Published : 18 Jul 2024 06:15 AM
Last Updated : 18 Jul 2024 06:15 AM

‘இளங்கோ குமணன் நேர்காணல்கள்’ நூல் அறிமுகம்

சென்னை: `சென்னை சபாக்களில் தமிழ் நாடகங்கள்' என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்காக இளங்கோ குமணன், மேடை,நாடகம், நடிப்பு துறை சார்ந்த கலைஞர்களிடம் எடுத்த நேர்காணல்களின் முதல் தொகுதி நூலின் அறிமுக விழா நேற்று நடந்தது. வேல்ஸ்பல்கலைக்கழக மொழிகள்புல முதல்வர் பேராசிரியர் முனைவர்ப.மகாலிங்கம் விழாவுக்கு தலைமைதாங்கி பேசியதாவது:

தமிழுக்கு பல பெருமைகளைச் சேர்த்த ராஜமாணிக்கனாரின் பேரன் இளங்கோ குமணன். சென்னை வானொலி நிலையத்தில் நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர் இவரின் தாயார் புனிதவதி இளங்கோவன். இவரின் குடும்பத்தினர் தமிழ் மொழிக்கு அரிய பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். அவர்களின் வழியில், இளங்கோ குமணனின் இந்த ஆய்வு நூலும் எதிர்காலத்தில் முக்கியமான கவனத்தைப் பெறும் என்றார்.

சிறப்புரையாற்றி இசைக்கவி ரமணன் பேசியதாவது: இளங்கோ குமணனின் இந்நூல், ஆய்வு நூல் என்பதைத் தாண்டி, வரலாற்று ஆவணமாகவும் எதிர்காலத்தில் திகழும். நமக்கெல்லாம் எழுத்தாளர், நாடக இயக்குநர், நடிகர் என்று பன்முகம் கொண்ட டி.வி.ராதாகிருஷ்ணனை, நாடகத் துறையில் இருப்பவர் என்றுதான் தெரியும். ஆனால் அவர் 34 நூல்கள் எழுதியிருக்கிறார் என்னும் செய்தி இந்நூலில் பதிவாகியிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இளங்கோ குமணன் ஏற்புரையில் பேசும்போது, ‘‘எனதுதம்பி குமரவேல் நாடகத் துறையில்,திரைத் துறையில் எனக்கு முன்பாகவே அறிமுகமாகி பிரபலமானவர். 2001-ல் இருந்து 2022 வரையிலான `சென்னை சபாக்களில் தமிழ் நாடகங்கள்' என்பதே என்னுடைய ஆய்வின் தலைப்பு.

தம்முடைய வாழ்நாளில் பம்மல்சம்பந்த முதலியார், 96 நாடகங் களை அரங்கேற்றியிருக்கிறார். 96 நாடகங்களையும் நூலாகப் பதிப்பித்துள்ளார் என்பதுதான் சிறப்பு. இந்த வகையில் 2001 முதல் 2022 வரை சென்னை சபாக்களில் நடந்தநாடகங்கள் நூலாக்கம் பெற வேண்டும்’’ என்றார்.

மூத்த நாடகக் கலைஞர் காத்தாடி ராமமூர்த்தி வாழ்த்தி பேசினார்.கார்த்திக் கவுரிசங்கர் வரவேற்புரையாற்ற, சி.வி.சந்திரமோகன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x