Published : 11 Nov 2024 05:56 PM
Last Updated : 11 Nov 2024 05:56 PM
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே நூற் றாண்டு பழமை வாய்ந்த ஜமீன் ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்ட கல்லறை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு மற்றும் திருப்பத்தூர் மாவட்டத் தொன்மைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த சமூக ஆர் வலர் ராதாகிருஷ்ணன், முத்தமிழ் வேந்தன் மற்றும் சந்திரசேகரன், மகேந்திரன் ஆகியோர் பல்வேறு இடங்களில் கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வாணியம்பாடியில் மேற்கொண்ட கள ஆய்வில், பழமை வாய்ந்த அழகிய கல்லறை ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தியாளரிடம் கல்லூரி உதவி பேராசிரியர் ஆ.பிரபு கூறும்போது, ‘‘திருப் பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தமிழகம்-ஆந்திர எல்லைப் பகுதியில், அதாவது வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை, பில்லூர் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாகத் நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வில், வாணியம்பாடி அருகே நாட் றம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள மண்ணாற்றின் கரையோரம் ‘சமாதித்தோப்பு’ என்ற இடத்தில் சிதிலமடைந்த நிலையில் மாளிகை போன்ற அமைப்பு கொண்ட பழமையான கட்டிட அமைப்பு ஒன்றை நாங் கள் கண்டறிந்தோம்.
இந்த கட்டிடத்தினை குறித்து நாங்கள் ஆய்வு நடத்தியபோது, அது ஜமீன்தார்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஒரு கட்டிடம் என்பது தெரிகிறது. இப்பகுதியை ஆட்சி செய்த ஒரு ஜமீன்தார் தனது காதலியின் நினைவாகக் கட்டிய கல்லறை இதுவென்றும் அறிய முடிந்தது. ஜமீன்தார் தனது காதலியின் மறைவிற்குப் பிறகு அவர் நினைவாக மிகப்பெரிய அழகிய ஒரு கல்லறையினை எழுப்பி அதனைப் பராமரிப்பதற்கு அதனைச் சுற்றிய நிலங்களைத் தானமாக வழங்கிய செய்தியை யும் இதன் மூலம் அறிய முடிந்தது.
இந்த கல்லறையானது மண்ணாற்றின் கரையோரம் அழகிய வேலைப்பாடுகளுடன் வடிவ மைக்கப்பட்டுள்ளது. இரண்டு சுற்று கொண்ட வட்ட வடிவ அமைப்பில் கட்டிடம் அமைந்துள்ளது. வெளிப்புறத்தில் உள்ள வட்ட வடிவ மதில் சுவரில் எட்டு வாயில்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதன் உட்புறம் விளக்குகள் வைப்பதற்கு எட்டு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
கிழக்குத் திசையை நோக்கிய நிலையில் வாயில் காணப் படுகிறது. உட்புறம் புதைக் கப்பட்ட இடத்தில் கல்லறை இருந்துள்ளது. ஒரு காலத்தில் அக்கல்லறையை மட்டும் இடித்துச் சமப்படுத்தியுள்ளனர். கட்டிடத்தின் உட்புறம் ஜன்னல் ஒன்றும், மேற்புறம் இரண்டடுக்குக் கோபுரங்கள் இருந்துள்ளன. தற் போது ஒரு அடுக்கு மட்டுமே காணப்படுகிறது.
வெளிப்புறத்தில் அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வண்ணம் பூசியதற்கான தடயங் கள் உள்ளன. தற்போது தனியா ருக்குச் சொந்தமான அவ்விடத் தில் ஆடு, மாடுகளை அடைத்து வைப்பதற்கு இக்கல்லறையினை பயன்படுத்தி வருகின்றனர். வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் இப்பகுதியானது ‘கங்குந்தி ஜமீன்’ எல்லைக்கு உட்பட்டதாகும். ஜமீன் ஆட்சியில் கடைசியாக இப்பகுதியினை ஆட்சி செய்தவர் ‘வேங்கடபதி நாயணகாரு’ என்ற ஜமீன்தார் ஆவார்.
இவர், கடந்த 1915-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்ததற்கான சான்றுகள் இங்கு உள்ளன. திம்மாம்பேட்டையில் காணப்படும் கல்லறை மாளிகையின் வரலாறு ‘வேங்கடபதி நாயணகாரு’ என்ற ஜமீன் தாரின் ஆட்சிக்காலத்தோடு ஒத்துப்போவது குறிப்பிடத் தக்கதாகும். பெரும்பாலும் தமிழர் நிரம்பிய பகுதியான கங்குந்தி இன்று ஆந்திர மாநிலத்தில் உள்ளது. அமைதியான ஆற்றங் கரையில் அழிவின் விளிம்பில் காதலைப் பறை சாற்றியபடி வரலாற்றின் மிச்சமாய் நிற்கிறது இக்காதல் சின்னம்.
தொல்லியல் ஆய்வுகளைப் பொருத்தமட்டில் 100 ஆண்டுகளுக்கு முற்பட்டவைகளை தொல்லியல் சின்னங்களாகவும் வரலாற்றுச் சான்றுகளாகவும் பாவிக்கப்படும் அந்த வகையில் இக்கல்லறையும் ஒரு வர லாற்றுச் சான்றாகத்தான் பார்க்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment