Last Updated : 17 Mar, 2025 10:54 AM

1  

Published : 17 Mar 2025 10:54 AM
Last Updated : 17 Mar 2025 10:54 AM

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: முன்பைவிட மோசமாகிறதா சூழல்?

சமூக அங்கீகாரத்துடன் பெண்ணுடலில் நிகழ்த்தப்பட்ட குழந்தை மணம், பருவம் எய்தும்முன் பாலுறவு, விதவைக்கோலம், சதி போன்ற ஆணாதிக்கப் பண்பாடுகளை நவீனத்துவம் அசைத்தது. சென்னை மாகாணத்திலும் திருவாங்கூர் சமஸ்தானத்திலும் கிறிஸ்துவ மிஷனரி பெண்களின் சேவை, நவீனக் கல்வி, ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் போன்றோர் ஆணாதிக்கத்தை உலுக்கினர். இச்சிக்கல்களைப் பெண் / பொதுப் பத்திரிகைகள் விவாதித்தன.

அரங்​க​நாயகி, அன்னபூரணி, நீலாம்​பிகை, குஞ்சிதம், முத்துலெட்சுமி ரெட்டி, மீனம்​பாள்​சிவ​ராஜ், பாலம்​மாள், மகேஸ்வரி, ஜயலட்​சுமி​யம்​மாள், நாகலட்​சுமி​யம்​மாள், ரங்கநாயகி, ராஜேஸ்வரி அம்மாள், கிரிஜா, புதுவை ராஜலட்சுமி போன்றோர் முன்னணியில் செயல்​பட்​டனர். பெரியாரும் சுயமரியாதை இயக்கத்​தினரும் இச்செயல்​பாட்டை முழு வீச்சில் பரவலாக்​கினர். பெண் கல்வி, தேவதாசி ஒழிப்பு, இணக்க வயது, காதல் மணம், விவாகரத்து, மறுமண விவாதங்கள் உக்கிர​மாகின. ஆணாதிக்​கத்​துக்கு எதிரான ‘ஆண் மக்களல்​லாதோர் மாநாடு’ உள்பட இலக்கி​யங்கள் படைக்​கப்​பட்டன.

இச்செயல்கள் ஆணாதிக்கப் பண்பாட்டைச் சமூகக் கேடு என்றும், குற்றம் என்றும் இச்சமூகத்தை உணர வைத்தன. பிரிட்​டிஷ்-
இந்திய ஏகாதிபத்​தி​யமும் அவற்றைக் குற்றமெனச் சட்டமாக்​கியது. 1925ஆம் ஆண்டு திருத்திய சட்டத்​தின்படி மனைவி​யிடம் 13 வயதுக்குள் கணவர் பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமெனக் கூறியது. ‘ஒருவன் எட்டு வயதுள்ள மனைவியை வாயில் துணியடைத்துப் பலாத்​காரித்ததான வழக்கு விசாரணை​யிலுள்ளது’ என்ற ‘ஆனந்​தகுண​போ​தினி’ (1926 நவம்பர்) செய்தி​யானது, ஆணாதிக்கப் பண்பாட்டைக் குற்ற​மாக்​கியதற்குச் சாட்சி.

பாலினப் போர்: பிரிட்​டிஷ்-இந்திய ஏகாதிபத்​தியம் 1863 முதல் குற்றங்​களைப் புள்ளி​விவரங்களாக ஆவணப்​படுத்​தியது. சென்னை மாகாணக் காவல் துறை ஆண்டறிக்கை​களின்படி 1878 முதல் 1888 வரை கொலை, தற்கொலை உள்படப் 10 வகைகளில் வன்முறை​யாலும் இயற்கைக்கு மாறாகவும் இறந்தவர்களை ஆண்கள், பெண்கள், ஆண்-பெண் குழந்தைகள் என வகைப்​படுத்தி, மாவட்​டங்கள் வாரியாகப் புள்ளி​விவரங்கள் பதிவுசெய்​யப்​பட்டன. இம்மா​காணத்தில் 1878இல் 6,893 பெண்களும், 2,408 பெண் குழந்தை​களும் இறந்தனர்.

