Published : 27 Apr 2023 06:40 PM
Last Updated : 27 Apr 2023 06:40 PM

பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்: மத நல்லிணக்கம் போற்றும் மதுரை சித்திரைத் திருவிழா

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு இஸ்லாமிய மக்கள், குளிர்பானங்கள் வழங்கி வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. நாள்தோறும் அம்மனும் சுவாமியும் மாசி வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். வீதி உலாவின்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக ஏராளமானோர் குடிநீர் பந்தல்களை அமைத்து நீர்மோர், அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு வருகை தரக்கூடிய பக்தர்களின் களைப்பைப் போக்கவும், மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையிலும் மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சார்பில் பக்தர்களுக்கு ரோஸ் மில்க் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கப்பட்டது.

கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானங்கள் வழங்கி தாகம் தீர்த்த இந்த சம்பவமானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா என்பது மதங்கள் கடந்த ஒற்றுமையை ஓங்கிச் சொல்லும் விழாவாக கொண்டாடப்படுவதற்கு இது சாட்சியாக அமைந்துள்ளதாக விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x