Published : 23 May 2023 05:22 AM
Last Updated : 23 May 2023 05:22 AM

பிரபல மூத்த நடிகர் சரத்பாபு மறைவு - சென்னையில் இறுதிச்சடங்கு

நடிகர் சரத்பாபு

ஹைதராபாத்: தென்னிந்திய திரையுலகின் மூத்த நடிகர்களுள் ஒருவரான சரத்பாபு (71), உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

நடிகர் சரத்பாபு ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் ஆமுதாலவலசா எனும் ஊரில் கடந்த 1951-ம் ஆண்டு, ஜூலை 31-ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யம்பாபு தீக் ஷித். இவருக்கு கடந்த ஆண்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. செப்ஸிஸ் எனும் நோயால் சரத்பாபு பாதிக்கப்பட்டார்.

சென்னையில் சிகிச்சை பெற்ற இவர், பிறகு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறத் தொடங்கினார். இம்மாத தொடக்கத்தில் இவரது உடல்நிலை மோசம் அடைந்தது. எனினும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்ததை தொடர்ந்து நேற்று மதியம் 1.32 மணிக்கு சரத்பாபு காலமானார்.

போலீஸாக விருப்பம்: போலீஸ் அதிகாரியாக வேண்டும் என விரும்பிய சரத்பாபு நடிகரானார். 1973-ம் ஆண்டில் ராமராஜ்ஜியம் எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் காலடி பதித்தார். அதன் பின்னர் தமிழில், இயக்குநர் பாலசந்தர் மூலம் பட்டினப்பிரவேசம் எனும் திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என சுமார் 300 திரைப்படங்கள் வரை நடித்துள்ளார். முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து, சலங்கை ஒலி உள்ளிட்ட படங்களில் இவர்கதாநாயகர்களுக்கு சமமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார். இந்தப் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

மேலும் நினைத்தாலே இனிக்கும், உதிரிப்பூக்கள், சரணம் ஐயப்பா, நெற்றிக்கண், ஆளவந்தான், பாபா உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிவாஜி, கமல், ரஜினி, சிரஞ்சீவி என பல உச்ச கதாநாயகர்களுடன் இவர் நடித்துள்ளார்.

இவர் நடிகை ரமாபிரபாவை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். இதைத்தொடர்ந்து நடிகர் நம்பியாரின் மகள் சினேகாவை திருமணம் செய்து, பிறகு அவரையும்் விவாகரத்து செய்தார்.

சரத்பாபு காலமான செய்தி அறிந்ததும் தெலுங்கு திரையுலகில் அவரது நண்பர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மாலை 6 மணிக்கு அவரது உடல் ஹைதராபாத் ஃபிலிம் சேம்பருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஏராளமான ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில் இறுதிச்சடங்கு: சரத்பாபுவின் உடல் இரவு 8 மணியளவில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னையில் உள்ள அவரது வீட்டில் தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு, செவ்வாய்க் கிழமை மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x