Published : 31 Jan 2023 04:27 AM
Last Updated : 31 Jan 2023 04:27 AM

புதுக்கோட்டை - வடகாட்டில் 47 அடி உயர வழுக்கு மரத்தில் 7 பேர் ஏறி சாதனை

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டியில் இலக்கை நோக்கி ஏறும் வீரர்கள்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டியில் 47 அடி உயரமுள்ள வழுக்கு மரத்தில் 7 பேர் ஏறி சாதனை படைத்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வடகாட்டில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 9 அணிகள் கலந்துகொண்டன. தொடக்கத்தில் ஒவ்வொரு அணியில் இருந்தும் 3 பேர் வீதம் வழுக்கு மரத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், இலக்கை யாரும் தொடாததால் வீரர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் 7 பேர் வீதம் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், பனங்குளம் கிங்க் பிஷர் அணியினர் 47 அடி உயரமுள்ள மரத்தின் உச்சி வரை ஏறி வெற்றி பெற்றனர். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இல்லாத அளவுக்கு அதிக உயரமுள்ள மரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்கள் ஏறி இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.

வெற்றி பெற்ற அணியினருக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம், கோப்பை மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கலந்துகொண்ட அனைத்து அணியினருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. சுமார் 5 மணி நேரம்விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியை நூற்றுக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். வெற்றி பெற்ற அணியினருக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x