Published : 03 Oct 2024 06:20 AM
Last Updated : 03 Oct 2024 06:20 AM

‘மீ டூ’ - பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்குவதா?

சமூகத்தில் உயர்ந்த நிலையிலோ அதிகாரத்திலோ இருப்பவர் மீது பாலியல் குற்றச்​சாட்டை ஒரு பெண் சுமத்​தினால், குற்றம் சுமத்திய பெண்ணின் பின்னணியை வைத்தும் அவர் சார்ந்​திருக்கும் துறையை வைத்தும் அந்தக் குற்றம் அணுகப்​படுவது அநீதியானது.

சமூகத்தில் உயர் நிலையில் இருக்கும் அந்த நபரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே இதுபோன்ற குற்றச்​சாட்டுகள் ‘திட்​ட​மிட்டு’ சுமத்​தப்​படு​வ​தாகச் சிலர் வாதாடு​வதும் குற்றம் சுமத்​தப்​பட்​ட​வருக்கு ஆதரவாகப் பேசி, பாதிக்​கப்​பட்டவரை அச்சுறுத்து​வதும் நம் சமூகத்தில் வேரோடிப் போயிருக்கும் ஆணாதிக்க மனப்பான்​மையின் வெளிப்​பாடு.

முற்போக்குச் சிந்தனை உள்ளவர்​களாகத் தங்களை வெளிக்​காட்​டிக்​கொள்​பவர்​களில் பலர், நபரைப் பொறுத்து ‘மீ டூ’ (MeToo) குற்றச்​சாட்டுகளை அணுகும் விதம் முறையான ஒன்றாக இல்லை. பொதுவாகப் பெண்ணி​யத்​தையும் பெண்ணின் உரிமைகளையும் வலியுறுத்தும் பலரும்​கூடத் தங்கள் தரப்பு ஆண்களுக்கு எதிராக ‘மீ டூ’ குற்றச்​சாட்டு முன்வைக்​கப்​பட்​டால், அது திட்ட​மிட்ட சதி என்று முத்திரை குத்துவது அவர்கள் முன்வைக்கும் பெண்ணியப் பார்வைக்கே எதிரானது.

இரண்டும் ஒன்றல்ல... தன் மீது நிகழ்த்​தப்பட்ட பாலியல் அத்து​மீறல் குறித்து ஒரு பெண்ணால் எளிதாக வெளியே சொல்லிவிட முடியாத சமூகச் சூழலில், தங்கள் கண்ணி​யத்தைப் பணயமாக வைத்துத்தான் பெண்கள் இவற்றை வெளியே சொல்கிறார்கள். அப்படி வெளிவரும் ஒன்றிரண்டு குரல்​களையும் நசுக்கும் முயற்சியே மேற்கண்டதைப் போன்ற எதிர்​வினைகள். தமிழ்​நாட்டில் இந்தத் தன்மை பரவலாக இருக்​கிறது.

ஆணின் பிரபலமும் பெண்ணின் கண்ணி​யமும் ஒரே தராசில் வைத்து அணுகக்​கூடிய​வையல்ல. பத்திரி​கை​யாளர் பிரியா ரமணி மீது முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தொடுத்த மானநஷ்ட வழக்கில், ‘ஓர் ஆணின் புகழை நிலைநிறுத்​திக்​கொள்ள ஒரு பெண்ணின் வாழ்வுரிமை​யையும் கண்ணி​யத்​தையும் விலையாகக் கொடுக்க முடியாது’ என மும்பை மாவட்ட நீதிமன்றம் 2021இல் தெரிவித்த கருத்தும் இதைத்தான் உறுதிப்​படுத்து​கிறது.

