Published : 27 Oct 2024 07:53 AM
Last Updated : 27 Oct 2024 07:53 AM
இன்றைய காலக்கட்ட ஈழ எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் வாசு முருகவேல். இலங்கையின் வட பகுதியிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வைப் பின்னணியாகக் கொண்ட ‘ஜெப்னா பேக்கரி’ இவரது முக்கியமான நாவல். ஈழப் பின்னணியிலும் சென்னைப் பின்னணியிலும் எழுதிவருகிறார். இவரது வெளிவராத புதிய நாவலான ‘அன்னா’ இலங்கையின் இறுதிப் போர்ச் சூழலைப் பின்னணியாகக் கொண்டது; எதிர் பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. அதன் ஒரு பகுதி இது.
வேலி அருகே குவித்திருந்த பூவரசம் இலைச் சருகுகளைக் காற்று கலைத்துப் போட்டிருந்தது. தென்னைகளில் மறைந்து வீசிக்கொண்டிருந்த காற்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. காய்ந்த சருகுகள் மேல் சுருக்கம்விழுந்த உள்ளங்கையை விரித்துப் பார்த்துவிட்டுப் படலையைத் திறந்துகொண்டு உள்ளே போனாள். மக்களை வீரியம்கொண்டு அடித்து ஒழுங்காக்கிய கையும் இதுதான் என்று நெஞ்சுச்சதைகளின் உள்ளே நினைவுகள் விம்மின.
மூத்தவன் சுடப்பட்டு இறந்தான் என்று சொல்லிக்கொண்டாலும், காயப்பட்டவனின் தலையை அடித்து உடைத்தது துவக்கின் இரும்புதான். உடலைக் கைப்பற்றிக் கொண்டுவருவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியில் நகுலன் என்ற தளபதியை இழந்திருந்தது படையணி. உடல்களைக் கொண்டுவந்து சேர்த்தது மட்டுமே வெற்றியாகிப்போன நாளில் அழுகைகள் அதிகம் கேட்டன.
அன்னாவின் வீட்டின் சடங்குகளை மட்டும் ஊரே பார்த்துக்கொண்டிருந்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஊரில் எத்தனை பெடிபெட்டைகளைச் சேர்த்துவிட்டவள் என்று வாயடித்தவர்கள் காத்திருந்த நாளும் அதுதான். சொந்த மகன் போனால் மட்டும்தான் இவளுக்கெல்லாம் விளங்கும் என்றவர்களை விம்மி அழவைத்துவிட்டது மரண வீடு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment