Last Updated : 10 Oct, 2013 03:28 PM

 

Published : 10 Oct 2013 03:28 PM
Last Updated : 10 Oct 2013 03:28 PM

திறந்திடு சீஸேம்!

2011ம் ஆண்டு இரானில் இருந்த பிரிட்டிஷ் தூதரகத்தை மூடி, உத்தியோகஸ்தர்களை மூட்டை கட்டிக்கொண்டு ஊராந்திரம் வரச் சொல்லி உத்தரவிட்டது பிரிட்டன் அரசு. நிலவரம் சரியில்லை. இந்த தேசத்திலெல்லாம் தூதர கம் வைத்து நாசமாய்ப் போனது போதும். சுத்த அயோக்கியர்க ளுடன் சுமுக உறவு சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

அப்போதிருந்த மனநிலை யின்படி, சர்தான் போடா என்று சொல்லிவிட்டது இரான். வேறென்ன செய்வார்கள்? மேற்கு லகம் முழுதும் இரானைப் பார்த்துக் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தது. நீ அணு ஆயுதம் தயாரிக்கிறாய். நீ ஆபத்தான தேசம். நீ வெளங்க மாட்டாய். நீ உருப்படமாட்டாய். நீ நாசமாய்ப் போவாய்.

எங்கள் கற்பை உங்களிடம் நிரூபிக்க வேண்டிய அவசிய மில்லை என்று சொல்லிவிட்டார் இரான் அதிபர். கலவர களேபரங்க ளெல்லாம் ஆரம்பித்து ஜோராக நடந்தது அப்போது. எப்படியும் இரான் மீது யுத்தம் புரியத் தொடங்கிவிடுவார்கள் என்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்க, இன்றைக்கு வரை க்கும் அதைத் தள்ளிப் போட்டுக ்கொண்டு வருவதற்கு ஆயிரம் பக்க புஸ்தகம் எழுதுமளவுக்குக் காரணங்கள் உண்டு.

இந்த வருஷம் இரான் காட்டில் மழை. முறைத்து நின்றதெல்லாம் போதுமென்று முடிவு கட்டி அமெரிக்க அதிபரே கைகுலுக்கத் தயாராகிவிட்ட பிற்பாடு பிரிட்டன் சும்மா இருக்குமா? மீண்டும் இரானில் தூதரகம் திறப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகள் விரைவில் தொடங்குமென்று அறிவித்திருக்கிறார் பிரிட்டனின் வெளி விவகாரத்துறைச் செய லாளர் வில்லியம் ஹேக். இரானும் இதை உறுதிப் படுத்தியிருக்கிறது.

ஹசன் ருஹானி லேசுப்பட்ட ஆளில்லை. தனது நிலைபாட்டைச் சற்றும் மாற்றிக்கொள்ளாமல், யாருக்கும் எள்ளளவும் விட்டுக் கொடுக்காமல், அதே சமயம் பேசிப் பேசி காரியத்தைச் சாதிக்கத் தெரிந்தவராக இருக்கி றார். ஏனென்றால், மேற்க த்திய நாடுகளுடன் கைகுலுக்குவ தெல்லாம் இரானியர்களுக்கு சுத்தமாக ஒத்துவராத சங்கதி. அயாதுல்லா கொமேனி ஆட்சியில் இருந்த காலம் தொடங்கி உணவோடு, காற்றோடு, மூச்சோடு, பேச்சோடு கலந்தூட்டப்பட்ட அமெரிக்க வெறுப்பு, மேற்கத்திய விரோதம் என்னும் காம்ப்ளான் அவர்களுக்கு பீமபுஷ்டியளித்து ஜீவிக்க வைத்திருக்கிறது. ஒரு ராத்திரியில் பால் மாறுகிற ஜாதியில்லை.

ஆனால் எண்ணெய் அரசியல் புரிந்தவர்களுக்கு இந்தப் பேச்சு வார்த்தை நல்லுறவுகளும் தூதரகத் தொடர்புகளும் எத்தனை முக்கியமென்பது விளங்கும். அமெரிக்காவைப் பொறுத்தவரை மத்தியக் கிழக்கில் இப்போது யுத்தம் கூட வேண்டாம்; ஒரு மீடியம் பேஸ் பதற்றம் எப்போதும் எங்கும் தழைத்தோங்கினாலே போதுமானது.

அதன் காரியம் கனஜோராக நடக்கும். ருஹானி, அந்தப் பதற்றம்கூட இரான் பக்கம் எட்டிப் பார்க்காதிருக்கத்தான் வழி பண்ணிக்கொண்டிருக்கிறார்.

அவரது மிகப்பெரிய சாதனை, அமெரிக்க அதிப ருடன் தொலைபேசியில் பேசிய தல்ல. இரானிலுள்ள அரசியல்வாதி கள் அத்தனை பேருக்கும் சூழ்நிலையைத் தெளிவாகப் புரியவைத்து, தனது நோக்கத்திலும் செயல்பாட்டிலும் எந்தத் தடுமாற்றமும் திசைமாற்றமும் இல்லை என்பதைப் புரிய வைத்திருப்பதுதான். பிரிட்டன் இப்போது மீண்டும் தூதரக உறவு வைத்துக்கொள்ளலாம் என்று பேச முன்வந்திருக்கும் நிலையில், சரி பேசுவோம் என்று ஒரு மனதாக இரான் முடிவெடுத்து ஒப்புக்கொண்டது உண்மையிலேயே உத்தமமான காரியம். எப்படியும் தை பிறந்தால் அங்கே வழி பிறந்துவிடும்.

இதன் தொடர்ச்சியாக இன்னும் சில நல்ல காரியங்களும் நடக்கக் கூடும். அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய தேசங்கள் இரான் மீது விதித்திருக்கும் கடுமையான பொருளாதாரத் தடைகளில் சில தளர்த்தல்கள் வரும். இது இரானுக்கு இன்னும் கொஞ்சம் சுத்தக் காற்றை சுவாசிக்கக் கொடுக்கும். பரம வைரியாக இருந்த பிரகஸ்பதி எப்படி இப்படி பண்பாளன் ஆனான் என்று பக்கத்து தேசங்கள் பார்த்து பாடம் கற்றுக்கொள்ளவும் ஒரு சரியான வாய்ப்பு.

இருபத்தியோறாம் நூற்றா ண்டில் யுத்தங்களும் புரட்சிகளும் ஒரு புண்ணாக்கையும் சாதிக் காது. ஏதோ ஒரு சந்தில் முட்டிக்கொண்டாலும், இன்னொரு சந்தில் தட்டிக்கொடுத்து தோளில் கைபோட்டுப் போவதுதான் பிழைக்கிற வழி. ஹசன் ருஹானிக்கு அந்த வித்தை அநாயாசமாகக் கைவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x