பணியிடங்​களில் தங்கள் மீது நிகழ்த்​தப்​படுகிற பாலியல் அத்து​மீறல்கள் குறித்துப் பொதுவெளியில் பகிரங்​கப்​படுத்தும் துணிவை மிகச் சில ஆண்டு​களுக்கு முன்புதான் பெண்கள் பெற்றனர். சமூக ஊடகங்கள் அதற்குப் பெரும் துணையாக அமைந்தன. தாங்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்​கப்பட்ட துயர அனுபவங்களை உலகம் முழுவதும் #MeToo என்கிற ஹேஷ்டேக் மூலம் பெண்கள் எழுதினர். திரைத் துறையினர், கல்வி​யாளர்கள், ஊடகத் துறையினர், அரசியல்​வா​திகள், விளையாட்டுத் துறையினர், மருத்​துவத் துறையினர் எனப் பிரபலமான பலரும் இதில் அம்பலப்​படுத்​தப்​பட்​டனர்.

ஆசுவாசம் அளித்த தீர்ப்பு: இந்தியா​விலும் 2017இல் ‘மீ டூ’ இயக்கம் வலுப்​பெற்றது. பத்திரி​கை​யாளர் பிரியா ரமணி, 1993இல் நேர்முகத் தேர்வு ஒன்றுக்குச் சென்ற​போது, தான் சந்தித்த பாலியல் சீண்டல் குறித்து 2017இல் ‘வோக்’ (Vogue) இதழில் சம்பந்​தப்பட்ட நபரின் பெயரைக் குறிப்​பிடாமல் எழுதினார். பெயர் குறிப்​பிடப்படாத அந்த நபர் எம்.ஜே.அக்பர் என்று ஓராண்டு கழித்து பிரியா ரமணி தனது சமூக வலைதளப் பக்கங்​களில் எழுதினார். அவரைத் தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட பெண்கள் அக்பர் மீது பாலியல் குற்றச்​சாட்டுகளை முன்வைத்​தனர்.

பிரியா ரமணியின் குற்றச்​சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறிய அக்பர், அவர் மீது மானநஷ்ட வழக்குத் தொடுத்​தார். அந்த வழக்கில் பிரியா ரமணி குற்றமற்றவர் என விடுவித்த நீதிமன்றம், தீர்ப்​பின்போது தெரிவித்த கருத்துகள் மிக முக்கிய​மானவை. 1993இல் நடைபெற்ற சம்பவம் குறித்து 24 ஆண்டுகள் கழித்து பிரியா ரமணி ஏன் எழுத வேண்டும் எனப் பலரும் அப்போது கேள்வியெழுப்​பினர்.

‘ஒரு பெண் தன் மீது நிகழ்த்​தப்பட்ட பாலியல் அத்து​மீறலை எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டு​மானாலும் தெரிவிக்​கலாம். அந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட மனப் பதற்றத்​தையும் நடுக்​கத்​தையும் கடந்து வர அத்தனை ஆண்டுகள் அவர்களுக்குத் தேவைப்​படலாம். தன் மன வேதனை குறித்துச் சமூக ஊடகத்திலோ கட்டுரையிலோ திரைப்​படத்திலோ எங்கு வேண்டு​மானாலும் ஒரு பெண் பதிவுசெய்​ய​லாம்’ என நீதிமன்றம் தெரிவித்​திருந்தது பாதிக்​கப்பட்ட பெண்களுக்குச் சற்றே ஆசுவாசம் அளிப்பதாக அமைந்தது.

கடமைக்குக் கொடுத்த விலை: பெண்கள் பொதுவெளியில் செயல்படத் தொடங்கிய நாளில் இருந்தே அவர்கள் மீதான பணியிடப் பாலியல் தொந்தரவு தொடங்கி​விட்டது. அவற்றைப் பதிவுசெய்​வதற்கோ முறையிட​வோகூடச் சரியான அமைப்புகள் இல்லாத நிலையில் பணியிடங்​களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்​படுத்தும் வகையில் ‘விசாகா நெறிமுறைகள்’ மிகத் தாமதமாக 1997இல் உச்ச நீதிமன்​றத்தால் உருவாக்​கப்​பட்டன. அதற்குக்கூட ஒரு பெண்தான் பலியாக வேண்டி​யிருந்தது.

