Published : 05 Apr 2025 06:34 AM
Last Updated : 05 Apr 2025 06:34 AM

அருஞ்செய்திகளின் தொகுப்பு | நூல் வெளி

​பார​தி​யாரின் முதல் பாடல் (தனிமை இரக்​கம்) மதுரையி​லிருந்து வெளிவந்த ‘விவேக பானு’ இதழில்​தான் வெளிவந்​தது. வ.ரா.​வின் முதல் மொழிபெயர்ப்​பும் மதுரையி​லிருந்து வெளிவந்த ‘ஞான​பானு’​வில்​தான் வெளி​யானது.

இப்​படிப்​பட்ட தகவல்​கள் மதுரையி​லிருந்து வெளி​யான இதழ்​களின் இலக்​கிய முக்​கி​யத்​து​வத்​தை​யும் எண்​ணிக்​கைப் பெருக்​கத்​தை​யும் காட்​டு​கின்​றன. இதழ்​கள் மட்​டுமல்ல; புத்​தகக்​கடைகளும் மதுரை​யில் மிகு​தி​யாக இயங்​கி​யுள்​ளன. காலை​யில் கறிக்​கடை​யாக​வும் மாலை​யில் புத்​தகக் கடை​யாக​வும் ஒரே கடை இரு வேடங்​களைப் புனைந்​துள்​ளது. இதை நடத்​தி​யதும் ஒரு​வரே.

‘ஸ்​லாட்​டர் ஹவுஸ் அண்ட் புக் ஹவுஸ்’ என்ற பெயரில் அது புகழும்​பெற்​றுள்​ளது. புத்​தகங்​கள் மட்​டுமல்ல அகரா​தி​களும் அதி​கம் உரு​வாகி​யுள்​ளன. ‘மதுரைப் பேரக​ரா​தி’, (1937), ‘சித்த மருத்​துவ அகரா​தி’ (இ.​ராம.குரு​சாமி கோனார், சதாசிவம் பிள்ளை ஆகியோர் தயாரித்​தது) ஆகிய​வை​யும் மதுரை​யில்​தான் உரு​வாகி​யிருக்​கின்​றன.

நாராயண ஐயங்​கார் என்​பவர், தான் பதிப்​பித்த எல்லா நூற்​பெயர்​களுக்கு முன்​னும் ஸ்ரீ என்ற முன்​னொட்​டைத் தரு​வதை வழக்​க​மாகக் கொண்​டிருந்​தார் என்ற செய்தி திகைப்​பளிக்​கிறது. மதுரை​யில் பெண்​களுக்​குத் தனிப்​பள்​ளியைத் தொடங்​கிய​போது அதற்கு எதிர்​வினை​யும் வந்​தது.

‘அடுத்து மாடு​களுக்​கும் கல்​விப் புகட்​டு​வார்​கள்’ என்​பது அந்த ஏளனம் (அவற்​றால் படிக்க இயலும் என்​றால் அதை​யும் தான் நாம் செய்ய வேண்​டும்). மீனாட்சி அம்​மன் கோயி​லின் நான்கு வாயில்​களி​லும் பள்​ளி​கள் தொடங்​கப்​பட்​டன. ‘கேட் ஸ்கூல்’ என்று அந்​தப் பள்​ளி​கள் அழைக்​கப்​பட்​டன.

இப்​படி​யான பல அருஞ்​செய்​தி​கள் ‘மதுரைப் பதிப்பு வரலாறு’ என்​கிற பொ.​ராஜா எழு​திய நூலில் கிடைக்​கின்​றன. வழக்​க​மாகக் கல்வி வரலாறோ வேறு துறை வரலாறோ எழுதுகிறவர்​கள் தமிழ்​நாட்​டின் தலைநக​ரான சென்​னையை மையமிட்டே ஆதா​ரங்​களைத் திரட்​டு​வார்​கள். பலவகை​யிலும் சென்​னையே கேந்​திர ஸ்தான​மாக இருக்​கும். அதற்​குக் காரணங்​கள் இல்​லாமல் இல்லை.

ஆவணக் காப்​பகம், கன்​னி​மாரா நூல​கம், மறைமலை நூல​கம், இப்​பொழுது ரோஜா முத்​தையா நூலகம் போன்ற ஆதார வளங்​கள் சென்​னை​யில் செயல்​பட்டு வந்​தன/வரு​கின்​றன. யதார்த்​தத்​தில் திருநெல்​வேலி, கோயம்​புத்​தூர், புதுக்​கோட்​டை, மதுரை, திருச்​சி​ராப்​பள்ளி போன்ற இடங்​களி​லும் வரலாற்​றுக்கு ஆதா​ரங்​கள் கிடைக்​கின்​றன.

