Last Updated : 30 Sep, 2024 06:21 AM

4  

Published : 30 Sep 2024 06:21 AM
Last Updated : 30 Sep 2024 06:21 AM

பூரண மதுவிலக்கு சாத்தியமா?

கள்ளக்​குறிச்​சியில் கள்ளச்​சா​ராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மதுவிலக்கு குறித்தான கோரிக்கைகள் நாளும் வலுத்து​வரு​கின்றன. மதுவிலக்கைத் தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்; மாநிலங்​களுக்கு மத்திய அரசே இழப்பீடு தர வேண்டும் என்கிற கோரிக்கைகளும் மேலோங்கி நிற்கின்றன.

இந்தச் சூழலில், வரலாற்றைச் சற்றே திரும்பிப் பார்த்தால் சில உண்மைகள் புலப்​படும். காந்தி பிறந்த குஜராத் மாநிலம் தவிர்த்து, சுதந்திர இந்தியாவில் மதுவிலக்கு அமலில் இருந்த ஒரே மாநிலம் தமிழ்​நாடுதான் என்றால் நம்ப முடிகிறதா?

இந்தியா சுதந்​திரம் பெறுவதற்கு முன்னரே தமிழ்​நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்​தப்​பட்டது. சுதந்​திரத்​துக்குப் பின்னர் ஏறத்தாழ 24 ஆண்டுகள் வரை தமிழ்​நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால், அதன் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. மதுவிலக்கு ரத்து செய்யப்​பட்​டதோடு மட்டுமல்​லாமல், மது விற்பனைக்​கென்றே ஒரு நிறுவனத்தை அரசு நிறுவி, அதைச் செயல்​படுத்தி வருகிறது.

அது மட்டுமல்ல, மது விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ண​யித்துச் செயல்​படும் மாநில​மாகத் தமிழ்நாடு இருப்பது வேதனை​யிலும் வேதனை. இந்தச் சூழ்நிலை​யில்​தான், தமிழ்​நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன.

வரலாறு என்ன சொல்கிறது? - தமிழ்​நாட்டில் 1937ஆம் ஆண்டு முதலில் மதுவிலக்கு அமலானது. மதுவிலக்கை ரத்து செய்து​விட்டு, கள்ளுக்​கடைகளைத் திறக்கத் திட்ட​மிட்டது அன்றைய ஆங்கிலேய அரசு. அதை ராஜாஜி கடுமையாக எதிர்த்​தார். ஆனால், அந்த எதிர்ப்​பையும் மீறி, 1944ஆம் ஆண்டு மதுவிலக்கு ரத்து செய்யப்​பட்டுக் கள்ளுக்​கடைகள் திறக்​கப்​பட்டன. இந்தியா சுதந்​திரம் பெற்றதற்குப் பிறகு, மீண்டும் மதுவிலக்கு நடைமுறைக்கு வந்தது. சுதந்திர இந்தியா​வில், 1971ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. தமிழக முதலமைச்சராக இருந்த ராஜாஜியில் தொடங்கி, ஓமந்தூர் ராமசாமி​யார், குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்​சலம், அண்ணா வரை எந்த முதலமைச்​சரும் மதுவிலக்கை ரத்து செய்ய முன்வர​வில்லை.

திமுக 1967ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய​போது, மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும் என அதிகாரிகள் பரிந்​துரைத்​தனர். மதுவிலக்கை ரத்து செய்தால், 600 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என அதிகாரிகள் அன்று கூறிய ஆலோசனையை நிராகரித்தார் அண்ணா. ‘மதுவிற்பனை மூலம் வரும் வருவாய், தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்கு​வதற்குச் சமம்’ என்றார். ஆனால், அண்ணாவுக்குப் பின்னர், தமிழக முதல்வரான மு.கருணாநிதி மதுவிலக்கை நீக்கினார். 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய திமுக அரசு மதுவிலக்கை ரத்து செய்து அவசரச் சட்டம் கொண்டு​வந்தது. இதன் பின்னணியை ஆராய்ந்​தால், வியப்பாக இருக்​கும்.