ராஜஸ்​தானின் பதேரி கிராமத்தைச் சேர்ந்த பன்வாரி தேவி என்பவர், தன் கிராமத்தில் ஒன்பது மாதப் பெண் குழந்தைக்கும் ஒரு வயது ஆண் குழந்தைக்கும் நடைபெற​விருந்த திருமணம் குறித்து அரசு அதிகாரி​களுக்குத் தெரிவித்​தார். இதனால், சம்பந்​தப்பட்ட பெண் குழந்​தையின் உறவினர்​களால் பன்வாரி தேவி தன் கணவரின் எதிரிலேயே கூட்டு வல்லுறவுக்கு ஆளாக்​கப்​பட்​டார். ஆதிக்கச் சாதியினரால் 1992இல் நிகழ்த்​தப்பட்ட இந்தக் கொடூரச் சம்பவம் அன்றைக்கு நாடு முழுவதும் பேசுபொருளானது.

ராஜஸ்தான் மாநில அரசின் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தில் கிராமப் பணியாளராக பன்வாரி தேவி 1985 முதல் செயல்​பட்டு​வந்​தார். அவரது பணியைச் செய்ததற்கான தண்டனை​யாகத்தான் அவர் வல்லுறவுக்கு ஆளாக்​கப்​பட்​டார். அதைக் கண்டித்துப் பணியிடங்​களில் பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் எனப் பெண்கள் அமைப்​பினர் போராடினர். ‘விசாகா’ உள்பட ஐந்து பெண்ணிய அமைப்புகள் உச்ச நீதிமன்​றத்தில் பொதுநல வழக்குத் தொடர, அதன் பிறகே ‘விசாகா வழிகாட்டு நெறிமுறைகள்’ உருவாக்​கப்​பட்டன.

ஆனால், இன்றுவரை பன்வாரி தேவிக்கு நீதி கிடைக்க​வில்லை. குற்றம் சுமத்​தப்​பட்​ட​வர்கள் ஐவரும் அமர்வு நீதிமன்​றத்தால் விடுவிக்​கப்​பட்டு​விட்​டனர். பெண்ணிய அமைப்பு​களின் அழுத்​தத்​தால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து வேறு வழியின்றி அரை மனதாக 1996இல் ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு செய்தது. இத்தனை ஆண்டு​களில் இந்த வழக்கில் ஒரே ஒரு முறைதான் நீதிமன்ற விசாரணை நடைபெற்றிருக்​கிறது. வழக்கு இன்னும் நிலுவை​யில்தான் இருக்​கிறது.

பன்வாரி தேவி வழக்கில் குற்றம் சுமத்​தப்​பட்​ட​வர்​களில் நான்கு பேர் இறந்து​விட்ட நிலையில் 71 வயதிலும் நீதிக்​காகக் காத்திருக்​கிறார் பன்வாரி தேவி. குற்றமிழைத்​தவர்கள் எவ்விதத் தண்டனைக்கும் ஆளாகாமல் தன் கண் முன்னே நடமாடு​வதைப் பார்ப்பது பெரும் துயரம். அதை பன்வாரி தேவி அனுபவித்து​வரு​கிறார்.

நாடறிந்த வழக்கிலேயே இதுதான் நிலை என்கிற​போது, பெண்கள் எப்படிப் புகார் கொடுக்க முன்வரு​வார்கள்? புகார் கொடுத்து​விட்டு இறக்கும் வரைக்கும் நீதிமன்​றத்​துக்கு அலைந்து போராடு​வதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிதர்​சனத்தை மீறித்தான் சொற்ப எண்ணிக்கையிலான பெண்கள் வெளியே வந்து துணிவுடன் பேசுகிறார்கள். ஆனால், அவர்களது நடத்தையைக் கேள்விக்​குள்​ளாக்கி, புகாரின் சாரத்தை நீர்த்​துப்​போகச் செய்வதைத்தான் பலரும் செய்து​கொண்​டிருக்​கிறார்கள்.

