Published : 29 Sep 2024 05:00 AM
Last Updated : 29 Sep 2024 05:00 AM

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது அவசியம்: உலக இதய தினத்தையொட்டி மருத்துவர் வினோத்குமார் அறிவுறுத்தல்

சென்னை: ‘இதயம் சார்ந்து செயல்பட்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்’ என மருத்துவர் பா.வினோத்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

உலக இதய தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 29-ம் தேதி (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் சீனியர் கன்சல்டன்ட் - இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் மருத்துவர் பா.வினோத்குமார் கூறியதாவது:

உலக இதய தினத்தின் இந்த ஆண்டின் கருப்பொருள் ‘இதயம் சார்ந்து செயல்படுங்கள்’ என்பதாகும். இதய ஆரோக்கியம் என்பது மருத்துவ ரீதியிலான பொறுப்பு மட்டுமல்ல. நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தினால், இதய நோய்களைத் தவிர்க்க முடியும். ‘இதயம் சார்ந்து செயல்படுங்கள்’ என்பதற்கான முக்கியமான ஒரு வழி என்னவென்றால், உங்கள் வாழ்க்கை முறையை நீங்கள்தான் கவனிக்க வேண்டும் என்பதாகும்.

உங்கள் இதயம் நீரழிவு நோய்கள், முறையற்ற உணவு, உடற்பயிற்சி இன்மை, மன அழுத்தம் மற்றும் புகைபிடித்தல் போன்ற காரணங்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கலாம் அல்லது அதிகரிக்கலாம். எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காக செயலில் இறங்குங்கள்.

நீங்கள் உண்ணும் உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், குறைவான கொழுப்பு உள்ள புரதங்கள் இருக்க வேண்டும். துரித உணவுகள், அளவுக்கு அதிகமான உப்பு போன்றவைகளை தவிர்க்க வேண்டும். தினமும் 30 நிமிடங்கள் நன்றாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். சுலபமான நடைபயிற்சி, மிதமான சைக்கிள் ஓட்டுதல் போன்றவை இதயத்துக்கு நன்மையைத் தரும். நீண்டகாலமான மன அழுத்தம் இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும்.

சுவாச பயிற்சிகள்: தியானம், யோகா மற்றும் ஆழமான சுவாச பயிற்சிகளைச் செய்து மனதை அமைதியாக்கலாம். புகைபிடித்தல் இதய நோய்க்கு முதன்மையான காரணமாக அமைகிறது. இதய நோய்களுக்கான ஒரு நபருக்கு பொருந்தும் மருந்து, மற்றவருக்குப் பொருந்தாது. சில சமயங்களில் அது ஆபத்தானதாகவே முடியும். மற்றவர்களுடன் மருந்துகளைப் பகிர்வது தீவிர சிக்கல்களை ஏற்படுத்தலாம். எனவே, மருந்துகளை மாற்றுவதற்கு முன்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

முன்னெச்சரிக்கையான பரிசோதனை எப்போதும், சிகிச்சை பெறுவதைவிட சிறந்தது. இதயநோய்களை தடுப்பதற்கான முக்கியமான வழி, தொடக்க கட்டத்திலேயே அதை கண்டறிதலாகும். உயர்ந்த ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு போன்றவை இதய நோய்களின் ஆரம்ப கட்ட அறிகுறிகளைக் காட்டாமல் இருக்கும். அதிகமான ரத்த அழுத்தம் குணமற்ற நோயாகும். அதை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.

ரத்த சர்க்கரை கண்காணிப்பு: அதிகமான கொழுப்பு, இதய நோய்க்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரு எளிய ரத்த பரிசோதனை இதய ஆரோக்கியத்துக்கான தகவல்களை வழங்கும். நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. எனவே, ரத்த சர்க்கரையை கண்காணிக்க வேண்டும்.

உங்களுக்கான ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் இதய ஆரோக்கியத்தைப் பற்றி சமூக அக்கறையுடன் அறிவுறுத்த வேண்டியது அவசியமாகும். ஒருவரது வாழ்க்கைமுறையை எவ்வாறு இதயத்தைப் பாதிக்கிறது என்பதை சிலர் அறிந்திருக்காமல் இருப்பார்கள். இதய ஆரோக்கியத்தை பற்றிய தகவல்களை உங்கள் குடும்பத்தினருக்கும், சமூகத்துக்கும் பகிர்ந்து, நல்ல பழக்கங்களை ஊக்குவியுங்கள்.

இதய நோய் அறிகுறிகள்: நெஞ்சு வலி அல்லது சிரமம், சுவாசமின்மை, கழுத்து, தாடை, முதுகு அல்லது கைகளைச் சுற்றிய வலி, மயக்கம் அல்லது வாந்தி வருதல், அசாதாரணமாக வியர்வை போன்றவை இதய நோய்க்கான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். ஒவ்வொரு நபரும் ஒரே மாதிரி அல்ல. அதுபோல் இதய ஆரோக்கியமும் ஒரே மாதிரி இருக்காது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

இதய ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வது தனிப்பட்ட பயணமாகும். அதற்கேற்ப உங்கள் மருத்துவரிடம் இருந்து தனிப்பட்ட சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் பெற வேண்டும். ஆரோக்கியமான இதயத்துக்காக, இந்த உலக இதய நாளில், இதயம் சார்ந்து செயல்பட்டு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். இவ்வாறு மருத்துவர் பா.வினோத்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x