Published : 26 Jul 2023 02:52 PM
Last Updated : 26 Jul 2023 02:52 PM

'லோன் வேண்டுமா சார்?' என போனில் கேட்ட வங்கி பிரதிநிதியிடம் ரயில் வாங்க ரூ.300 கோடி கோரிய நபர்!

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: ‘உங்களுக்கு லோன் வேண்டுமா சார்?’ என சொல்லி தொலைபேசி அழைப்பில் பேசிய வங்கி தரப்பு பிரதிநிதிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் சாமானியர் ஒருவர். ரயில் வாங்க வேண்டி தனக்கு 300 கோடி ரூபாய் தேவைப்படுவதாக வேடிக்கையாக அதற்கு அவர் பதில் சொல்லியுள்ளார்.

இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் ‘லோன் வேண்டுமா?’ என போனில் அழைப்புகளை நிச்சயம் ரிசீவ் செய்திருப்போம். அதற்கான பதிலாக சிலர் தங்களுக்கு லோன் வேண்டாம் என்றும், சிலரோ லோன் வேண்டும் என்றும் சொல்லி இருக்கலாம். சிலருக்கு ஓயாமல் வரும் இந்த அழைப்புகள் எரிச்சலையும் தரலாம். ஆனால், ‘லோன் வேண்டுமா சார்’ என தனது போனுக்கு வந்த அழைப்பில், தனக்கு 300 கோடி ரூபாய் வேண்டும் என மறுமுனையில் பேசிய நபர் சொன்னது, அந்த வங்கி பிரதிநிதி நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். இது குறித்த ஆடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

“சார், நான் நிஷா பேசுகிறேன். உங்களுக்கு லோன் வேண்டுமா?” என அழைப்பில் வங்கி பிரதிநிதி ஒருவர் பேசுகிறார். “ரயில் வாங்க வேண்டி எனக்கு 300 கோடி ரூபாய் கடன் வேண்டும்” என பதில் கொடுத்துள்ளார் அந்த சாமானியர். தொடர்ந்து, நீங்கள் இதற்கு முன்னர் கடன் வாங்கி உள்ளீர்களா என வங்கி பிரதிநிதி கேட்கிறார். ஹீரோ சைக்கிள் வாங்க 1,600 ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக அந்த நபர் சொல்ல ஆடியோ நிறைவடைகிறது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த ‘லவ் டுடே’ படத்தில் இதே போன்ற ஒரு காட்சி வரும். அதில் லோன் வேண்டுமா என கேட்கும் வங்கி பிரதிநிதியிடம் நாயகன் ஜாலியாக பேசுவார். அதுபோலவே இந்தச் சம்பவம் வேடிக்கையானதாக அமைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x