Last Updated : 14 Apr, 2025 08:36 AM

31  

Published : 14 Apr 2025 08:36 AM
Last Updated : 14 Apr 2025 08:36 AM

ஆளுநர் விவகாரம் மீண்டும் நீதிமன்ற படிக்கட்டு ஏறுகிறதே!

தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களில் கையெழுத்திடாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த விவகாரம் நீதிமன்றம் சென்று, உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 10 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இல்லாத நிலைஇதன்மூலம் முடிவுக்கு வந்துவிட்டதாக அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்யவிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் தமிழக உயர் கல்வித் துறைக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதி மன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், மாநில அரசால் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களில் 30 நாட்களுக்குள் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்றும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது அவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்பு புதிய சட்டமாக பார்க்கப்படுகிறது. இந்திய அரசிலமைப்புச் சட்டம் பிரிவு 201-ல், ஆளுநரால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை குடியரசுத் தலைவர் பரிசீலிப்பது குறித்து கூறப்பட்டுள்ளதே தவிர, அதில் காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை. சட்டத்தை மீறி காலக்கெடு நிர்ணயிப்பது நீதித்துறையின் வரம்புக்குள் வராது என்று மத்திய அரசு கருதுவதால், தீர்ப்பு வரிகளுக்கு எதிராக மறுஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளது.

மேலும், ஒரு மசோதா 6 மாதங்களுக்குள் உரிய ஒப்புதல் பெற்று சட்டமாகாவிட்டால், அது காலாவதியாகும் நடைமுறையும் காலம்காலமாக பின்பற்றப்படுகிறது. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி காலாவதியான மசோதாக்கள் உயிர்பெற்று சட்டமாகியுள்ளதையும் முரண்பட்ட விஷயங்களாக மத்திய அரசு கருதுகிறது. இதனால் உச்ச நீதிமன்றம் முன்பாக முறையிட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோருவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையேயான மோதல் போக்கால் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இல்லாத நிலை ஏற்பட்டு, கல்விப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் உரிய காலத்தில் பட்டம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம், இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், மத்திய அரசின் முடிவால் சர்ச்சை மீண்டும் தொடரவிருப்பது உறுதியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதே குடியரசுத் தலைவர் என்கிற போது, அவருக்கே நீதிபதிகள் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவு போட முடியுமா என்றெல்லாம் சட்ட நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசனஅமர்வுக்கு சென்றாலும் ஆச்சரியமில்லை. அதில் முடிவு தெரிய எத்தனை காலம் ஆகும் என்பதை சொல்ல முடியாது.

இந்த நேரத்தில் மாநில அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வரும் வரை கல்விப் பணிகள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் தேவையான தற்காலிக நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x