அப்போது இந்தியாவில் பல மாநிலங்​களில் மதுவிலக்கு நடைமுறையில் இல்லாத​தால், மதுவிலக்கை நடைமுறைப்​படுத்தும் மாநிலங்​களுக்கு மானியம் வழங்கப்​படும் என மத்திய அரசு அறிவித்தது. ‘தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது; எனவே, எங்களுக்கும் மானியம் தர வேண்டும்’ என அப்போதைய முதல்வர் கருணாநிதி கேட்ட​போது, அதை ஏற்க மறுத்து​விட்டது மத்திய அரசு.

மதுவிலக்கும் நீக்கமும்: ஏற்கெனவே மதுவிலக்கை நடைமுறைப்​படுத்​தி​யுள்ள மாநிலங்​களுக்கு மானியம் கிடையாது என்று மத்திய அரசு கூறியது. ‘மதுவிலக்கை நடைமுறைப்​படுத்​தி​யதற்கு இப்படியொரு தண்டனையா?’ என்று கேள்வி எழுப்பிய தமிழ்​நாடு, பின்னர் மதுவிலக்கை நீக்கும் முடிவை எடுத்தது.

பல ஆண்டுக் காலம் நடைமுறையில் இருந்த மதுவிலக்கு திடீரென ரத்து செய்யப்​பட்டது மக்களிடையே பெரும் விமர்​சனத்தை ஏற்படுத்​தியது. அதையும் மு.கருணாநிதி சமாளித்​தார். ‘அக்னி வளையத்​துக்குள் இருக்கும் கற்பூர​மாகத் தமிழ்நாடு இருக்​கிறது. நான் என்ன செய்வது? மற்ற மாநிலங்​களில் மதுவிற்பனை நடக்கும்போது நான் மட்டும் என்ன செய்ய முடியும்?’ எனச் சாமர்த்தி​ய​மாகப் பதிலளித்தார் அவர். இந்த விளக்கம் அவரது முடிவை நியாயப்​படுத்​தியது.

எனினும், 1974ஆம் ஆண்டு மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்​தியது. 1983இல் எம்.ஜி.ராமச்​சந்​திரன் ஆட்சி​யின்போது மீண்டும் மதுவிலக்கு ரத்தானது. 1987ல் மீண்டும் மதுவிலக்கு அமலானது. 1990 முதல் 1991 வரை பிளாஸ்டிக் பைகளில் மலிவு விலை மதுவை விற்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. 1991இல் முதல் முறையாகத் தமிழக முதலமைச்​சராகப் பொறுப்​பேற்ற ஜெ.ஜெயலலிதா முதல் கையொப்ப​மிட்டு இதனை ரத்து செய்தார்.

தொடர்ந்து கள்ளச்​சா​ராயம் பெருகியதால் பலர் உயிரிழந்​தனர். அப்போது தனியார் வசம் மதுக்​கடைகள் இருந்​த​தால், பெரும் பணத்தை அவர்களே ஈட்டி வந்தார்கள். 2001இல் ஜெ.ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரான பிறகு அவ்வரு​மானங்கள் அரசு நிறுவனமான ‘டாஸ்​மாக்’ நிறுவனத்தின் கட்டுப்​பாட்டுக்குள் கொண்டு​வரப்​பட்டன. இன்று தேசிய அளவில் அதிக வருவாயை ஈட்டித்​தரும் பொதுத் துறை நிறுவனம் டாஸ்மாக்​தான். இவ்வரு​மானத்தின் மூலம் அரசு நடைபெறு​வதும் பெரும் சர்ச்​சைகளை ஏற்படுத்​திவரு​கிறது.

தமிழகத்தில் குடிப்​பழக்கம் இன்று பரவலாகி​விட்டது. தமிழகத்தில் 28.5 சதவீதம் ஆண்கள் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்​ளனர். இவ்விஷ​யத்தில் அகில இந்திய அளவில் தமிழகத்​துக்கு 19ஆவது இடம். முதலிடம் சத்தீஸ்கர். இந்தியாவில் 7இல் ஒருவர் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர். பதின் பருவத்​தினரிடமும் மதுப்​பழக்கம் பரவலாகி​விட்டது என்பது கூடுதல் அதிர்ச்சி தரும் செய்தி​யாகும்.

