Published : 28 Aug 2024 08:37 AM
Last Updated : 28 Aug 2024 08:37 AM

ஆட்டம் காணும் மலையாளத் திரையுலகம் | பெண்கள் பாதுகாப்பு

பெரும் போராட்​டத்​துக்கு இடையில் வெளியாகி​யிருக்கும் ஹேமா ஆணையத்தின் அறிக்கை, மலையாளத் திரையுலகில் நிகழ்த்​தப்​படும் பாலியல் சுரண்​டல்கள் குறித்த பெரும் விவாதத்​துக்கு வழிவகுத்​திருக்​கிறது. சில ஆண்டு​களுக்கு முன்பு ‘மீ டூ’ இயக்கம் முன்னெடுக்​கப்​பட்​டதைப் போல இந்த அறிக்கையைத் தொடர்ந்து, மலையாள சினிமா தொழில் சார்ந்து நிகழ்ந்த பாலியல் சுரண்​டல்களை நடிகைகள் பலர் அம்பலப்​படுத்​திவரு​கிறார்கள். இது தேசிய அளவில் ஓர் இயக்கமாக முன்னெடுக்​கப்​பட்டு​வரு​கிறது.

பின்னணி என்ன? - 2017இல் மலையாள நடிகை ஒருவர் கடத்தப்​பட்டுப் பாலியல் துன்புறுத்​தலுக்கு உள்ளாக்​கப்பட்ட சம்பவம் கேரளத்​தையும் தாண்டி பெரும் அதிர்ச்சியை உண்டாக்​கியது. முன்னணி நடிகர் திலீப் சம்பந்​தப்​பட்​டிருப்​ப​தாகப் பேசப்பட்ட அந்தச் சம்பவத்​துக்குப் பிறகு, மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ (Association of Malayalam Movie Artists) மீதான அதிருப்தி காரணமாக டபுள்​யூசிசி (Women in Cinema Collective) எனப் பெண்களுக்கான புதிய சங்கத்தை மலையாள நடிகைகள் நிறுவினர்.

இதன் தொடர்ச்​சியாக மலையாளத் திரைத் துறையில் நடக்கும் பாலியல் சுரண்​டல்களை அம்பலப்​படுத்தி, ஒரு பத்திரி​கை​யாளர் சந்திப்பை அவர்கள் நடத்தினர். திரைத் துறையில் நடக்கும் பாலியல் சுரண்​டல்களை விசாரிக்க ஆணையம் அமைக்க அரசுக்குக் கோரிக்கையும் விடுத்​தனர். இதன் தொடர்ச்​சியாக 2017 நவம்பரில் ஓய்வு​பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வத்சலாகு​மாரி, நடிகை சாரதா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் ஆணையம் அமைக்​கப்​பட்டது. இந்த ஆணையம் பெரும் சவால்​களுக்கு மத்தியில் தனது விசாரணையைத் தொடங்​கியது.

நடிகைகள் பலரும் விசாரணை ஆணையத்தில் சாட்சியம் கூறக் கூடாது என மிரட்​டப்​பட்​ட​தாகத் தகவல் வெளியானது. பல நடிகைகள் சென்னை போன்ற நகரங்​களுக்குப் புலம்​பெயர்ந்​து​விட்​டனர். அவர்களைத் தேடிக் கண்டு​பிடித்து வாட்ஸ்-அப் உரையாடல்கள் போன்ற உறுதியான ஆதாரங்களை ஆணையம் திரட்​டியது. அதன் அடிப்​படையில் தயாரிக்​கப்பட்ட 300 பக்க அறிக்கை 2019 டிசம்பர் 31இல் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் சமர்ப்​பிக்​கப்​பட்டது.

இதில் மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் பலரது பெயர்​களும் அடி​பட்​டுள்ள​தாகச் சொல்லப்​படு​கிறது. எனினும், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவும் கடும் உழைப்பும் கொண்டு உருவாக்​கப்பட்ட இந்த அறிக்கையை வெளியிடாமல் கேரள அரசு கிடப்பில் போட்டது.