இவர்களில் நீரில் மூழ்கி​யும், விஷம் அருந்​தி​யும், கொடிய ஆயுதங்​களாலும், பிற வகையிலும் 1,697 பெண்களும் 49 குழந்தை​களும் தற்கொலை செய்து​கொண்​டனர். இவ்வாறு வகைப்​படுத்திய விவரங்கள் 1898ஆம் ஆண்டுக்குப் பின்னர் இல்லை. சென்னை மாகாணத்தில் 1919-1950 ஆண்டு​களில் சுமார் 32,000 பெண்களும் ஆண்களும் கொல்லப்​பட்​டனர். ஒவ்வோர் ஆண்டும் கொல்லப்​பட்​ட​வர்​களின் எண்ணிக்கையில் காதல், பாலியல் உறவு தொடர்​புடைய​வர்களே பெரும்​பான்​மையாக இருந்​தனர். இருப்​பினும், பெண்களுக்கு எதிரான குற்றங்​களைத் தனியாக வகைப்​படுத்​தாதது பிரிட்​டிஷ்-இந்​தியக் காவல் துறையின் பெருங்குறை​தான்.

சுதந்திர இந்தியாவின் தேசிய, மாநில காவல் துறைகளின் குற்றத் தரவுப் பணியகங்​களின் ஆண்டறிக்கைகள்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்​களைத் தனித்து வகைப்​படுத்தின. இவ்வகை​யில், 1950களில் வகைப்​படுத்​தப்பட்ட ஆள்கடத்​தல்தான் முதல் புள்ளி​விவர​மாகும். சுதந்​திரம் அடைந்து 24 ஆண்டு​களுக்குப் பின்னர் 1971இல் பாலியல் வல்லுற​வும், 48 ஆண்டு​களுக்குப் பின்னர் 1995இல் வரதட்​சிணைக் கொலைகள், துன்புறுத்​தல்கள், பாலியல் தொல்லைகள், கணவரும் உறவினர்​களும் ஏவுகின்ற கொடுமை​களும் குற்ற வகைமை​களாகச் சேர்க்​கப்​பட்டன.

இச்சமூகக் கேடுகள் 1920களிலேயே விவாதிக்​கப்​பட்ட​ போ​திலும் அவற்றைக் குற்றங்கள் என வகைப்​படுத்த 50 ஆண்டுகள் ஆகியிருக்​கின்றன. வரதட்​சிணைத் தடுப்புச் சட்டம், 1961இல் நடைமுறைக்கு வந்தும்கூட அக்குற்​றங்களை 1995 வரை கணக்கில் எடுக்க​வில்லை. இதற்குக் காரணங்கள், ஆளும் வர்க்​கத்தின் ஆணாதிக்கச் சிந்தனையும் பொதுச் சமூகத்தின் இயக்கமற்ற நிலையும் எனக் கருதலாம். இருப்​பினும், தாமதமாக வகைப்​படுத்​தப்பட்ட இப்புள்​ளி ​விவரங்கள் பெண்களின் நிலையை அறிய உதவுகின்றன.

ராஜஸ்​தானில்தான் 1950களில் ஆள்கடத்​தல்கள் நிகழ்ந்தன. இது அக்காலத்தில் பிற மாநிலங்​களில் குறிப்​பிட்டுக் கூறும்​படியாக இல்லை. பின்னர்தான் இந்தியா முழுமைக்கும் பரவியது. உத்தரப் பிரதேசத்தில் 2020இல் 12,913 பேரும் 2021இல் 14,554, 2022இல் 16,623 பேரும் கடத்தப்​பட்​டனர். தமிழ்​நாட்டில் 2020இல் 765, 2021இல் 821, 2022இல் 737 பேர் கடத்தப்​பட்​டனர். தமிழ்​நாட்டுக் குற்றத் தரவுகளின்படி, பாலியல் வல்லுறவு​களும் வரதட்​சிணைச் சாவுகளும் நூற்றுக்​கணக்​கிலும், பொதுவான துன்புறுத்​தல்​களும் கணவரும் உறவினர்​களும் துன்புறுத்துவது ஆயிரக்​கணக்​கிலும் ஆண்டு​தோறும் நிகழ்​கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்​களில் சென்னை நகரமே முன்னணியில் இருக்​கிறது.

கன்னி​யாகுமரி, திருநெல்​வேலி, திண்டுக்கல், தேனி, கடலூர், விழுப்புரம், தர்மபுரி போன்ற மாவட்​டங்​களில் கூடுதலான குற்றங்கள் நிகழ்​கின்றன. ஒவ்வொரு மாநிலத்​திலும் பதிவான குற்றங்கள் தொடர்பான புள்ளி​விவரங்களை ஒரு லட்சம் மக்கள்​தொகைக்குக் கணக்கிட்​ட​தாகத் தேசியக் குற்றத்​தர​வுகள் பணியகம் கூறுகிறது. அவ்வாறென்​றால், மொத்த மக்கள்​தொகைக்கும் கணக்கிட்டால் அவற்றின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்​கும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை அப்பெண்​களின் சொந்த​பந்​தங்கள் எனக் குடும்பத்​தினரும், நண்பர், சக பணியாளர் என நன்கறிந்​தவர்​களும் செய்கின்​றனர். 2022ஆம் ஆண்டு புள்ளி​விவரப்படி தமிழ்​நாட்​டில், நன்கறிந்​தவர்கள் 419 பேரும், குடும்பத்​தினர் 25 பேரும், உத்தரப் பிரதேசத்தில் நன்கறிந்​தவர்கள் 3,507 பேரும், குடும்பத்​தினர் 25 பேரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு​களில் ஈடுபட்​டுள்​ளனர்.

பிற மாநிலங்​களிலும் இத்தகைய குற்றங்​களைச் செய்ததில் பாதிக்​கப்பட்ட பெண்களை நன்கறிந்​தவர்கள் கூடுதலாக​வும், குடும்பத்​தினர் குறைவாகவும் இருந்​தனர். ஒப்பீட்டளவில் தமிழ்​நாட்​டில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த எண்ணிக்கையில் நிகழ்​கின்றன. தமிழ்​நாட்டுக்கு இணையாகவும் குறைவாகவும் நிகழ்​கின்ற மாநிலங்​களும் உண்டு.

அதேவேளை, வரலாற்றுரீ​தி​யாகக் கணக்கெடுத்தால் கொலைகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிப்​பதைக் காண முடிகிறது. கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்​களின் சில பகுதி​களையும் மொத்தத் தமிழ்​நாட்​டையும் உள்ளடக்கிய அக்கால சென்னை மாகாணத்தில் 1863 முதல் 1868 வரை ஆண்டு​தோறும் தோராயமாக 248 பேர் கொல்லப்​பட்​டுள்​ளனர்.

ஆனால், 2022இல் மட்டும் தமிழ்​நாட்டில் குழந்தைகள், யுவதிகள் உட்பட 423 பெண்கள் கொல்லப்​பட்​டுள்​ளனர். 1877ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 150 ஆண்டு​களாகப் பல்வேறு வடிவங்​களில் பெண்கள் மீது ஆணாதிக்கம் ஏவப்படுகின்ற புள்ளி​விவரங்களை மொத்த​மாகத் தொகுத்துப் பார்த்​தால், இதை ஆணாதிக்​கத்தின் பாலினப் போர் என்று வரையறுக்​கலாம்.

