பார்ப்பது இயற்கை மட்டுமல்ல, நியாயமும் கூட; உடனே மோடியின் விமர்சகர்கள், ‘பார்த்தீர்களா பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது' என்று ஆர்ப்பரிப்பார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைமையின் எதிர்பார்ப்பே என்னவென்றால், இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையெல்லாம் முதலில் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். குஜராத்தில் பெற்ற நிர்வாக அனுபவத்தின் உதவியுடன் மிகச் சிறந்த ராஜதந்திரியாகவும் நல்ல ஸ்வயம் சேவக்காகவும் (தன்னார்வத் தொண்டர்) தேசிய அளவிலும் உயிர்த்துடிப்புடன் செயல்படுவார் மோடி என்பதில் சந்தேகம் இல்லை.

ராஜதந்திரம் வெளிவர வேண்டும்

சமீப காலத்தில் மோடியைப் போலக் குற்றச் சாட்டுகளுக்கு ஆளான அரசியல் தலைவர் யாருமே இல்லை. நீதித் துறையும் மற்ற துறைகளும் தோண்டித்துருவிப் பார்த்தும்கூட அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை. சரியோ, தவறோ - அவருடைய பெயரைச் சொன்னாலே பலருக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது, பலருக்கு உற்சாக ஊற்று பிறக்கிறது. பிரதமர் பதவி ஏற்கும் அவரிடம், ‘அரசியல்வாதி' என்ற ஆளுமை மறைந்து ‘ராஜதந்திரி' என்ற ஆளுமை மலர வேண்டும்.

இந்தப் பிரச்சாரத்திலேயே பலமுறை மதரீதியாக உசுப் பேற்றி அவரைப் பேசவைக்கப் பல முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. மீண்டும் மீண்டும் மதச்சார்பின்மை, மதவாதம் ஆகியவற்றை முன்னிட்டே பிரச்சாரங்களையும் விவாதங்களையும் முன்னெடுத்தார்கள். மோடியைப் பற்றிய பிம்பம் வேறு எந்த வகையிலும் மக்கள் மனதில் பதிந்துவிடக் கூடாது என்று எல்லா எதிர்க் கட்சித் தலைவர்களும் ஆனமட்டும் முயற்சித்துப் பார்த்தார்கள். தனக்குப் பொறுமையும் பக்குவமும் கைகூடியிருப்பதை அவர் மௌனமாக இருந்தே அனைவருக்கும் உணர்த்திவிட்டார்.

உலகின் பார்வையில்…

பிரதமர் பதவியேற்பதற்கு முன்னதாகவே உலகின் பார்வை மோடி மீது பதிந்திருக்கிறது. தொழில், வர்த்தக உறவுக்காக மட்டுமல்லாமல் வேறு காரணங்களுக்காகவும் இந்தியாவைப் பார்க்கும் பார்வை மாறியிருக்கிறது. இந்தியாவின் தேசிய நலன்களுக்கான நடவடிக்கைகள், புவி அரசியல் நிலைகளுக்கேற்பவும் அமைய வேண்டும். வெளியுறவுக் கொள்கை என்பது நாட்டின் நலனுக்கான நீண்ட காலக் கொள்கைகள், அவற்றுக்கான காரிய சாத்தியமான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கலவை யாகும். எனவே, கடுமையான சூழல்களில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார வாய்ப்புகள், சமத்துவம், நிலையான அரசு ஆகியவற்றுக்காக வாக்களிக்குமாறு பிரச்சாரத்தில் மோடி கோரியிருந்தார். தன்னைத் தேர்ந்தெடுத்தால் குறைந்தபட்ச அரசு - அதிகபட்ச நிர்வாகம், பங்கேற்பு ஜனநாயகம், உடனடி நடவடிக்கைகள், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஜனநாயக நடைமுறைகள் ஆகியவற்றை வழங்கப்போவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அவற்றையெல்லாம் செயல்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது.

- சேஷாத்ரி சாரி, பா.ஜ.க-வின் வெளியுறவுக் கொள்கைப்பிரிவு அமைப்பாளர். தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x