சரியும் பிம்பங்கள்: டபுள்​யூசிசி, தகவல் அறியும் உரிமை ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றின் தலையீடு​களுக்குப் பிறகு, தனிப்பட்ட விஷயங்​களைப் பாதுகாக்கும் பொருட்டு அந்த அறிக்கையில் 87 பக்கங்கள் நீக்கப்​பட்டு வெளியிடப்​பட்டது. ஆனால், இந்த அறிக்கையின் அடிப்​படையில் எந்த நடவடிக்கையும் எடுக்க கேரள அரசு முன்வர​வில்லை. பண்பாட்டுத் துறை அமைச்சர் சஜி செரியன் அறிக்கையை முழுமை​யாகப் படிக்க​வில்லை எனத் தெரிவித்​ததும் சர்ச்​சை​யானது.

ஆனால், அந்த அறிக்கையின் பரிந்​துரைகளை நிறைவேற்ற முயற்சி எடுப்போம் என முரணாக அவர் தெரிவித்​தார். இது குறித்து நடிகர் சங்கமும் மோகன்​லால், மம்மூட்டி உள்படப் பலரும் மெளனம் காத்தனர். இது நடிகைகள் மத்தியில் மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்​தியது. முன்னணி குணச்​சித்திர நடிகரும் ‘அம்மா’ பொதுச்​செய​லா​ள​ருமான சித்திக், ‘இது எல்லாத் துறைகளிலும் நடப்பது​தான்’ என்கிறரீ​தியில் பேசினார்.

இதற்கிடை​யில்தான் நடிகர் சித்திக் தன்னிடம் தவறாக நடந்து​கொண்டதாக நடிகை ரேவதி சம்பத் துணிச்சலுடன் ஊடகங்​களிடம் பரபரப்புப் பேட்டியளித்​தார். சித்திக் ஓர் அறையில் தன்னைப் பூட்டி​வைத்து அருவருக்​கத்தக்க வகையில் நடந்து​கொண்டதாக அவர் குற்றம்​சாட்​டி​னார்.

இதனை அடுத்து அம்மா பொதுச் ​செய​லாளர் பொறுப்​பிலிருந்து சித்திக்கை நீக்க வேண்டும் என்கிற எதிர்ப்பு வலுத்தது. இதையடுத்து, அவரே தனது பதவியி​லிருந்து விலகுவதாக அறிவித்து​விட்​டார். ரேவதி சம்பத் தமிழ் / மலையாள நடிகர் ரியாஸ் கான் மீதும் பாலியல் குற்றச்​சாட்டை வைத்துள்ளார்.

இதேபோல, கேரளத் திரைப்பட அகாடமியின் தலைவரும் முன்னணி இயக்குநருமான ரஞ்சித்​துக்கு எதிராக வங்காள நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் குற்றச்​சாட்டை முன்வைத்​தார். மம்மூட்​டிக்கு கேரள அரசு விருது பெற்றுத் தந்த ‘பாலேறி​மாணிக்கம் ஒரு பாதிரா கொல பாதகம்’ படத்தில் நடிக்கத் தேர்ந்​தெடுக்​கப்பட்ட சமயத்​தில், கதை குறித்து விவாதிப்​ப​தற்​காகத் தன்னைத் தனி அறைக்கு அழைத்த ரஞ்சித், தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்​ட​தாக​வும், அதனால், உடனடியாக அந்தப் படத்திலிருந்து வெளியேறி​விட்​ட​தாகவும் மலையாளத் தனியார் தொலைக்​காட்​சிக்கு அளித்த நேர்காணலில் ஸ்ரீலேகா தெரிவித்​தார்.

மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்​பினரான ஸ்ரீலேகாவின் புகார் அரசியல் அரங்கில் பேசுபொருளானது. மாநில விருதுகள், திருவனந்​த​புரம் திரை விழா போன்ற பலவற்றில் ரஞ்சித் முறைகேடாகச் செயல்​பட்டதாக ஏற்கெனவே இயக்குநர்கள் வினயன், டாக்டர் பிஜூ உள்ளிட்டோர் புகார் அளித்தும் கேரள அரசு நடவடிக்கை எடுக்க மறுத்த நிலையில், இந்தப் புகாருக்குச் செவிசாய்க்க வேண்டிய சூழல் உருவாகி​விட்டது. அதனால், அகாடமி தலைவர் பதவியை ரஞ்சித் இழந்தார்.