அம்பேத்​கரும் ஆனந்தரும்: நிலவுடைமை, ஆணாதிக்க ஒடுக்​கு​முறைகளை ஒழிக்க பிரிட்​டிஷ்-இந்திய சென்னை மாகாணத்தில் கிறிஸ்துவ மிஷனரி, பெரியாரிய, பெண்ணிய, பொதுவுடைமை, சாதி இயக்கங்கள், ஊடகங்கள் ஆகியோரின் பெண் விடுதலைச் செயல்​பாடு​களின் விளைவு​கள்தான் பிற மாநிலங்​களை​விடத் தமிழ்​நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவதற்குக் காரணங்​களாகும்.

அதேவேளை பாரம்பரிய ஒடுக்​கு​முறை​களுடன் மேற்கூறப்பட்ட புள்ளி​விவரங்​களின்படி தனிநபர், கூட்டு வல்லுறவு, பாலியல் துன்புறுத்தல், வரதட்​சிணைச் சாவு, தற்கொலைக்குத் தூண்டுதல், கணவரும் உறவினர்​களும் வன்முறையை ஏவுதல், கருச்சிதைவு, அமில வீச்சு, பெண் குழந்தைகளை விற்றல், சமூக ஊடகங்​களில் மார்பிங்கில் ஆபாசப் படமேற்றுதல் போன்ற நவீன, பின்நவீனக் குற்றங்​களும் இணைந்துள்ள​தால், சிக்கல்கள் வலுக்​கின்றன.

சட்டங்​களின்படி குற்ற வகைமைக்குள் இடம்பெறாத இன்னல்​களையும் பெண்கள் அனுபவிக்​கின்​றனர். அவை பொதுவெளியில் விவாதத்​துக்கு வருவதில்லை. சட்டங்கள் வகைப்​படுத்திய குற்றங்களை அனுபவிக்கும் பெண்கள் அனைவரும் அதைப் புகார்​களாகப் பதிவுசெய்​வ​தில்லை. குற்றங்​களைச் சமூகத்​துக்கு உணர்த்திய நிலை மாறி, உள்ளுக்குள் அடக்கி அவற்றைச் சகித்​துக்​கொள்​கின்​றனர்.

தற்காலக் காவல் குற்றத் தரவுகளில், பாலியல் வல்லுறவை 6 வயதுக்குக் கீழ், 6-12, 12-16, 16-18, 18-30, 30–45, 45–60 வயதுகளுக்​குள், 60 வயதுக்கு மேல் எனப் பிரித்துக் காட்டுவது - கட்டுரையின் தொடக்​கத்தில் குறிப்​பிடப்பட்ட - 8 வயதுள்ள மனைவி மீது கணவன் ஏவிய பலாத்​காரத்தைவிட இழிவான நிலைக்குச் சமூகம் சறுக்கு​வதைக் காட்டு​கிறது.

இவற்றைத் தடுக்கும் வழிகளைக் குறித்துப் பொதுச் சமூகம் விவாதிக்க வேண்டும். சித்த மருத்துவத்தை நிறுவனமாக்கிய எஸ்.எஸ். ஆனந்தம் பண்டிதர், பாலினக் கல்வியை வலியுறுத்தினார். 1928இல் இணக்க வயதுக் குழுவில் அவர் முன்வைத்த, ‘விளைச்சலுக்கு முதிர்ந்த விதைகளையும், கால்நடைகளின் இனப்பெருக்கத்துக்குத் தக்க வயதையும் கணக்கில் கொள்வதைப் போல மனித வாழ்வும் மாற வேண்டும்’ என்கிற கோரிக்கையும், ‘நாட்டின் வளர்ச்சியைப் பெண்களின் முன்னேற்றத்திலிருந்து அளவிட வேண்டும்’ என்கிற அம்பேத்கரின் முறையியலும் தவிர்க்க இயலாத இக்காலத் தேவைகள்!

- தொடர்புக்கு: ko.ragupathi@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x