மதுவிலக்கு சாத்தியமா என்பதை ஆராய வேண்டிய காலத்தின் கட்டா​யத்தில் நாம் இருக்​கிறோம். சமுதாய, பொருளாதார, தனிமனித ஆரோக்​கியம் ஆகியவற்றைப் பாதிக்கும் மிகப்​பெரிய பிரச்​சினையாக மது அருந்தும் பழக்கம் இருக்​கிறது. இதைத் தடுக்க மதுவிலக்கை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

அரசின் கடமை: மதுவிலக்கை அமல்படுத்​தினால் கள்ளச்​சா​ராயம் பெருகி​விடும் என்று கூறுவதை ஏற்றுக்​கொள்ள முடியாது என்று சிலர் கூறுகின்​றனர். காரணம், கள்ளச்​சா​ராயம் விற்கப்​பட்டால் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். மதுவிலக்கு அமல்படுத்​தப்​பட்​டால், இப்போது மது குடிப்​பவர்​களில் 10 சதவீதம் பேர் வேண்டு​மானால் சாராயம் அருந்​தலாம். ஆனால், மது குடிப்​போரின் எண்ணிக்கை இதனால் கணிசமாகக் குறைந்​து​விடும் என்பதை மறுப்​ப​தற்​கில்லை.

இதன்மூலம் குற்றங்கள், விபத்துகள் எல்லாம் குறையும். அரசே மது விற்கும்போது அதை வாங்கி அருந்​துவது எப்படித் தவறாகும் என்பது மது குடிப்​போரின் வாதமாக உள்ளது. எனவே, அரசு மது விற்பனையைக் கைவிடும் நிலையில், மது குடிப்​போரின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்பதில் ஐயம் இல்லை. மதுவிலக்கு அமலானாலும் சிலர் குடிப்​பதைத் தடுக்க முடியாது. முழுமையான மதுவிலக்கு என்பது இனிமேல் சாத்தி​யமில்லை என்று சிலர் கூறுகின்​றனர். ஆனாலும், அதனை முயன்று பார்க்க வேண்டியது ஒரு அரசின் தலையாய கடமையாகும்.

இன்னொரு புறம், மதுவிலக்கு அமலானால் அண்டை மாநிலங்​களில் சர்வ சாதாரணமாக மதுபானங்கள் கிடைப்​பதைக் காரணமாக்கி அங்கு சென்று மது அருந்​துவதோ, அங்கிருந்து ரகசியமாக வாங்கிவந்து விற்பதோ மிக எளிதாகி​விடும். விலை குறைவு என்ற ஒரே காரணத்​துக்​காகப் புதுவையில் இருந்து ஏராளமான மதுபானங்கள் அண்டை மாநிலங்​களுக்குச் செல்கின்றன. இவற்றைக் கட்டுப்​படுத்த முடிய​வில்லை. அப்படி​யிருக்க முழுமையாக மதுவிலக்கு அமலானால், வெளியில் இருந்து மதுவைக் கொண்டு​வரு​வதை​யும், அங்கு சென்று குடிப்​ப​தையும் தடுக்க முடியாது என்று ஒருசாரார் கருதுகிறார்கள்.

குடிக்​கின்ற ஒவ்வொரு​வரும் மனம் மாறினால்தான் குடிப்​பழக்​கத்தை முழுமையாக ஒழிக்க முடியும். மிகப்​பெரிய மக்கள் எழுச்சி வந்தால்​தான், அரசும் சேர்ந்து மதுக்​கடைகளை மூடுவதற்கு வாய்ப்பு உருவாகும். சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்​தா​லும்கூட, மதுவிலக்கை நடைமுறைப்​படுத்து​கிறபோது மிகப்​பெரிய மாற்றத்​துக்கான ஒரு புதிய பாதை ஒன்று நிச்சயம் உருவாகும்!

- தொடர்புக்கு: mlamailid@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x