அத்து​மீறல்​களும் மிரட்​டல்​களும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்​.ஏ.வும் மலையாள முன்னணி குணச்​சித்திர நடிகருமான முகேஷ் மீது, நடிகை கடத்தப்பட்ட வழக்கில் திலீப்​புக்கு ஆதரவாகச் செயல்​பட்​ட​தாகக் குற்றஞ்​சாட்​டப்​பட்டது. ஆனால், முகேஷ் மீது ‘அம்மா’வும் கட்சியும் எந்த நடவடிக்கையும் எடுக்க​வில்லை.

ஹேமா ஆணைய அறிக்கை வெளியாகி​யிருக்கும் இந்தச் சமயத்தில் நடிகை மினு குரியன், “எனக்கு இணங்காமல் உன்னால் இந்தத் துறையில் இயங்கவே முடியாது” என முகேஷ் தன்னிடம் சொன்ன​தாக​வும், இன்னும் மோசமாகச் சில விஷயங்​களைப் பேசிய​தாகவும் சொல்லி​யுள்​ளார்.

மேலும், அம்மா சங்கத்தில் சேர்வதற்காக, மறைந்த நடிகரும் மார்க்​சிஸ்ட் கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்​பினருமான இன்னசென்ட்டை அணுகிய​போது, நடிகரும் அப்போது சங்க நிர்வாகி​யாகவும் இருந்த இடவேளை பாபுவை அவர் பார்க்கச் சொன்ன​தாகக் குறிப்​பிட்​டிருக்கும் மினு குரியன், “சங்க உறுப்​பின​ராவதற்குச் சில சமரசங்​களைச் செய்ய வேண்டும்” என பாபு கூறிய​தாகக் குறிப்​பிட்​டிருக்​கிறார்.

‘என் மன வானில்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ போன்ற தமிழ்ப் படங்களில் நடித்​துள்ள மலையாள முன்னணி நடிகர் ஜெயசூர்யா தன்னிடம் பாலியல் அத்து​மீறலில் ஈடுபட்​ட​தாகவும் மினு கூறியுள்​ளார். ஜெயசூர்யா மீது இன்னொரு நடிகையும் இதே குற்றச்​சாட்டைக் கூறியுள்​ளார்.

தொடரும் ஜமீன்​தார்த்தனம்: நடிகைகள் மீதான அத்து​மீறல்​களுக்கு இயக்குநர் ஆசிக் அபு, நடிகர்கள் டோவினோ தோமஸ், ஆசிப் அலி உள்ளிட்ட பலர் நம்பிக்கையூட்டும் வகையில் வெளிப்​படை​யாகப் பேசியுள்​ளனர். மலையாள சினிமாவே தொடர்ந்து பல காலமாகத் திருவனந்​த​புரம் லாபியில்தான் இருந்​துள்ளது. முன்னணி நடிகர்கள் தவிர்த்து சித்திக், முகேஷ், மணியம்​பிள்ளை ராஜூ, ப்ரியதர்ஷன் போன்ற சிலர்தான் இதை ஆட்டு​வித்து​வந்​தனர்.

உயர் குடிகளின் பெருமை பேசும் படங்களே அதிகமாக வந்து, பொது அபிப்​ராயமாக ஆக்கப்​பட்டன. வெற்றிக்காக மம்மூட்​டியும் அம்மாதிரி பல படங்களில் நடித்​தார். இந்தப் போக்கின் காரணமாக மலையாள சினிமாவில் உதிரி மக்களின் வாழ்க்கையும் பங்களிப்பும் முழுமை​யாகப் புறக்​கணிக்​கப்​பட்டன.

இந்த ஜமீன்​தார்த்​தனம்தான் திலகன் போன்ற சிறந்த நடிகரை அம்மாவில் இருந்து விலக்கி வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் முடக்​கியது; கூலிக்கு ஆள் வைத்து நடிகையை பாலியல் பலாத்​காரம் செய்ய வைத்தது; இணங்க மறுத்த நடிகைகளைத் திரைத் துறையில் இல்லாமல் ஆக்கியது.

ஹேமா ஆணைய அறிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்​கப்​பட்​டிருக்கும் இயக்கம், இந்த ஜமீன்​தார்​த்​தனத்தின் மீது விழுந்த பேரிடி எனலாம்​. ‘அம்மா’ தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் விலகியிருப்பது இதன் சமீபத்திய சாட்சியம்!

- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x