Published : 16 Sep 2023 05:31 PM
Last Updated : 16 Sep 2023 05:31 PM

மதுரையிலிருந்து வெளிநாடு செல்லும் நாய் குட்டிகள்: தொழில்முனைவோராக சாதித்து வரும் இளைஞர்

மதுரை: வெளிநாடுகளில் இருந்து செல்லப்பிராணியான நாய் குட்டிகளை இறக்குமதி செய்த காலம்போய், தற்போது தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு நாய் குட்டிகளை ஏற்றுமதி செய்யும் காலம் திரும்பியுள்ளது.

சமீப காலமாக செல்லப் பிராணிகளைச் சுற்றி உருவாகி வரும் வணிக வாய்ப்புகள் வியப்பு அளிப்பதாக கூறுகிறார் அண்மையில் நாய் வளர்ப்புத் தொழிலில் சிறந்த தொழில் முனைவோருக்கான கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற மதுரை புதுவிளாங்குடி கணபதி நகரைச் சேர்ந்த கே.மணிசங்கர் (29).

அண்மையில் இவர் இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிப்போருக்கு லேப்ரடார் நாய் குட்டிகளை விற்றார். வெளிநாட்டுக்கு நாய்களை விற்கும் தொகையைவிட அதனை ஏற்றுமதி செய்வதற்கான தொகை அதிகம் என்பதால்தான் நேரடியாக ஏற்றுமதி செய்யவில்லை என்கிறார். மேலும், இந்த நாய்கள் வெளிநாட்டு ரகங்களாக இருந்தாலும் இதன் விலை வெளிநாடுகளில் அதிகம்.

இதனால், வெளிநாடுகளில் வசிக்கும் நம் நாட்டைச் சேர்ந்தோர் தமிழகம் வரும்போது அவர்களுக்கு நாய்களை விற்கிறார். அவர்கள், இங்கிருந்து நாய்களை கொண்டு செல்லும் செலவை ஏற்றுக் கொள்கின்றனர்.

‘வாட்ஸ் அப்’பில் இவர் பதிவிடும் வெளிநாட்டு ரக நாய்கள் ஓரிரு நாளில் விற்று தீர்ந்து விடுகின்றன. அதற்குக் காரணம், இவர் விற்பனை செய்யும் வெளிநாட்டு வகை நாய் குட்டிகளுடைய மூதாதையர், அதற்கான சான்றிதழ்களை வைத்திருப்பதுதான் முக்கியக் காரணம்.

இதுவரை 6,000 வெளிநாட்டு நாய்களை விற்று இந்தத் தொழிலில் சிறந்த தொழில்முனைவோராக சாதிக்கத் தொடங்கியுள்ளார். இதற்காக, இந்தத் துறை சார்ந்த நிறுவனங்களிடம் பல விருதுகளைப் பெற்றுள்ள இவரை, சமீபத்தில் சென்னை மயிலாப்பூரில் ‘குளோபல் ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டி’ சிறந்த தொழில் முனைவோருக்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

கவுரவ டாக்டர் பட்டம் பெறும் மணிசங்கர்.

இது குறித்து மணிசங்கர் கூறியதாவது: மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்வது வரம். அந்த வரம் எனக்கு நாய்களை இனப்பெருக்கம் செய்து வளர்த்து விற்பனை செய்யும் தொழில் மூலமாகக் கிடைத்திருக்கிறது. வழக்கமாக மற்றவர்களைப் போல் நானும் பி.காம் படித்துவிட்டு பைக் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன்.

வீட்டில் 10 ஆண்டுகளாக லேப்ரடார் வளர்த்து வந்தேன். 2010-ம் ஆண்டு காலகட்டத்தில் நாய்க் குட்டிகளை விற்பனை செய்யும் தொழிலில் பெரிய போட்டியில்லை. எனக்கு நாட்டமில்லாத வேலையில் சலிப் படையவே, நாய் வளர்ப்பு தொழிலில் இறங்கினேன். முதலில் லேப்ரடார் நாய்க் குட்டிகளை இனப்பெருக்கம் செய்து விற்கத் தொடங்கி னேன். ஜெர்மன் ஷெப்பர்ட், ரோட்வீலர், பீகல் போன்ற சில வெளிநாட்டு ரக நாய் குட்டிகளையும் இனப்பெருக்கம் செய்து விற்கிறேன்.

ஆனால், அதில் நேர்த்தியான, கலப்பட இனமில்லாத பெற்றோரை கொண்ட வெளிநாட்டு நாய்களை வாங்கு வது முக்கியம். அதனால், நாய் வாங்குவோர் அதன் மூதாதையர் வரலாறு, அதற்கான சான்று, பெற்றோரின் ஆரோக்கியம் போன்றவற்றைப் பார்த்து வாங்க வேண்டும். தற்போது இந்தத் தொழிலில் இளைஞர்கள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்குக் காரணம், பெரும்பாலும் நாய் வளர்ப்பு, வசதி படைத்தவர்களின் விருப்பமாக உள்ளதுதான். மனதளவில் துவண்டுபோய் இருக்கும் ஒருவருக்கு செல்லப்பிராணிகள் ஆறுதலாக இருக்கும். நாய் விற்பனையோடு, நாய் வளர்ப் போர் வெளியூர் செல்வதாக இருந்தால் அதை என்னிடம் ஒப்படைத்தால் பாது காப்பாக பராமரிக்கும் வேலையையும் செய்கிறேன், என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x