Published : 28 Mar 2025 08:43 AM
Last Updated : 28 Mar 2025 08:43 AM
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் அகால மரணமடைந்த துயர சம்பவம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாரதிராஜா புகழ்பெற்ற இயக்குநர் என்பதாலும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நெஞ்சங்களில் இடம்பெற்றவர் என்பதாலும், அவரது மகன் மனோஜும் துடிப்பான நடிகராக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம்பெற்றவர் என்பதாலும், இந்த துயர சம்பவம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள தமிழ் மக்கள் ஊடகங்களை பார்த்தபடி இருந்தனர். இதுகுறித்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை உண்டு என்ற அடிப்படையில், அனைத்து ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன.
ஆனால், செய்தி ஊடகங்களுக்கு எதிராக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல் தலைவர் டி.ஜி.தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. ‘‘ஒருவரின் அழுகையை, துயரத்தை ஏன் வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்? ஒருவரின் துயர் நமக்கு காசாகத்தான் வேண்டுமா? மற்றொருவரின் மரணத்தை, இயலாமையை கொண்டாடும் மனநிலைக்கு வந்து விட்டோமா?’’ என்றெல்லாம் கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
அதுமட்டுமின்றி, ‘‘இனிவரும் காலங்களில் இறப்பு வீடுகளில் ஊடக அனுமதி கூடவே கூடாது என்பதை முன்னெடுக்க வேண்டும். பத்திரிகையாளர் சங்கங்கள் இதுகுறித்து தீர்வு காணவேண்டும்’’ என்ற யோசனையையும் தெரிவித்துள்ளார். நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களையும், துயர சம்பவங்
களையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியையே பத்திரிகை மற்றும் ஊடகங்கள் செய்து வருகின்றன. அந்த வகையில் மக்களின் மனதில் இடம்பிடித்த ஒரு பிரபல இயக்குநரின் வீட்டில் நடந்த துயரத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் பணியை ஊடகங்கள் செய்தது மிக இயல்பான ஒன்று. திரைப்படத் துறையினர் தவிர்த்து வேறு துறையைச் சேர்ந்தவர்கள் மரணமடையும்போது அந்தச் செய்தியை ஊடகங்கள் வாயிலாகவே திரைப்படத் துறையினர் தெரிந்து கொள்கின்றனர். அதேபோல திரைப்படத் துறையினர் பற்றிய செய்திகளை மற்றவர்களும் ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்துகொள்கின்றனர்.
அதேசமயம், திரைப்படத் துறையினரின் துக்க நிகழ்வுகளின் போது, மறைந்தவர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவும், அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லவும் வரும் திரைப் பிரபலங்களை படம் பிடித்து தங்கள் தொலைக்காட்சியில் காட்டவேண்டும் என்பதற்காக சிலர் முண்டியடித்துக் கொண்டு முன்னால் பாய்வதையும் காண முடிகிறது. அத்தகைய களேபரத்தின் காரணமாக துயர வீட்டின் தன்மையே மாறி அங்கே ஒருவிதமான பதற்றம் பரவி விடுகிறது.
ஒருவேளை இதைத்தான் தியாகராஜன் வருத்தப்பட்டு சொல்லியிருக்கிறார் என்றால் அதில் ஒரு நியாயம் இருப்பதாகவே கருதலாம். செய்தியாளர்கள் எந்த ஒரு துக்க வீட்டுக்கு செய்தி சேகரிக்கச் செல்லும்போதும் அவர்களே தங்களுக்குள் ஒரு கட்டுப்பாடு விதித்துக் கொண்டு, கூடிய வரையில் அந்த சூழலின் தன்மைபாதிக்கப்படாமல் நடந்து கொள்வது ஊடகங்களின் மாண்பையும் முக்கியத்துவத்தையும் மேலும் உயர்த்திக் காட்டும். ஆனால், ஒரேயடியாக தடித்த வார்த்தைகளால் இப்படி அவர்களை கண்டிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...