Published : 22 Jun 2024 07:05 PM
Last Updated : 22 Jun 2024 07:05 PM

3 அடி உயர பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்: தி.மலை அரசு மருத்துவர்கள் சாதனை

பிரசவத்துக்கு பிறகு குழந்தை மற்றும் ராஜேஸ்வரியுடன் மருத்துவக் குழுவினர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக பிரசவம் பார்த்து, மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலஸ்தாம்பாடி கிராமத்தில் வசிப்பவர் டிராக்டர் ஓட்டுநர் சக்திவேல் (23). இவரது மனைவி ராஜேஸ்வரி (22). இவர்களுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. கர்ப்பிணியான ராஜேஸ்வரி, செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்கு சென்று வந்துள்ளார். இவர், 3 அடி உயரமே இருந்ததால், பிரசவத்தில் சிக்கல் ஏற்படக் கூடும் என கருதிய மருத்துவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரை செய்துள்ளார்.

அதன்பேரில், அங்கு அவருக்கு தொடர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 10-வது மாதத்தில் பிரசவம் என்பது, இருவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்பதால், முன்கூட்டியே அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க மருத்துவக் குழுவினர் முடிவு செய்தனர். இது தொடர்பான விவரங்களை, ராஜேஸ்வரியின் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு தெளிவாக எடுத்துரைத்து, சம்மதம் பெற்றனர். இதையடுத்து, ராஜேஸ்வரிக்கு கடந்த 19-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இது குறித்து மகப்பேறு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜெயந்தி கூறும்போது, "3 அடி உயரம் உள்ள பெண்களுக்கு குழந்தை பேறு என்பது கடிமானது. சாதாரண உயரம் உள்ள பெண்களை போன்று அவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்காது. அப்படியிருக்கையில் ராஜேஸ்வரி கருவுற்றது அதிசயமானது. இவருக்கு பிரசவம் பார்ப்பது சவால் நிறைந்தது. உயரம் குறைவாக உள்ளதால் வயிறு விரிவடையாது, இடுப்பு எலும்பும் ஒத்துழைக்காது. இதனால் ராஜேஸ்வரிக்கு, தொடர்ச்சியான வலி இருந்தது.

பிரசவத்துக்கு முன்பு மருத்துவர்களுடன் ராஜேஸ்வரி.

இவருக்கு 10-வது மாதம் வரை காத்திருந்து, சுக பிரசவத்துக்கு வாய்ப்பு கிடையாது என்பதால், 8-வது மாதம் முடிந்து 9-வது மாதம் தொடக்கத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம். குறை பிரசவத்தில் குழந்தை பிறக்கும்போது நுரையீரல் வளர்ச்சி இருக்காது. மூச்சுத் திணறல் ஏற்படும். இந்நிலை ஏற்படாமல் தடுக்க, 2 வாரத்துக்கு முன்பு, அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்து தொடர் சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தோம். குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க, ராஜேஸ்வரிக்கு 2 பிரத்யேக ஊசி செலுத்தப்பட்டது.

இதன்மூலம் குழந்தையின் சுவாசம் சீராக இருப்பதை உறுதி செய்தோம். உயரம் குறைவாக உள்ளதால், அறுவை சிகிச்சையின் போது வழக்கமான முறையில், அவருக்கு மயக்க மருந்து செலுத்த முடியாது. மாற்று முறையில் மயக்க மருந்து செலுத்த முடிவானது. இதையடுத்து ராஜேஸ்வரிக்கு கடந்த 19-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. சிசுவின் எடை 2.200 கிலோ கிராம். இப்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்” என்றார்.

மயக்கவியல் துறை தலைவரும் பேராசியருமான பாலமுருகன் கூறும்போது, “அறுவை சிகிச்சைக்காக நோயாளிக்கு முதுகு தண்டில் மயக்க மருந்து செலுத்தப்படும். இதுபோன்று உயரம் குறைவாக உள்ள நபர்களுக்கு செலுத்த முடியாது. அவ்வாறு செலுத்தினால், அவரது நுரையீரல் மற்றும் மூலையில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, 3 அடி உயரம் உள்ள ராஜேஸ்வரிக்கு “EPIDURAL” முறையில், மயக்க மருந்து செலுத்த முடிவு செய்தோம். அதன்படி, அறுவை சிகிச்சையின் போது, அவருக்கு EPIDURAL முறையில் மயக்க மருந்து செலுத்தப்பட்டது. இப்பணியில் நானும், மருத்துவர்கள் சரவணகுமரன், பாலகிருஷ்ணா, ஆனந்த ராஜ் ஆகியோர் ஈடுபட்டோம்.

குறைந்தளவில் மயக்க மருந்து படிப்படியாக செலுத்தப்பட்டது. இதன் பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில், ராஜேஸ்வரிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மயக்க மருந்தின் தாக்கம் 2 நாட்களுக்கு இருக்கும் என்பதால், அவருக்கு வலி இருக்காது. 6 நாட்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். திங்கள்கிழமை (24-ம் தேதி) அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். உயரம் குறைவாக உள்ள பெண்ணுக்கு மயக்க மருந்து செலுத்தி, அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் என்பது சவாலானது. இது எங்களுக்கு முதல் அனுபவம்” என்றார்.

3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரசவம் பார்த்த மருத்துவக் குழுவினரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஹரிஹரன், கண்காணிப்பாளர் மாலதி, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் கதிர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x