கிறிஸ்​து​வம் முதலில் திருநெல்​வேலி​யில்​தான் காலூன்​றிப் பரவியது; ஒப்​பிடு​கை​யில் சுதந்​திர சமஸ்​தான​மாகப் புதுக்​கோட்டை விளங்​கியது; மதுரை​யில் சங்​கங்​கள் தோன்​றித் தமிழ் வளர்த்​தன. இவை வட்​டாரப் பகு​தி​களி​லும் ஆய்​வுக்​குரிய ஆவணங்​கள் கிடைக்​கும் என்​ப​தைக் காட்​டு​கின்​றன.

ஆனால், வட்​டாரங்​களைப் பற்​றிய ஆராய்ச்​சிகள் பெரும்​பாலும் முன்​னெடுக்​கப்​படு​வ​தில்​லை. முழு​மையை விரும்​பும் ஆய்​வாளர்​கள், பிண்​டத்​தின் நிலையை ஆய்​வதைத் திரஸ்​கரித்தே வந்​துள்​ளனர். அதற்கு மாற்​றான முன்​னெடுப்பு இந்த ‘மதுரைப் பதிப்பு வரலாறு’ நூல், சுவைபட அமைந்​திருக்​கிறது.

அதனால் இந்​நூல் முனை​வர் பட்​டத்​திற்​காக எழுதப்​பட்ட ஆய்​வு​தானா என்​கிற சந்​தேகத்​தைத் தரு​கிறது. இந்​தி​யர்​கள் அச்​சகம் வைத்​துக் கொள்​ளலாம் என்​கிற உரிமை 1835இல்​தான் கிடைத்​தது. ஆகவே அதிலிருந்து இந்​தியா குடியர​சான 1950 வரையி​லான காலப்​பகு​தியை இந்த ஆய்​வாளர் ஆய்​வுக்​குரிய கால​மாக எடுத்​துக் கொண்​டுள்​ளார். அப்​பகு​தியி​லான அச்​சுப் பண்​பாட்டு அசைவு​களை விரி​வாகப் பதிவுசெய்​துள்​ளார்.

பேராசிரியர் பில்​லியோசா தனது மதிப்​புரை​யில் ‘மதுரைப் பேரக​ராதி ‘பறை’ என்​கிற சொல்​லுக்​குத் தந்​திருக்​கும் ‘விரும்​பிய பொருள்’ என்ற பொருள் சென்​னைப் பல்​கலைக்​கழக அகரா​தி​யில் இல்​லை’ என்று கூறி​யிருக்​கிறார். அந்​தப் பொருள் திருப்​பாவை​யில் (பாடல் 28) வரும் ‘பறை’ என்​ப​தற்​குப் பொருத்​த​மாக உள்​ளது என்​றும் சுட்​டி​யிருக்​கிறார். இந்​தத் தகவலை நூலாசிரியர் மேற்​கோளாகக் காட்​டு​கிறார். ஆனால், சென்​னைப் பல்​கலைக்​கழக அகரா​தி​யிலும், மு.சண்​முகம் பிள்ளை அகரா​தி​யிலும் ‘விரும்​பிய பொருள்’ என்ற பொருள் தரப்​பட்​டுள்​ளது.

சிவனே சொன்​னாலும் ஒரு தடவை சிரமத்​தைப் பார்க்​காமல் சரி பார்த்​து​விடு​வது நல்​லது. அது​வும் ‘மதுரை மரபு’​தான்! ‘சூரிய நாராயண சாஸ்​திரி​யார், கலா​வதி நூலை ராம​நாத​புரம் பாஸ்கர சேதுப​திக்கு உரிமை ஆக்​கி​னார்’ என்று ஒரு குறிப்பை ஆய்​வாளர் எழு​தி​யிருக்​கிறார்.

இந்த உரிமை உரை என்ற சொற்​றொடருக்​குக் காணிக்​கை, அர்ப்​பணம் ( Dedication) என்​பனவே பொருள். மற்​றபடி அந்த நூலின் பதிப்​புரிமை நூலாசிரியரிடமே இருக்​கும். அச்​சுப்​பிழைகள் இல்​லாத நூல் இந்​தக் காலத்​தில் ஒரு நூலா? இத்​தகைய வட்​டார வளங்​களைத் தொகுக்​கும் முயற்​சிகள் தமிழ்​நாடு முழு​வதும் மேற்​கொள்​ளப்பட வேண்​டும். மதுரை வாசகர்​கள் மட்​டும் வாங்​கி​னால்​ கூட போதும்​. பொன்​னை​யா ராஜா பதிப்பித்த பிர​தி​கள்​ அனைத்​தும்​ விற்​று விடும்​. செய்வார்களா?

மதுரை பதிப்பு வரலாறு (1835-1950)
பொ.ராஜா
நீலம் பதிப்பகம்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 6369825175

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x