விருப்​பமும் சம்மதமும்: இந்தியாவில் பணியிடப் பாலியல் குற்றங்கள் குறித்துப் பொதுவெளியில் பகிரங்​கப்​படுத்​துபவர்​களில் பலரும் திரைத் துறையைச் சார்ந்​தவர்களாக இருப்​ப​தாலேயே புகார்கள் போதுமான அளவுக்குக் கவனம் பெறுவ​தில்லை. திரைத் துறையில் இதெல்லாம் ‘இயல்​பு’தானே என்கிற தொனியே புகாரின் தீவிரத்​தன்​மையைக் குறைத்து​விடு​கிறது. இது குற்றம்​சாட்​டப்​பட்​ட​வர்​களுக்கு வசதியாகி​விடு​கிறது. ‘அந்தப் பெண்களின் சம்மதம் இல்லாமல் எதுவும் நடந்திருக்​காது’ என்கிற வாதமும் முன்வைக்​கப்​படு​கிறது. விருப்​பத்​துக்கும் சம்மதத்​துக்கும் வேறுபாடு உண்டு.

விருப்பம் என்பது தன்னிச்​சை​யானது. ஆனால், நெருக்​கடியை ஏற்படுத்​தியும் ஒருவரைச் சம்மதிக்க வைக்க முடியும். ‘மீ டூ’ பாலியல் குற்றச்​சாட்டுகளை இந்த அடிப்​படைப் புரிதலோடு அணுக வேண்டும். பன்வாரி தேவி தன் கடமையைச் செய்ததற்காக வல்லுறவுக்கு ஆளாக்​கப்​பட்​டார். ஆனால், பெரும்​பாலான துறைகளில் பணியில் நீடித்​திருக்​கவும் வேலை கிடைக்​கவும் பெண்கள் பாலியல் சுரண்​டலுக்கு ஆளாக்​கப்​படு​கிறார்கள். அவர்கள் தங்கள் மீது நிகழ்த்​தப்பட்ட பாலியல் அத்து​மீறலையும் நெருக்​கடிக்கு உள்ளாக்கிப் பெறப்பட்ட சம்மதத்​தையும் பொதுச் சமூகத்தின் கவனத்​துக்குக் கொண்டு​வரும் செயலாகத்தான் ‘மீ டூ’ புகார்களை அணுக வேண்டும்.

புறக்​கணிப்பின் வேதனை: பணியிடப் பாலியல் அத்து​மீறல் குறித்துப் புகார் கூறும் பெண்கள் வேலை நீக்கம், புறக்​கணிப்பு, மிரட்டல், வாய்ப்பு மறுக்​கப்​படுவது, சமூகத்தால் ஒதுக்​கப்​படுவது உள்ளிட்ட ஏராளமான நெருக்​கடிகளுக்கு ஆளாக்​கப்​படு​கிறார்கள். முறைப்​படுத்​தப்பட்ட நிறுவனங்​களில் பணியாற்று​பவர்களே இவற்றுக்கு அஞ்சி வாய்திறக்​காமல் இருக்​கிற​போது, முறைசாராப் பணியாளர்கள் சந்திக்கும் பாலியல் தொந்தர​வுகள் வெளியுலகின் பார்வைக்கே வராமல் மறைக்​கப்​பட்டு​விடு​கின்றன.

இப்படியொரு சூழலில் பாதிக்​கப்​பட்​ட​வரையே குற்றவாளி​யாகச் சித்தரிக்கும் போக்கு பெண்ணுரிமைக்கு எதிரானது. இப்படிச் செய்பவர்​களில் சிலர் முற்போக்கு, சமூக நீதி பேசுபவர்​களாகவும் இருக்​கிறார்கள். பணியிடப் பாலியல் குற்றங்​களில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்​தின்படி (2013) பணியிடங்​களில் முறையான உள்ளகப் புகார் குழு அமைப்பது, நேர்மையான விசாரணை, தாமதமில்லாத நீதி ஆகியவற்றோடு பெண்களின் புகார்​களுக்கு முகம்​கொடுப்​பதும் அவசியம். அதுதான் பொதுவெளி​யிலும் சமூக உழைப்​பிலும் பெண்கள் தடையின்றி ஈடுபடுவதை உறுதிப்​படுத்​தும்​.

- தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x