Published : 20 Jan 2025 04:37 PM
Last Updated : 20 Jan 2025 04:37 PM
விருதுநகர்: வறட்சிப் பகுதிகளில் ஒன்றான விருதுநகரில் பன்னீர் ரோஜா சாகுபடி தீவிரமடைந்துள்ளது. உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். இளம் சிவப்பு நிறம் கொண்ட பன்னீர் ரோஜா பூக்கள் வாசனை மிக்கது. மாலைகளாக தொடுத்து விற்பனை செய்வதுடன், ரோஸ் வாட்டர், குல்கந்து, தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரிக்கவும் இப்பூக்கள் பயன் படுத்தப்படுகின்றன.
விருதுநகர் அருகே உள்ள சூரம்பட்டியில் பல ஏக்கர் பரப்பளவில் பன்னீர் ரோஜா சாகுபடி செய்யப்படுகி றது. பொங்கல் விழா, அதைத் தொடர்ந்து கோயில் விழாக்கள், முகூர்த்த நாட்கள், அடுத்தடுத்து மாசி, பங்குனி மாதங்களில் கோயில் திரு விழாக்கள் வருவதால் பன்னீர் ரோஜாவுக்கு தொடர்ந்து நல்ல விலை கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சூரம்பட்டியில் பன்னீர்ரோஜா சாகுபடி செய்யும் விவசாயி நாகராஜன் கூறுகையில், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பன்னீர் ரோஜா செடியை நடவு செய்வோம். 60 நாட்களில் செடிகள் பூக்கத் தொடங்கும். அதன் பின்னர் தொடர்ச்சியாக 8 மாதங்கள் நல்ல விளைச்சல் இருக்கும். ஒரு ஏக்கருக்கு சுமார் ஆயிரம் முதல் ஆயிரத்து 100 செடிகள் வரை நடவு செய்வோம். ஒரு நாளைக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பூக்கள் வரை கிடைக்கும்.
சாதாரண நாட்களில் குறைந்தபட்சம் ஒரு பூ 30 பைசாவுக்கு விற்பனையாகும். பண்டிகை, திருவிழா, முகூர்த்த நாட்களில் அதிகபட்சமாக ஒரு பூ ரூ.1.25 வரை விலை போகும். சராசரியாக 70 முதல் 80 பைசாவுக்கு விற்பனையாகும். தினமும் அதிகாலை 5 மணிக்கே எழுந்து பூ பறிக்கும் பணியில் ஈடுபடுவோம்.
பூந்தோட்டப் பராமரிப்புக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். மாதம் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். தற்போது பொங்கலைத் தொடர்ந்து முகூர்த்த நாட்கள், கோயில் திருவிழாக்கள் வருவதால் பன்னீர் ரோஜாவுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment