'மகா பெரியவர்' சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
'மகா பெரியவர்' சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

செங்கோல் வரலாற்றை நினைவுகூர்ந்த ‘மகா பெரியவர்’

Published on

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களிடம் ஆட்சி கைமாறியதில் செங்கோல் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு மிக முக்கியமானது. ஆனால், அது வரலாற்றில் முக்கிய அம்சமாக இடம் பெறவில்லை. கடந்த 1978-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, காஞ்சி சங்கரமட நிகழ்ச்சி ஒன்றில், இந்த செங்கோல் கதையை எடுத்துக் கூறினார் அப்போதைய காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இவர் ‘மகா பெரியவர்’ என அழைக்கப்பட்டார். இந்த கருத்து இவர் கடந்த 1994-ம் ஆண்டு முக்தி அடைந்தபின் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில் இடம் பெற்றது. அதன் பின்பு இது பற்றிய செய்திகளும், படங்களும் ஊடகங்களில் அதிகம் வெளியாயின. இது குறித்த கட்டுரை துக்ளக் இதழில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் வெளியானது.

இந்த கட்டுரையை பிரபல நடன கலைஞர் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினார். வரலாற்றில் மறைக்கப்பட்டு, மக்களுக்கு தெரிவிக்கப்படாத இந்த செங்கோல் வழங்கப்பட்ட புனிதமான வரலாற்று நிகழ்வை 2021-ம் ஆண்டு சுதந்திர தினத்தில் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். ஊடகங்களில் வெளியான செய்தியை மத்திய அரசு சரிபார்த்து, தற்போது செங்கோல் வழங்கப்பட்ட நிகழ்வை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in